பதிவு செய்த நாள்
06 அக்2019
23:53
இ -– காமர்ஸ் தளங்கள் சலுகைகளால் ஈர்க்கும் நிலையில், சைபர் குற்றவாளிகளின் கைவரிசையும் அதிகரித்திருப்பதால், ‘ஆன்லைன் ஷாப்பிங்’ பாதுகாப்பிலும், கவனம் செலுத்த வேண்டும்.
பண்டிகை காலத்தை முன்னிட்டு, அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட இ -– காமர்ஸ் நிறுவனங்கள், பல்வேறு தள்ளுபடி சலுகைகளை அளித்து, வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றன. கடந்த ஆண்டு, பண்டிகை காலத்தில், இ – -காமர்ஸ் தளங்களில், மொத்தம், 3 பில்லியன் டாலருக்கு பொருட்கள் வாங்கப்பட்டதாகவும், இந்த ஆண்டு, 20 மில்லியன் வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் பொருட்கள் வாங்குவர் என எதிர்பார்ப்பதாகவும், ரெட்சீர் கன்சல்டிங் அறிக்கை தெரிவிக்கிறது.
தீபாவளியை மையமாக கொண்ட பண்டிகை காலத்தில், இ- – காமர்ஸ் நிறுவனங்கள், தீவிர ஆர்வம் காட்டும் நிலையில், சைபர் குற்றவாளிகளும் கைவரிசை காட்ட, இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள முற்படுவதாக, வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.இணைய வசதிபல்வேறு வங்கிகள் மற்றும் நிதிநுட்ப நிறுவனங்களுடனான கூட்டால், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் பயன்பாடு, இந்த காலத்தில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், சைபர் குற்றவாளிகள் வலைவிரிக்க காத்திருக்கின்றனர்.
இவைத்தவிர, ‘டிஜிட்டல் வாலெட்கள்’ பயன்பாடும் அதிகரிக்க இருப்பது, குற்றவாளிகளுக்கு சாதகமாக அமைகிறது. மேலும், வாடிக்கையாளர்கள் மொபைல் போன்கள் மூலமாக ஷாப்பிங் செய்வதும், இடர்தன்மையை அதிகமாக்கியுள்ளது. எனவே, ஆன்லைன் ஷாப்பிங்கை பாதுகாப்பான முறையில் மேற்கொள்வதில், கவனம் செலுத்த வேண்டும் என்கின்றனர்.
ஆன்லைனில் பொருட்களை வாங்கும் வசதியை நாடும் முன், இணைய வசதியை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை கவனிக்க வேண்டும். வீட்டில், தனிப்பட்ட இணைய இணைப்பை பயன்படுத்த வேண்டும். பொது இடங்களில் உள்ள, வை-பை மைங்களின் இணைய வசதியை, ஷாப்பிங் செய்ய பயன்படுத்தக்கூடாது. இங்கு, சைபர் குற்றவாளிகள் அதிகம் புழங்குகின்றனர். வீட்டில், இணையத்தை பயன்படுத்தும் போது கூட, அதில் அணுகும் இணையதளங்கள் எஸ்.எஸ்.எல்., போன்ற பாதுகாப்பான அம்சங்கள் கொண்டிருக்க வேண்டும்.
மொபைல் போன்களில் இருந்து ஷாப்பிங் செய்யும் போதும் இணைய வசதியை அணுகும் விதம் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் போது, அது, எப்போதும் நாம் பயன்படுத்தும் வயர்லெஸ் இணைய வசதிகளை தேடி அடையாளம் காட்டும். செயலிகள் கவனம்இதை பயன்படுத்தி, சைபர் குற்றவாளிகள், தங்களது இணைப்பையும் அதில் தோன்றச் செய்து வலை விரிக்கலாம். எனவே, இல்லங்களில் உள்ள இணைய சாதனங்களின் எல்லையில் இருந்து விலகிச்செல்லும் போது, போனில், தானாக வை-பை இணைப்பை தேடும் வசதியை ஆப் செய்துவிடுவது நல்லது.
ஆண்ட்ராய்டு போன்கள், பரவலாக பயன்படுத்தப்படுவதால், சைபர் குற்றவாளிகள், அவற்றை அதிகம் குறி வைக்கின்றனர். இந்த நோக்கத்தோடு, போலி செயலிகளும் உருவாக்கப்படுகின்றன. புதிய செயலிகளை பயன்படுத்தும் போது, அவை அதிகாரபூர்வ செயலி தானா என்பதை, உறுதி செய்து கொள்வது அவசியம்.
அறிமுகம் இல்லாத இடங்களில் இருந்து மற்றும் வாட்ஸ் அப் போன்றவற்றில் வரும் இணைப்புகளில் உள்ள செயலிகளை தவிர்க்கவும்.அதே போல, அறிமுகமான இ- – காமர்ஸ் தளங்களில் பொருட்களை வாங்குவது நல்லது. கவர்ச்சிகரமான சலுகைகளுக்கு ஆசைப்பட்டு, தெரியாத தளங்களில் பொருட்களை வாங்கி ஆபத்தில் சிக்கிக்கொள்ளக் கூடாது.
தெரியாத தளங்கள் எனில், அவை பற்றிய தகவல்களை இணையத்தில் தேடிப்பார்த்து நம்பகத்தன்மையை உறுதி செய்து கொள்ளவும். பணம் செலுத்தும் வாய்ப்பையும் பரிசீலிக்கவும். வங்கி கணக்கில் இருந்து, நேரடியாக பணம் செலுத்தக்கோரும் தளங்களை தவிர்க்கவும். டெபிட் கார்டை விட, கிரெடிட் கார்டை பயன்படுத்தவும். கிரெடிட் கார்டில் மோசடி தடுப்பு வசதிகள் பல உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|