பதிவு செய்த நாள்
08 நவ2019
00:16
புதுடில்லி:முடங்கியுள்ள கட்டுமானத் திட்டங்களுக்கு புத்துயிர் அளிக்கும் நோக்கத்துடன், 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, சிறப்பு சாளர திட்டத்தை மத்திய நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன் புதன்கிழமையன்று அறிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக, இந்த சிறப்பு சாளர திட்டத்தின் மூலமான நிதியுதவி, உயர் நீதிமன்ற வழக்குகளில் உள்ள திட்டங்களுக்கு கிடையாது என்றும், வீடு வாங்குபவர்கள், தங்கள் கடனை புதுப்பிக்க வங்கிகளை அணுகலாம் என்றும் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது.நாட்டில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலை, ரியல் எஸ்டேட் துறையிலும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதன் காரணமாக நாடுமுழுவதும், 1,508 கட்டுமான திட்டங்கள் முடிக்கப்படாமல் முடங்கியுள்ளன.இந்நிலையில் மத்திய அரசு, இத்திட்டங்களுக்கு புத்துயிர் அளிக்கும் நோக்கத்துடன், 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், சிறப்பு சாளரம் மூலம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
இந்த திட்டத்திற்காக மத்திய அரசு, 10 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கும் என்றும், மீதமுள்ள, 15 ஆயிரம் கோடி ரூபாய் எஸ்.பி.ஐ, மற்றும் எல்.ஐ.சி., ஆகியவற்றிடமிருந்து பெறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.நாட்டில், 1,508 வீடு கட்டும் திட்டங்கள் மூலம், 4.58 லட்சம் வீடுகள், நிதிப் பற்றாக்குறையால் கட்டி முடிக்கப்படாமல், முடங்கி உள்ளன.இந்நிலையில், அரசின் 25 ஆயிரம் கோடி ரூபாய், மாற்று முதலீட்டு நிதியத்தால், வீடு வாங்குவோரின் எண்ணம் ஈடேறுவதுடன், இரும்பு சிமென்ட் உள்ளிட்ட துறைகளும் வளர்ச்சி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வீடு வாங்குபவர்கள், கூடுதல் கடன் அல்லது கடனை புதுப்பிப்பதற்காக, வங்கிகள் அல்லது கடன் கொடுத்த நிதி நிறுவனங்களை அணுகலாம் என அரசு தெரிவித்துள்ளது.ஆனால், உயர் நீதிமன்றங்களில் வழக்குகளை எதிர்கொண்டிருக்கும் திட்டங்கள், இந்த சிறப்பு சாளர திட்டத்தில் வராது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சிறப்பு சாளர திட்டத்தின் கீழ், ஒரு திட்டத்துக்கு அதிகபட்சம், 400 கோடி ரூபாய் அளவுக்கு நிதி வழங்கப்படும். இந்த திட்டத்தின் நோக்கம், போதுமான நிதிவசதி இன்றி நிறுத்தப்பட்ட திட்டங்களை நிறுவேற்றுவது தான் என, நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், வாராக் கடன் மற்றும் தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயம் ஆகியவற்றின் நடவடிக்கைகளுக்கு உட்பட்டுள்ள திட்டங்கள், நிதி கிடைத்ததும், உடனடியாக கட்டுமானத்தை துவங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், விரைவில் நிறைவடையும் தருவாயில் இருக்கும் திட்டங்களுக்கு நிதியளிப்பதில் முன்னுரிமை கிடைக்கும் எனவும் தெரிகிறது.வீடு வாங்குபவர்கள், வீடு கட்டுபவர்கள், கடன் கொடுத்தவர்கள், முதலீட்டாளர்கள் ஆகியோர் தாங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை, சிறப்பு சாளரத்தின் மூலம் தீர்த்துக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்படுள்ளது.
அரசின் 25 ஆயிரம் கோடி ரூபாய் மாற்று முதலீட்டு நிதியத்தால், வீடு வாங்குவோரின் எண்ணம் ஈடேறுவதுடன், இரும்பு, சிமென்ட் உள்ளிட்ட துறைகளும் வளர்ச்சி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|