பதிவு செய்த நாள்
02 நவ2019
23:51
புதுடில்லி:நாட்டின் ரியல் எஸ்டேட் துறையில், தனியார் பங்கு முதலீடு, 19 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
நடப்பு ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், ரியல் எஸ்டேட் துறையில், தனியார் பங்கு முதலீடு, 19 சதவீதம் அதிகரித்து, 39 ஆயிரத்து, 182 கோடி ரூபாயை எட்டியிருப்பதாக, சொத்து ஆலோசனை நிறுவனமான, ‘குஷ்மேன் அண்டு வேக்பீல்டு’ தெரிவித்துள்ளது.
அலுவலக சொத்துக்கள்
வெளிநாட்டு முதலீட்டாளர்கள், தொடர்ந்து, வணிக ரீதியான சொத்துக்களில் முதலீடு செய்வது இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாகவும், இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில், ரியல் எஸ்டேட் துறையில், தனியார் பங்கு முதலீடுகள், 32 ஆயிரத்து, 890 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.இது குறித்து, குஷ்மேன் அண்டு வேக்பீல்டு நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
நடப்பு ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், அலுவலக சொத்துக்களில், தனியார் பங்கு முதலீடு, 20 ஆயிரத்து, 757 கோடி ரூபாய். இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இது, 18 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டில் இதே காலத்தில், 17 ஆயிரத்து, 535 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருந்தது.
குடியிருப்பு பிரிவில், எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப, மதிப்பீட்டு காலத்தில் முதலீடு குறைந்து உள்ளது. இக்காலகட்டத்தில், 6,255 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது, 24 சதவீதம் குறைவாகும். கடந்த ஆண்டில், 8,280 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருந்தது.
ரியல் எஸ்டேட் சில்லரை பிரிவில், முதலீடு இரு மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில், 1,988 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருந்த நிலையில், மதிப்பீட்டு காலத்தில், 4,800 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது இரு மடங்குக்கும் அதிகமாகும்.விருந்தோம்பல் பிரிவில், மதிப்பீட்டு காலத்தில் முதலீடு இரு மடங்கு அதிகரித்து, 3,950 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதுவே, முந்தைய ஆண்டில், 2,025 கோடி ரூபாயாக இருந்தது.
வாடகை வருமானம்
கிடங்குகள் உள்ளிட்ட தொழில் துறை பிரிவுகளில் முதலீடு, 91 சதவீதம் அதிகரித்து, 1,971 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே கடந்த ஆண்டில், 1,030 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
இவை தவிர, கலப்பு பயன்பாட்டு பிரிவில், தனியார் பங்கு முதலீடு, 29 சதவீதம் சரிந்துள்ளது. நடப்பாண்டில், 1,450 கோடி ரூபாய் முதலீடு இப்பிரிவில் வந்துள்ளது. இதுவே கடந்த ஆண்டில், 2,032 கோடி ரூபாயாக இருந்தது.மொத்தத்தில் அலுவலகம், கிடங்கு, சில்லரை ஆகிய பிரிவுகளில் முதலீட்டாளர்கள் அதிகளவில் ஈடுபாடு கொண்டுள்ளனர்.
வாடகை வருமானம் அதிகம் தரும் அலுவலக சொத்துக்களில், தேவை அதிகரிப்பு காரணமாக, அதிகளவு முதலீடு செய்யப்படுகிறது. இது, வரும் காலத்தில் மேலும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, 19 சதவீத வளர்ச்சி என்பது, தொழில் துறைக்கு சாதகமான கண்ணோட்டத்தையே காட்டுகிறது.
-அன்ஷுல் ஜெயின், நிர்வாக இயக்குனர்,குஷ்மேன் அண்டு வேக்பீல்டு இந்தியா
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|