பதிவு செய்த நாள்
11 டிச2019
03:55
தமிழக அரசின், நிலம் கையகப்படுத்தும் சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்டதால், ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் மட்டுமே, புதிய நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படுவதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரசு திட்டங்களுக்காக கையகப்படுத்தப்படும் தனியார் நிலங்களுக்கு, நியாயமான இழப்பீடு வழங்கும் வகையில், நியாயமான இழப்பீடு, வெளிப்படைத்தன்மை, மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வு என்ற சட்டத்தை, 2013ம் ஆண்டு மத்திய அரசு நடைமுறைப்படுத்தியது.புதிய சட்டத்தில் இருந்து, மாநில அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டங்களான, மாநில நெடுஞ்சாலைகள் சட்டம், தொழில் பயன்பாட்டிற்கான நிலம் கையகப்படுத்தும் சட்டம் போன்ற சட்டங்களுக்கு, விலக்கு பெறும் வகையில், 2015ல், 105 (அ) என்ற புதிய சட்ட பிரிவை, தமிழக அரசு சேர்த்தது.இந்த புதிய பிரிவை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன் உத்தரவிட்டது.
இது குறித்து, தொழில்துறை அதிகாரிகள் கூறியதாவது:நிலம் கையகப்படுத்தும் சட்ட பிரிவு ரத்து செய்யப்பட்டதால், ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டிருந்த, 10 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.புதிய நிலங்களையும் கையகப்படுத்த முடியவில்லை. புதிய சட்டப் பிரிவை ரத்து செய்ததை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
அந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது.இதனால், புதிதாக தொழில் துவங்க வரும் நிறுவனங்களுக்கு, ஏற்கனவே கையகப்படுத்தி வைத்துள்ள நிலங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.இவ்வாறு அவர்கள் கூறினர்.– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|