பதிவு செய்த நாள்
26 நவ2019
02:21
புதுடில்லி : ‘ஆப்பிள்’ நிறுவனம், இந்தியாவில், ஐபோன் எக்ஸ்.ஆர்., ஸ்மார்ட்போன் தயாரிப்பை துவங்கி உள்ளதாக, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
இது குறித்து, அவர் மேலும் கூறியதாவது:ஆப்பிள் நிறுவனம், ஐபோன் எக்ஸ்.ஆர்., தயாரிப்பை இந்தியாவில் துவங்கி உள்ளது. உள்நாட்டுச் சந்தைக்காகவும், ஏற்றுமதிக்காகவும் இந்த போன் இங்கு தயாரிக்கப்படுகிறது.இது, நாட்டின் மொபைல் போன் உற்பத்தியை அதிகரிப்பதற்கான அரசின் முயற்சிகளை எடுத்துக் காட்டுகிறது.மேலும், ஐபோனுக்கான சார்ஜரை, ஆப்பிள் நிறுவனத்துக்கு தயாரித்து வழங்கும், ‘சால்காம்ப்’ நிறுவனமும், இந்தியாவில் தன் தயாரிப்பை துவக்க இருப்பதற்கான ஒப்பந்தத்தை எட்டியுள்ளது.
சால்காம்ப் நிறுவனம், சார்ஜர் தயாரிப்புக்காக, தமிழகத்தில் சென்னைக்கு அருகில் உள்ள, ‘நோக்கியா’வின் செயல்படாமல் இருக்கும் தொழிற்சாலையை பயன்படுத்த இருக்கிறது. கடந்த, 10 ஆண்டுகளாக செயல்படாமல் இருக்கும் இந்த தொழிற்சாலை, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் செயல்பட துவங்கும்.இங்கு, சார்ஜர் மற்றும் இதர சாதனங்களை தயாரிப்பதற்காக, ஐந்து ஆண்டுகளில், 2,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளது.
சென்னையில் இருக்கும் இந்த தொழிற்சாலை மூலம், 10 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், 50 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.நாட்டின் ஒட்டு மொத்த மொபைல் மற்றும் உதிரி பொருட்கள் ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டில் தலா, 11 ஆயிரத்து, 500 கோடி ரூபாயை தாண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|