பதிவு செய்த நாள்
01 நவ2019
03:36
மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண், சென்செக்ஸ் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று உயர்ந்து, புதிய சாதனை படைத்துள்ளது.நேற்று நடைபெற்ற வர்த்தகத்தில், வர்த்தகத்தின் இடையே இதுவரை இல்லாத உயரமான, 40392.22 புள்ளிகளை தொட்டு சாதனை படைத்துள்ளது சென்செக்ஸ்.
இருப்பினும், வர்த்தகத்தின் முடிவில், 77 புள்ளிகள் அதிகரித்து, 40129.05 புள்ளிகளில் நிலை பெற்றது.தகவல் தொழில்நுட்பம் மற்றும் வங்கிகள் துறையை சேர்ந்த பங்குகள் ஏற்றம் கண்ட காரணத்தினால், பங்குச் சந்தைகள் உயர்வை சந்தித்தன.நிப்டிதேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண், நிப்டி, 33.35 புள்ளிகள் அதிகரித்து, 11877.45 புள்ளிகளில் நிலைபெற்றது.நேற்று நடைபெற்ற வர்த்தகத்தில், அதிக லாபம் ஈட்டியது, யெஸ் பேங்க் பங்குகளாகும். 24.03 சதவீதம் அளவுக்கு இந்நிறுவன பங்குகள் உயர்வை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.இந்நிறுவனத்திற்கு, 8,500 கோடி ரூபாய் முதலீடு கிடைத்திருப்பதால், அதன் பங்குகள் இந்த உயர்வை கண்டன. இது பங்கு சந்தைகளின் ஏற்றத்துக்கும் துணை புரிந்தது.மேலும் எஸ்.பி.ஐ., இன்போசிஸ், டாடா மோட்டார்ஸ், பார்தி ஏர்டெல், எச்.சி.எல்., டெக், எச்.டி.எப்.சி., ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை, 7.69 சதவீதம் வரை உயர்ந்தது.இதற்கு மாறாக, டெக் மகிந்திரா, ஆக்சிஸ் பேங்க், டாடா ஸ்டீல், மகிந்திரா அண்டு மகிந்திரா, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை, 2.09 சதவீதம் வரை சரிவை கண்டன.முதலீடுகாலாண்டு முடிவுகள் பெரும்பாலும் நன்றாக இருந்தது, பண்டிகை காலத்தை ஒட்டி நுகர்வோர் தேவை அதிகரித்தது, பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் ஆகிய காரணங்கள், சந்தை புதிய சாதனையை படைக்க உதவிகரமாக இருந்ததாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்ய துவங்கி இருப்பது, பங்கு முதலீட்டாளர்கள் மீதான வரியை அரசு மறுசீரமைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஆகிவையும் ஏற்றத்துக்கு உதவி உள்ளன.கடந்த புதன் கிழமையன்று, அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள், 7,192 கோடி ரூபாயை சந்தையில் முதலீடு செய்துள்ளனர். உள்நாட்டு முதலீட்டாளர்கள், 186 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளனர்.அமெரிக்க மத்திய வங்கியின் வட்டிகுறைப்பு முடிவும், சந்தையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|