பதிவு செய்த நாள்
11 டிச2019
23:23
புதுடில்லி:நடப்பு நிதியாண்டுக்கான, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கணிப்பை, 5.1 சதவீதமாக குறைத்து அறிவித்துள்ளது, ஆசிய மேம்பாட்டு வங்கி.
வேலைவாய்ப்புகள் குறைந்து வருவது, மோசமான அறுவடை மற்றும் கடன் நெருக்கடிகளால், கிராமப்புற மக்களின் துயரங்கள் அதிகரித்து வருவது ஆகியவை இதற்கு காரணமாக அமைந்திருப்பதாக, இவ்வங்கியின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
பாதிப்பு
இருப்பினும், அடுத்த நிதியாண்டில், அரசின் ஆதரவான கொள்கை முடிவுகள் காரணமாக, ஜி.டி.பி., எனும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 6.5 சதவீதமாக அதிகரிக்கும் என, எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இது குறித்து, ஆசிய மேம்பாட்டு வங்கி மேலும் தெரிவித்துள்ளதாவது:இந்தியாவின், ஜி.டி.பி., வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில், 5.1 சதவீதமாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த ஆண்டில், வங்கி சாரா நிதி நிறுவனங்களில் ஏற்பட்ட பிரச்னைகள், நிதித் துறையில் கடன் நெருக்கடிக்கு வழிவகுத்து உள்ளன.மேலும், வேலைவாய்ப்புகள் குறைந்து போனது, மோசமான அறுவடையால் கிராமப்புற நுகர்வு பாதிக்கப்பட்டது ஆகியவை, பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன.
இருப்பினும், அரசின் ஆதரவான கொள்கை நிலைப்பாடுகள் காரணமாக, நாட்டின் பொருளாதார வளர்ச்சி, அடுத்த நிதியாண்டில், 6.5 சதவீதமாக அதிகரிக்கும்.இந்தியாவில், கடந்த ஆண்டின் பிற்பகுதியிலிருந்தே, உள்நாட்டு தேவை கணிசமாக பலவீனம் அடைந்துள்ளது.கடந்த சில மாதங்களில் அரசு எடுத்துள்ள கொள்கை முடிவுகளால், வளர்ச்சி அதிகரிக்கத் துவங்கும் என தெரிகிறது.
வளர்ச்சி
குறிப்பாக, கார்ப்பரேட் வரி குறைப்பு, பொதுத் துறை நிறுவனங்களில் பங்கு விலக்கல், பொதுத் துறை வங்கிகளுக்கு மறு மூலதனம் வழங்கியது, 1.35 சதவீதம் அளவுக்கு ரெப்போ வட்டியை குறைத்தது போன்ற காரணங்களால், வரும் நாட்களில் வளர்ச்சி அதிகரிக்கும்.கச்சா எண்ணெய் விலை குறைவது, அடுத்த நிதியாண்டின் வளர்ச்சிக்கு காரணமாக அமையும். இருப்பினும், இந்த எதிர்பார்ப்புக்கு எதிரான அபாயங்களும் சந்தையில் இருக்கின்றன. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பரில், நடப்பு நிதியாண்டுக்கான வளர்ச்சியை, அதற்கு முந்தைய கணிப்பான, 7 சதவீதத்திலிருந்து, 6.5 சதவீதமாக குறைத்து ஆசிய மேம்பாட்டு வங்கி அறிவித்திருந்தது. தற்போது அதிலிருந்து, 5.1 சதவீதமாக குறைத்து அறிவித்து உள்ளது.இதேபோல், அடுத்த நிதியாண்டுக்கான வளர்ச்சி, 7.2 சதவீதமாக இருக்கும் என்று முன்பு கணித்திருந்த நிலையில், தற்போது, 6.5 சதவீதமாக இருக்கும் என, குறைத்து அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கணிப்பு
கடந்த வாரம் நடைபெற்ற, ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கூட்டத்தில், நாட்டின் வளர்ச்சி நடப்பு நிதியாண்டில், 5 சதவீதமாக இருக்கும் என அறிவித்தது.இதற்கு முன், 6.1 சதவீதமாக இருக்கும் என்று கணித்திருந்த நிலையில், 5 சதவீதமாக குறைத்து அறிவித்தது. மேலும், இதற்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் தேவை குறைந்ததை காரணமாக தெரிவித்தது, ரிசர்வ் வங்கி.
இதேபோல், பன்னாட்டு நிதியமும், நடப்பு நிதியாண்டில் வளர்ச்சி, 6.1 சதவீதமாக அறிவித்தது. இதற்கு முன் இது, 7 சதவீதமாக இருக்கும் என கணித்திருந்தது. உலக வங்கியும், வளர்ச்சி, 6 சதவீதமாக இருக்கும் என, கணித்து அறிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|