பதிவு செய்த நாள்
08 அக்2019
01:42
புதுடில்லி:ரிசர்வ் வங்கி, டிசம்பர் மாதத்தில், மீண்டும் ஒரு முறை வட்டி விகிதத்தை குறைக்கலாம் என, ’கோல்டுமேன் சாக்ஸ்’ நிறுவனம் தெரிவித்துஉள்ளது.அடுத்து, டிசம்பர் மாதத்தில் நடைபெற இருக்கும் நிதிக் கொள்கை குழு கூட்டத்தின் முடிவில், இன்னொரு வட்டி குறைப்பு அறிவிப்பை, ரிசர்வ் வங்கி வெளியிடலாம் என, அமெரிக்காவைச் சேர்ந்த, நிதிச் சேவை நிறுவனமான, ‘கோல்டுமேன் சாக்ஸ்’ தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் மேலும் தெரிவித்துஉள்ளதாவது:கடந்த, 4ம் தேதியன்று, ரிசர்வ் வங்கி, அதன் நிதிக் கொள்கை குழு கூட்டத்தின் முடிவில், 0.25 சதவீதம் அளவுக்கு வட்டியை குறைத்து அறிவித்தது. இதையடுத்து, வட்டி விகிதம், 5.15 சதவீதமாக குறைந்துள்ளது.
இந்நிலையில், வளர்ச்சியை மீண்டும் ஏற்படுத்தும் வரை, பணவீக்க மானது இலக்குக்குள் இருப்பதை உறுதி செய்ய வேண்டியதிருக்கிறது எனவும், அதற்கு, ‘இசைந்து செல்லும்’ நிலைப்பாட்டை எடுக்கவிருப்பதாகவும், ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.வாய்ப்புஇதையடுத்து, ரிசர்வ் வங்கியானது, அடுத்த நிதிக் கொள்கை கூட்டத்திலும் வட்டி விகிதத்தை மேலும், 0.25 சதவீதம் குறைத்து, 4.9 சதவீதம் என்ற நிலைக்கு கொண்டு வரும் என கருதுகிறோம்; இதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக எண்ணுகிறோம்.அமெரிக்க மத்திய வங்கியும், இம்மாதம் வட்டி விகிதத்தை மேலும் குறைக்கும் என்று நாங்கள் கருதுகிறோம்.இந்தியாவை பொறுத்தவரை, சில்லரை விலை பணவீக்கம், 4 சதவீதத்துக்கு அருகில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையில், டிசம்பர் மாத கூட்டத்துடன், வட்டி விகித குறைப்பு நிறுத்தப்படும் என எதிர்பார்க்கிறோம்.அதேசமயம், பணவீக்கம், 4 சதவீதத்தை தாண்டினால், மேற்கொண்டு எந்த வட்டிவிகித குறைப்பும் இல்லாமல் போவதற்கும் வாய்ப்பிருக்கிறது.இவ்வாறு கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பற்றாக்குறை
ரிசர்வ் வங்கி, கடந்த, 4ம் தேதியன்று, ஐந்தாவது முறையாக வட்டி விகித குறைப்பை அறிவித்தது. நடப்பு ஆண்டில் இதுவரை, 1.35 சதவீதம் அளவுக்கு வட்டி குறைப்பு செய்துள்ளது, ரிசர்வ் வங்கி.இந்நிலையில், ஐ.டி.எப்.சி., மியூச்சுவல் பண்டு நிறுவனம், ‘நடப்பு ஆண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 3.3 சதவீதமாக நிதிப் பற்றாக்குறை இலக்கு உள்ளது. இதில், 0.4 சதவீதம் அளவுக்கு சரிவு காண வாய்ப்புள்ளது’ என தெரிவித்துஉள்ளது.
இந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:நிதிச் சந்தை நிலவரங்கள் நிச்சயமற்றதாக உள்ளன. உலகளவிலான மத்திய வங்கிகள், வட்டி குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.இன்னும் சில காலத்துக்கு, 5 சதவீதத்துக்குள்ளாகவே வட்டி விகிதம் தொடரும் நிலையே உள்ளது.இவ்வாறு, ஐ.டி.எப்.சி., நிறுவனம் தெரிவித்து உள்ளது.
ரிசர்வ் வங்கியானது, அடுத்த நிதிக் கொள்கை கூட்டத்திலும் வட்டி விகிதத்தை மேலும், 0.25 சதவீதம் குறைத்து, 4.9 சதவீதம் என்ற நிலைக்கு கொண்டு வரும்.கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம்
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|