பதிவு செய்த நாள்
24 அக்2019
03:59
புதுடில்லி: ‘எளிதாக தொழில் புரிதல்’ குறித்த ஆய்வறிக்கை தயாரிப்புக்காக கோல்கட்டா, பெங்களூரு ஆகிய இரு நகரங்களையும் சேர்க்க உள்ளது, உலக வங்கி.உலக வங்கி, ‘எளிதாக தொழில் புரிதல்’ குறித்த ஆய்வறிக்கையை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
இந்த ஆய்வறிக்கை, 190 நாடுகள் குறித்து ஆய்வு செய்து, வெளியிடப்படுகிறது.இந்தியாவில் இதுவரை, டில்லி, மும்பை ஆகிய இரு நகரங்கள் மட்டுமே ஆய்வுக்காக எடுக்கப்பட்டு வந்தன. இப்போது, கோல்கட்டா, பெங்களூரு ஆகிய இரண்டு இடங்களும் ஆய்வுக்காக சேர்க்கப்பட உள்ளன.உலக வங்கியின் இந்த ஆய்வறிக்கையின் மூலம், ஒரு நாட்டின் வணிகச் சூழல் என்ன நிலையில் இருக்கிறது என்பதை எளிதில் அறிந்துகொள்ளலாம்.
190 நாடுகளில், பத்து விதமான பிரிவுகளில், உலக வங்கி ஆய்வை மேற்கொள்கிறது.தொழில் துவங்குவது, கட்டுமான அனுமதி, மின் இணைப்பு கிடைப்பது, கடன் கிடைப்பது, வரி செலுத்துவது, எல்லைகளை கடந்து வர்த்தகம் புரிவது, ஒப்பந்தங்களை செயல்படுத்துவது, திவால் உள்ளிட்ட பத்து பிரிவுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.இந்நிலையில், இந்தியாவின் தரப்பில் மேலும் இரு நகரங்கள் ஆய்வுக்காக சேர்க்கப்பட உள்ளன. இது குறித்து உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:இந்தியா மிகப்பெரிய நாடு. எனவே அங்குள்ள இரு இடங்களில் செய்யும் ஆய்வு மட்டுமே அதை தீர்மானிப்பதற்கு போதுமானதாக இல்லை. இப்போது கோல்கட்டா, பெங்களூரு ஆகிய இரு இடங்களையும் சேர்ப்பதால், உலக வங்கியின் தர வரிசை பட்டியலில் இந்தியாவின் நிலை மேலும் சிறந்த அளவில் தெரியவரும்.இந்த இரு இடங்களையும் சேர்ப்பதற்கான பணிகள் ஏற்கனவே துவங்கப்பட்டு விட்டன. வரும் ஆண்டுகளில், இந்த நகரங்கள் சேர்க்கப்பட்டு விடும்.இவ்வாறு, அந்த அதிகாரி தெரிவித்தார்.வரும், ‘2020ம் ஆண்டில் தொழில் புரிவது’ குறித்த ஆண்டு ஆய்வறிக்கையை இன்று உலக வங்கி வெளியிட உள்ளது.தரவரிசை பட்டியலில், இந்தியா தற்போது, 77வது இடத்தில் இருக்கிறது. புதிய பட்டியலில், இந்தியா மேலும் முன்னேறி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.உலக வங்கியின் பட்டியலில்,
இந்தியா கடந்த ஆண்டு, 23 இடங்கள் முன்னேறி, 77வது இடத்தை கைப்பற்றியது என்பதும் குறிப்பிடத்தக்கது. வரி விவகாரங்கள், திவால் சட்டம் உள்ளிட்டவற்றில் செய்யப்பட்ட மாற்றங்களால், இந்தியா, 23 இடங்கள் முன்னேறியது.இதுவே, 2018ம் ஆண்டில், 100வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. 2019வது ஆண்டு அறிக்கையில், 10ல் 6 பிரிவுகளில் இந்தியா முன்னேற்றம் கண்டிருப்பதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மொத்தம், 190 நாடுகள் கொண்ட பட்டியலில், நியூசிலாந்து முதலிடத்திலும் அதை தொடர்ந்து, சிங்கப்பூர், டென்மார்க், ஹாங்காங் ஆகிய நாடுகளும் இடம்பெற்றுள்ளன.அமெரிக்கா, 8வது இடத்திலும், சீனா, 46 வது இடத்திலும் தற்போது உள்ளன. அண்டை நாடான பாகிஸ்தான், 136வது இடத்தில் உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|