பதிவு செய்த நாள்
28 நவ2019
02:05
புதுடில்லி : அடுத்த ஐந்து ஆண்டுகளில், உள்கட்டமைப்பு துறையில், 100 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
டில்லியில் நடைபெறும், ‘இந்தியா சர்வதேச வர்த்தக கண்காட்சி’யில் பங்கேற்ற அமைச்சர் பியுஷ் கோயல், இது குறித்து மேலும் கூறியதாவது:நம் நாட்டில், உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக, 100 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்வதற்கான திட்டத்தில் அரசு இறங்கி உள்ளது.இந்த முதலீடு, விமான நிலையங்கள், சாலைகள், ரயில்வே, துறைமுகங்கள் ஆகியவற்றில் தற்போது இருக்கும் உள்கட்டமைப்பின் தன்மையையும், தரத்தையும் மாற்றும் வகையில் பயன்படுத்தப்படும்.
இன்னும் சொல்வதென்றால், உள்கட்டமைப்பு தொடர்பான அனைத்து துறைகளும், அதாவது, விமான போக்குவரத்து, கப்பல், சாலை போக்குவரத்து, மின்சாரம், எண்ணெய் மற்றும் எரிவாயு உள்ளிட்ட துறைகள், அடுத்த ஐந்து ஆண்டுகளில் மிகப் பெரிய உந்துதலை காணப்போகின்றன.ஐந்து ஆண்டுகளில், 100 லட்சம் கோடி ரூபாய் முதலீடு என்பது சிறிய தொகை அல்ல.இந்திய ரயில்வே துறை, 12 ஆண்டுகளில், 50 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டுக்கான திட்டத்தை தயாரித்து உள்ளது.
மேலும், 12 ஆண்டுகளில், 50 லட்சம் கோடி ரூபாய் முதலீடு என்பது, ரயில்வேயில் இதற்கு முன் கேள்விப்பட்டிராத முதலீடாகும்.ஆனாலும், அரசால் இவ்வளவு பெரிய தொகையை, இதில் முதலீடு செய்ய முடியாது. எனவே, நாங்கள் தனியாரை துணைக்கு அழைக்க வேண்டியதிருக்கும். பொதுத்துறை மற்றும் தனியார் துறை கூட்டுத் திட்டத்தின் மூலம் இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டியதிருக்கும்.
அடுத்து, ஆர்.சி.இ.பி., எனும் பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் இந்தியா சேருவதில்லை என, பிரதமர் நரேந்திர மோடி எடுத்த முடிவு, மிகவும் தைரியமான முடிவாகும். இதன் மூலம், இந்திய நிறுவனங்களின் உரிமை மற்றும் நலன்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன.இந்தியா தன் சந்தையை உலகுக்குத் திறந்து வைக்கும் ஒரு சூழ்நிலை இப்போது இல்லை. அதேசமயம், உலகின் பிற சந்தைகளை நாம் அணுகுவதற்கு, நமக்கு சமமான அணுகல் மற்றும் வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
இறக்குமதி வரி குறித்த தடைகள் நம் ஏற்றுமதியை தடுக்காத வகையில், பிற நாடுகளுடன் ஏற்றுமதியை தொடர வேண்டியதிருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.கிரிசில் அறிக்கைமதிப்பீட்டு நிறுவனமான கிரிசில், உள்கட்டமைப்பில் தனியார் முதலீடுகள் நிறுத்தப்பட்ட திட்டங்கள் உள்ளிட்ட காரணங்களால் 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் உள்கட்டமைப்பு செலவினங்கள் 2008 – 2012 நிதியாண்டுகளில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவீதமாக இருந்தது, 2013- – 2017 வரையிலான ஆண்டுகளில், 5.8 சதவீதமாக குறைந்துள்ளது. தனியார் முதலீடுகளை ஈர்ப்பதற்கான முயற்சிகள் இல்லாவிட்டால், இன்னும் வீழ்ச்சியடையக் கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|