பதிவு செய்த நாள்
13 நவ2019
23:34
புதுடில்லி:அடுத்த பட்ஜெட்டில், நேரடி மற்றும் மறைமுக வரிகளில் என்னென்ன மாற்றங்கள் செய்யலாம் என்பது குறித்து, இதுவரை இல்லாத வகையில், முதன் முதலாக, தொழில் மற்றும் வர்த்தக அமைப்புகளிடம், நிதியமைச்சகம் கருத்து கேட்டுள்ளது.
வரும் பிப்ரவரி, 1ம் தேதியன்று, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பார்லிமென்டில், 2020- - 21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார்.இந்நிலையில் நிதியமைச்சகம், தொழில் மற்றும் வர்த்தக அமைப்புகளிடம், நேரடி மற்றும் மறைமுக வரிகள் குறித்த ஆலோசனைகளை கேட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இது குறித்து, நிதியமைச்சகத்தின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:பட்ஜெட்டுக்கு முன், மத்திய நிதியமைச்சகம் பல்வேறு துறைகளிடம் ஆலோசனைகளை துவக்கி உள்ளது. இந்நிலையில், நிதியமைச்சகத்தின் கீழுள்ள வருவாய் துறை இம்மாதம், 11ம் தேதியன்று, ஒரு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது.இந்த சுற்றறிக்கையில், தனிநபர்களுக்கும், நிறுவனங்களுக்கும் வருமான வரி விகிதத்தில் என்னென்ன மாற்றங்கள் தேவை, கலால் மற்றும் சுங்க வரி உள்ளிட்ட மறைமுக வரிகளில் என்ன மாற்றங்கள் தேவை என்பது குறித்த பரிந்துரைகளை வழங்குமாறு கேட்கப்பட்டுள்ளது.
தொழில் மற்றும் வர்த்தக அமைப்புகளிடம் இப்படி பரிந்துரையை கோருவது, இதுவே முதன் முறையாகும்.பரிந்துரைகளை உற்பத்தி, விலை வருவாய் உள்ளிட்ட புள்ளி விபர தரவுகளின் அடிப்படையில் வழங்குமாறும் கேட்கப்பட்டுள்ளது. மேலும், நவம்பர், 21ம் தேதிக்குள் வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை, 5ம் தேதியன்று, தன் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இதன் பிறகு செப்டம்பர், 20ம் தேதி, மினி பட்ஜெட்டுக்கு ஒப்பான, கார்ப்பரேட் வருமான வரி குறைப்பு உள்ளிட்ட பல்வேறு வரிச் சலுகைகளை அறிவித்தார். இதனால், நடப்பு நிதியாண்டில் மத்திய அரசுக்கு, 1.45 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் எனவும் தெரிவித்திருந்தார்.இதன் தொடர்ச்சியாக, தனிநபர் வருமான வரி தொடர்பாகவும் சலுகைகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
பொருளாதார வளர்ச்சியை மந்த நிலையிலிருந்து மீட்க, தனிநபர் வருமான வரியில் மாற்றங்கள் செய்வதுடன், அவர்கள் கைகளில் அதிக பணம் புழங்க வகை செய்ய வேண்டும் என, பலர் தெரிவித்து வருகின்றனர்.ஏப்ரல் முதல், ஜூன் வரையிலான முதல் காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம், 5 சதவீதமாக சரிந்துவிட்டது. இந்நிலையில், பொருளாதாரத்தை மீட்க, இந்த வருமான வரி மாற்றங்கள்கைகொடுக்கும் என கருதப்படுகிறது.
மறைமுக வரியில், கலால் வரி, சுங்க வரி குறித்த ஆலோசனைகள் மட்டுமே கேட்கப்பட்டு உள்ளன; ஜி.எஸ்,டி., குறித்து கேட்கப்படவில்லை. ஜி.எஸ்.டி., குறித்து, மாநில நிதியமைச்சர்கள் உள்ளடக்கிய ஜி.எஸ்.டி., கவுன்சிலே முடிவு செய்யும் என்பதால், அது குறித்து கேட்கப்படவில்லை.இவ்வாறு, அந்த அதிகாரி கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|