பதிவு செய்த நாள்
28 நவ2019
02:08
புதுடில்லி : ‘ஏர் இந்தியா’ நிறுவனத்தை தனியார்மயமாக்கினாலும், அதன் ஊழியர்களுக்கு, ஓராண்டு வரை வேலைக்கான உத்தரவாதத்தை பெற்றுத் தருவது என, அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வந்துள்ளன.
இது குறித்து, உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:ஏர் இந்தியாவை தனியார்மயமாக்கும் முயற்சியில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அப்படி விற்கும்போது, அதன் ஊழியர்களுக்கு, ஓராண்டு வரை வேலைக்கான உத்தரவாதத்தை வழங்க வேண்டும் என, ஒப்பந்தம் செய்து கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது.இதற்காக, விற்பனை மற்றும் கொள்முதல் ஒப்பந்தத்தில் ஒரு சரத்தும் சேர்க்கப்படும். ஏர் இந்தியாவில் தற்போது, 11 ஆயிரம் ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிறுவனத்தை விற்பதற்கான அரசின் இரண்டாவது முயற்சியாகும் இது. இதற்கு முன், கடந்த ஆண்டில் நிறுவனத்தின், 76 சதவீத பங்குகளை விற்பதற்கு ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.ஆனால், 24 சதவீத பங்குகளை அரசு தன் பிடியில் வைத்துக்கொள்ளும் என்பதை முதலீட்டாளர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.தற்போது, இரண்டாவது முயற்சியில் அரசு இறங்கி உள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள், ஏர் இந்தியா நிறுவனப் பங்குகளை விற்று விடும் முயற்சியில் அரசு தீவிரமாக இருக்கிறது.
ஏர் இந்தியா விமான ஊழியர்களில், 37 சதவீதம் பேர், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் ஓய்வு பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|