பதிவு செய்த நாள்
07 டிச2019
00:32
புதுடில்லி:மத்திய அரசு நிவாரணம் அளிக்காவிட்டால், ‘வோடபோன் ஐடியா’ நிறுவனத்தை மூடுவதைத் தவிர வேறு வழி இல்லை என, இந்நிறுவனத்தின் தலைவர் குமார மங்கலம் பிர்லா கூறியுள்ளார்.
இந்தியாவில், மொபைல் சேவை வழங்குவதில் மூன்றாவது மிகப் பெரிய நிறுவனமாக உள்ளது, வோடபோன் ஐடியா. சந்தை போட்டி, வருவாய் குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்நிறுவனம் தடுமாறி வருகிறது.இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, 53 ஆயிரத்து, 38 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை வழங்குவதில், மத்திய அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறது,
வோடபோன் இந்தியா நிறுவனம்.இதன் தொடர்ச்சியாக, நேற்று நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற குமாரமங்கலம் பிர்லா, மத்திய அரசு நிவாரணம் எதையும் அளிக்கா விட்டால், நிறுவனத்தை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என அதிரடியாக கூறியுள்ளார்.
இது குறித்து, அவர் மேலும் கூறியுள்ளதாவது:அரசிடம் இருந்து நிவாரணம் எதுவும் கிடைக்க வில்லை என்றால், அத்துடன் வோடபோன் ஐடியா நிறுவனத்தின் கதையும் முடிந்துவிடும் என நான் நினைக்கிறேன். நிறுவனம் கெட்ட பிறகு, அதில் முதலீடு செய்வதில் எந்த அர்த்தமும் இருக்காது. எனவே, நாங்கள் நிறுவனத்தை மூடி விடுவோம்.இந்த தொலை தொடர்பு துறை, மிகவும் முக்கியமான துறை என்ற உண்மையை அரசு உணர்ந்துள்ளது. மொத்த, ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டமும் இந்த துறையை சார்ந்து தான் உள்ளது.
நாங்கள், அரசிடமிருந்து இன்னும் அதிக நிவாரணங்களை எதிர்பார்க்கிறோம். எங்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்காவிட்டால், அது வோடபோன் ஐடியா நிறுவனத்தின் முடிவுரையாக இருக்கும்.நிலுவைத் தொகை விஷயத்தில், அரசு வெற்றி பெற்றுள்ளது. எனவே, நீதித் துறையுடன் பேசி, ஒரு தீர்வை காண முடியும். ஆனால், என்ன நடக்கும் என்பது எனக்கு தெரியவில்லை.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
‘ரிலையன்ஸ் ஜியோ’ வருகையின் காரணமாக, 2016ல், இந்தியாவில் உள்ள பிற தொலை தொடர்பு நிறுவனங்கள் சரிவைக் கண்டன. வோடபோன் மற்றும் ஐடியா செல்லுலார் ஆகிய நிறுவனங்களும் பாதிப்புக்கு ஆளாகின.இதையடுத்து, இவை இரண்டும் இணைந்து, வோடபோன் ஐடியா நிறுவனமாக உருவெடுத்தது. ஜியோவுடனான சந்தைப் போட்டியில் தடுமாற்றத்தை சந்தித்து வந்த வேளையில், ‘ஸ்பெக்ட்ரம்’நிலுவைத் தொகையை அரசுக்கு வழங்க வேண்டும்என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனால் பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் பிற தொலை தொடர்பு நிறுவனங்கள், 1.47 லட்சம் கோடி ரூபாயை நிலுவைத் தொகையாக அரசுக்கு செலுத்த வேண்டியதாகி உள்ளது.இந்நிலையில், நிலுவைத் தொகையான, 53 ஆயிரத்து, 38 கோடி ரூபாயும் சேர்த்து வோடபோன் ஐடியாவின் மொத்த கடன், 1.17 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது
நிலுவைத் தொகை விவகாரத்தில் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என, தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் சார்பாக பல கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. இவற்றை கவனத்தில் கொண்டு, தொலை தொடர்பு நிறுவனங்கள், மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை, 2022ம் ஆண்டு வரை செலுத்தலாம் என, அரசு அவகாசம் வழங்கியுள்ளது.
ஆனால் நிறுவனங்கள், நிலுவைத் தொகையை இரண்டாண்டுகளுக்குப் பின், அதற்கான வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டும் என்பதை மாற்றி, வட்டி உள்ளிட்டவற்றில் நிவாரணம் தேவை என கோரிக்கை வைத்து வருகின்றன.இந்நிலையில் தான், நிறுவனத்தை மூடி விடுவதைத் தவிர வேறு வழியில்லை என, குமாரமங்கலம் பிர்லா தெரிவித்துள்ளார்.
வோடபோன் முடிவுகுமாரமங்கலம் பிர்லா போலவே, சமீபத்தில், வோடபோன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான நிக் ரீடுவும், ‘‘அதிக வரி மற்றும் கட்டணங்களால், தொலை தொடர்பு துறையை துன்புறுத்துவதை அரசு நிறுத்தாவிட்டால், இந்தியாவில் வோடபோன் எதிர்காலம் சந்தேகத்திற்குரியதாக இருக்கும். இதற்கு மேலும், வோடபோன் ஐடியா நிறுவனத்தில் முதலீடு செய்யும் திட்டமும் இல்லை,” என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
குமார் மங்கலம் பிர்லாவின் அறிவிப்பை அடுத்து, வோடபோன் ஐடியா நிறுவனப் பங்குகள் விலை, 5 சதவீதம் அளவுக்கு விலை சரிவை சந்தித்தன
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|