பதிவு செய்த நாள்
19 நவ2019
06:11
பெங்களூரு : கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்திய ரியல் எஸ்டேட் துறை, ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல், தனியார் பங்கு முதலீடுகளை ஈர்த்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
இந்திய ரியல் எஸ்டேட் துறையில், 2015- – 2019ம் ஆண்டுகளில், ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல், வெளிநாட்டு தனியார் பங்கு முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, ரியல் எஸ்டேட் சேவைகள் நிறுவனமான, அனராக் நிறுவனத்தின் ஆய்வு தெரிவித்துள்ளது. இது குறித்து, அந்த ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ரியல் எஸ்டேட் துறையில் மேற்கொள்ளப்பட்ட மொத்த வெளிநாட்டு முதலீட்டில், 63 சதவீதம் அதாவது, 63 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல், வணிக ரீதியான ரியல் எஸ்டேட் பிரிவில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
அழுத்தம்இதே காலகட்டத்தில், குடியிருப்பு பிரிவில், 10 ஆயிரத்து 800 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே தனியார் பங்கு முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சில்லரை பிரிவில், குடியிருப்பு பிரிவை விட அதிகமாக அதாவது, 12 ஆயிரத்து 250 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு வந்து உள்ளது. பொருட்களுக்கான கிடங்குகள் பிரிவில், 7,200 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது.
மீதி தொகை, மேம்பாடு உள்ளிட்ட பிற செலவினங்களுக்காக முதலீடு செய்யப்பட்டுள்ளது.இதற்கு நேர்மாறாக, ரியல் எஸ்டேட்டில், உள்நாட்டு தனியார் முதலீடுகள், 2015ம் ஆண்டிலிருந்து இதுவரை, 17 ஆயிரத்து, 280 கோடி ரூபாய்க்கு செய்யப்பட்டு உள்ளன. இதில், 71 சதவீதம் அளவுக்கு, அதாவது தோராயமாக, 12 ஆயிரத்து 250 கோடி ரூபாய், வீடுகள் பிரிவில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. வேலைகளில் தாமதம். நிறுத்திவைக்கப்பட்ட வேலைகள், விற்பனையில் சரிவு என, பலவித அழுத்தங்களுக்கு தற்போது ஆளாகியுள்ளது, குடியிருப்பு பிரிவு கட்டுமானங்கள்.
இதையடுத்து, இப்பிரிவில் அதிகளவு முதலீடு செய்யப்பட்டுள்ள உள்நாட்டு தனியார் பங்கு முதலீடுகள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகி உள்ளது. அதிக லாபத்துடன் வெளியேறுவது கடினமாகி உள்ளது.
லாபம்இன்னொரு பக்கம், கடந்த ஐந்து ஆண்டுகளில், ரியல் எஸ்டேட் வணிக பிரிவில், நிலையான தேவை, மற்றும் அதிகரித்து வரும் வாடகை ஆகியவை காரணமாக, வெளிநாட்டு தனியார் பங்கு முதலீடுகள் அதிக லாபத்தை காண்கிறது. பிளாக்ஸ்டோன், புரூக்பீல்டு, ஜி.ஐ.சி., அசெண்டாஸ் மற்றும் எக்ஸாண்டர் ஆகிய ஐந்து வெளிநாட்டு நிறுவனங்கள், 75 சதவீதத்துக்கும் மேலாக முதலீடு செய்துள்ளன. இவை முக்கியமான, 7 நகரங்களில் மட்டுமின்றி, இரண்டாம் நிலை நகரங்களிலும் முதலீடு செய்ய முன்வந்துள்ளன.
உள்நாட்டைப் பொறுத்தவரை மோதிலால் ஆஸ்வால், எச்.டி.எப்.சி., வெஞ்சர், கோட்டக் ரியால்ட்டி, ஏ.எஸ்.கே குழுமம், ஆதித்ய பிர்லா பி.இ., ஆகிய நிறுவனங்கள் அதிகளவில் முதலீடு செய்துள்ளன. இவை மொத்தம், 54 சதவீதம் அதாவது, 9,360 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்து உள்ளன. இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|