பதிவு செய்த நாள்
24 நவ2019
03:00
புதுடில்லி : ‘ரெப்ரிஜிரேட்டர், ஏசி’ உள்ளிட்ட சாதனங்களின் எரிசக்தி திறனுக்காக வழங்கப்படும், நட்சத்திர தர குறியீடுகளில், புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டு, அவை ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வர உள்ளன.
இந்த எரிசக்தி லேபிள் விதிமுறைகள் காரணமாக, ஜனவரி மாதத்திலிருந்து, ஐந்து நட்சத்திர ரெப்ரிஜிரேட்டர்கள் தயாரிப்புச் செலவு, 6,000 ரூபாய் வரை அதிகரிக்கும் என, இத்தொழிற்துறை அமைப்பான, சி.இ.ஏ.எம்.ஏ., தெரிவித்துள்ளது.அடுத்த ஆண்டு ஜனவரி முதல், எரிசக்தி லேபிளுக்கான புதிய விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன.இதையடுத்து, எரிசக்தி திறனுக்கான ஐந்து நட்சத்திர குறியீடு பெற்றுள்ள ரெப்ரிஜிரேட்டர்களை தயாரிப்பதற்கு, 6,000 ரூபாய் வரை தயாரிப்பாளர்களுக்கு அதிக செலவு பிடிக்கும் என கருதப்படுகிறது.
புதிய எரிசக்தி விதிமுறைகளின்படி, ரெப்ரிஜிரேட்டர்களில் வழக்கமாக இருக்கும், ‘போம்’ எனும் பஞ்சு நுரைகளுக்கு பதிலாக, காற்று இல்லாத, ‘வேக்யூம் பேனல்’களை பயன்படுத்த வேண்டும்.இந்த மாற்றத்தை ஜனவரிமாதத்திலிருந்து மேற்கொள்ள வேண்டும் என,அரசு உத்தரவிட்டுள்ளது.இப்படி மாற்றுவது, தயாரிப்பாளர்களுக்கு சவாலான ஒன்றாக இருக்கும் என, நுகர்வோர் மின்னணுவியல் மற்றும் உபகரணங்கள் உற்பத்தியாளர்கள் சங்கமான, சி.இ.ஏ.எம்.ஏ., தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்த சங்கத்தின் தலைவர் கமல் நந்தி கூறியதாவது:கம்ப்ரஸர் அடிப்படையிலான ஏர்கண்டிஷனர், ரெப்ரிஜிரேட்டர் உள்ளிட்ட சாதனங்களுக்கான ஸ்டார் ரேட்டிங் லேபிள் விதிமுறைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, ப்ரோஸ்ட் பிரீ, டைரக்ட் கூலிங் ஆகியவை ஒரு நட்சத்திர தரம் கொண்டதாக மாற்றம் பெறுகிறது. இதையடுத்து, ஐந்து நட்சத்திர தரத்தில் பொருட்களை தயார் செய்வதில் சவாலை எதிர்கொள்ள வேண்டியநிலைக்கு தயாரிப்பாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
போமுக்கு பதிலாக, வேக்யூம் பேனலை வைப்பதன் மூலம், 5,000 முதல், 6,000 ரூபாய் செலவு அதிகரிக்கும்.யாரும் இந்த தொகையை வழங்க மாட்டார்கள். மேலும், இதற்கான தயாரிப்புக்காக புதிய வசதிகளை தொழிற்சாலைகளில் அமைக்க வேண்டியதிருக்கும்.இந்த துறை தற்போது தான் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. கடந்த நிதியாண்டில் இந்த துறை, வாஷிங் மிஷின், ‘ஏசி’ போன்றவற்றால், 12 முதல், 13 சதவீதம் வரை வளர்ச்சியை கண்டது. ‘டிவி’யை பொறுத்தவரை, ‘ஆன்லைன்’ மூலமான விற்பனை அதிகரித்துள்ளது. புதிய சிறிய பிராண்டுகள் சில மிகச் சிறப்பாக உள்ளன.கடந்த, 2017 – 18ம் நிதியாண்டில், இந்த துறை வளர்ச்சி மந்தமாகவே இருந்தது. இன்னும் சில பிரிவுகளில் வீழ்ச்சியும் காணப்பட்டது.நடப்பு ஆண்டின் முதல் அரையாண்டில், ‘ஏசி’ பிரிவு நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது.இந்த துறை முதல் அரையாண்டில், 15 சதவீத அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளது. இந்த வளர்ச்சியில், ‘ஏசி’ முக்கிய பங்காற்றி உள்ளது. ‘ஏசி’ ஒட்டுமொத்தமாக, 35 சதவீதத்துக்கும் அதிகமான வளர்ச்சியை கண்டுள்ளது.எங்கள் சங்கத்தின் மூலமாக, ‘ஏசி’ மிஷினுக்கான ஜி.எஸ்.டி.,யை குறைக்க கோரிக்கை வைத்துள்ளோம். 18 சதவீதத்துக்கு கீழே விதிக்குமாறு கேட்டுள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|