பதிவு செய்த நாள்
06 டிச2019
00:07
மும்பை:ரிசர்வ் வங்கி, அதன் நிதிக் கொள்கை குழு கூட்டத்தின் முடிவில், இரண்டு முக்கியஅறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.முதலாவது, ரெப்போ வட்டி விகிதத்தை மாற்றாமல், தற்போதிருக்கும் அதே நிலையை தொடர இருப்பதாக அறிவித்து உள்ளது.
இரண்டாவதாக, நடப்பு நிதியாண்டுக்கான நாட்டின், ஜி.டி.பி., எனும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறித்த கணிப்பை, 5 சதவீதமாக குறைத்து அறிவித்துள்ளது.இந்த இரண்டு அறிவிப்புகளுமே பலர் எதிர்பாராதது தான்.இந்த ஆண்டில், ஐந்து முறை வட்டி விகிதத்தை தொடர்ந்து குறைத்து வந்த நிலையில், ஆறாவது முறையாகவும் குறைந்தபட்சம், 0.25 சதவீதம் வட்டி குறைப்பு இருக்கும் என, பலராலும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான, ஆறு உறுப்பினர்கள் அடங்கிய நிதி கொள்கை குழு, வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யாமல், 5.15 சதவீத வட்டி விகிதமே தொடரும் என அறிவித்துள்ளது.பொருளாதார வளர்ச்சிமேலும் ரிவர்ஸ் ரெப்போ விகிதமும், 4.90 சதவீதமாகவே தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.
வங்கியாளர்களும், பொருளாதார அறிஞர்களும் தற்போதைய பொருளாதார நிலையில், மீண்டும் ஒரு வட்டி குறைப்பில் ரிசர்வ் வங்கி ஈடுபடும் என எதிர்பார்த்திருந்தனர்.இந்திய பொருளாதார வளர்ச்சி, செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 4.5 சதவீதமாக சரிந்தது.இதுவே, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், 7 சதவீதமாக இருந்தது. எனவே, வளர்ச்சி பாதிப்பு தொடர்வதால், வட்டி குறைப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், இதற்கு முன், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி நடப்பு நிதியாண்டில், 6 சதவீதமாக இருக்கும் என கணித்திருந்த நிலையில், தற்போது அதை குறைத்து, 5 சதவீதமாக அறிவித்துள்ளது.எதிர்கால வளர்ச்சிக்கு தேவைப்படும் நிதிக் கொள்கை நடவடிக்கைக்கான அவசியம் இருக்கிறது.
இருப்பினும், அதிகரிக்கும் வளர்ச்சி மற்றும் பணவீக்கம் ஆகியவை காரணமாக, இந்த சமயத்தில் வட்டி விகிதத்தை மாற்றாமல் தொடர்வது பொருத்தமானதாக இருக்கும் என, நிதிக் கொள்கை குழு அதன் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.பணவீக்கம், அக்டோபர் மாதத்தில், ஓராண்டில் இல்லாத வகையில், 4.6 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இது, ரிசர்வ் வங்கியின் இலக்கான, 4 சதவீதத்தை விட அதிகமாகும். இதற்கு காய்கறிகள் மற்றும் வெங்காயம், தக்காளி ஆகியவற்றின் விலை அதிகரிப்பு முக்கிய காரணமாக அமைந்தது. ‘வட்டி குறைப்பை பொறுத்தவரை, இது ஒரு தற்காலிக இடை நிறுத்தம் தான்’ என, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியிருப்பதை அடுத்து, பிப்ரவரியில் நடைபெற இருக்கும் கூட்டத்தில், மீண்டும் வட்டி விகித குறைப்பு இருக்கக்கூடும் என கருதப்படுகிறது.
குறிப்பிடத்தக்கவை
* ரெப்போ வட்டி விகிதம், 5.15 சதவீதமாகவே தொடரும்
* நடப்பு நிதியாண்டுக்கான ஜி.டி.பி., வளர்ச்சி, 6.1 சதவீதத்திலிருந்து, 5 சதவீதமாக குறைத்து கணிக்கப்பட்டுள்ளது நிதிக் கொள்கை குழுவின் ஆறு உறுப்பினர்களும், வட்டி விகிதம் மாற்றப்படாமல் இருப்பதற்கு ஆதரவாக ஓட்டளித்துள்ளனர்
* பல்வேறு தரவுகளின்படி, நாட்டின் தேவைகள் நிலை பலவீனமாகவே இருக்கிறது
* நடப்பு நிதியாண்டின், இரண்டாவது அரையாண்டில், சில்லரை பணவீக்கம், 5.1 முதல், 4.7 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது
* அன்னிய செலாவணி இருப்பு, 3ம் தேதி நிலவரப்படி, 32.52 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது
* வட்டி விகித குறைப்பின் பயன் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் வகையில், வங்கியின் செயல்பாட்டில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
* அடுத்த நிதிக் கொள்கை குழு கூட்டம், பிப்ரவரி மாதம், 4 – -6ம் தேதிகளில் நடைபெறும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|