பதிவு செய்த நாள்
13 அக்2019
00:19
புதுடில்லி:மியூச்சுவல் பண்டு திட்டங்களிலிருந்து, கடந்த செப்டம்பர் மாதத்தில், 1.5 லட்சம் கோடி ரூபாயை, முதலீட்டாளர்கள் திரும்ப பெற்றுள்ளனர்.
இது குறித்து, இந்திய மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் சங்கமான, ’ஏ.எம்.எப்.ஐ.,’ தெரிவித்து உள்ளதாவது:கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும், மியூச்சுவல் பண்டு திட்டங்களிலி ருந்து, முதலீட்டாளர்கள், 1.5 லட்சம் கோடி ரூபாயை திரும்ப பெற்று உள்ளனர்.
கடன் நெருக்கடி
கடந்த ஆகஸ்ட் மாதத்தில், 1.02 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருந்த நிலையில், செப்டம்பரில், ரூ. 1.5 லட்சம் கோடிவெளியில் எடுக்கப்பட்டுள்ளது.சமீபத்திய மாதங்களில், ஐ.எல்., அண்டு எப்.எஸ்., திவான் ஹவுசிங் பைனான்ஸ் கார்ப்பரேஷன் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் ஏற்பட்டிருக்கும் கடன் நெருக்கடிகளை அடுத்து, மியூச்சுவல் பண்டு அதிக அழுத்தத்தை சந்தித்து வருகிறது.
கடந்த மாதத்தில், மியூச்சுவல் பண்டு திட்டங்களிலிருந்து, 1.52 லட்சம் கோடி ரூபாய் திரும்ப பெறப்பட்டுள்ளது. குறிப்பாக, கடன் திட்டங்களிலிருந்து அதிக அளவு பணம் வெளியேறி உள்ளது.மாறாக, பங்கு சார்ந்த திட்டங்களிலும், தங்க, இ.டி.எப்., திட்டங்களிலும், மதிப்பீட்டு காலத்தில் புதிய முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன.கடந்த மாதத்தில், பங்கு சார்ந்த திட்டங்களில், 6,489 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.இருப்பினும், ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது, இது மிகவும் குறைவு.
சொத்து மதிப்பு
கடந்த ஆகஸ்ட் மாதத்தில், பங்கு சார்ந்த திட்டங்களில், 9,090 கோடி ரூபாய் முதலீடு செய்யப் பட்டு உள்ளது.இதேபோல், கடந்த ஆகஸ்ட் மாதத்தில், தங்க, இ.டி.எப்., திட்டத்தில், 145 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருந்த நிலையில், செப்டம்பர் மாதத்தில், ரூ.44 கோடிமட்டுமே முதலீடு செய்யப்பட்டு உள்ளது.
கடன் சார்ந்த திட்டங்களிலிருந்து முதலீடுகள் வெளியேறியதால், மியூச்சுவல் பண்டு துறையின் சொத்து மதிப்பு, 4 சதவீதம் குறைந்து, 24.51 லட்சம் கோடி ரூபாயாக செப்டம்பர் மாதத்தில் குறைந்துவிட்டது. இதுவே, ஆகஸ்ட் மாதத்தில், 25.47 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு, ‘ஏ.எம்.எப்.ஐ.,’ தெரிவித்துஉள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|