பதிவு செய்த நாள்
23 டிச2019
04:25

கடந்த வாரம், அமெரிக்க பங்கு சந்தையின் குறியீடான, 'டொவ் ஜோன்ஸ் இண்டெக்ஸ்' மற்றும் இந்தியாவின், 'சென்செக்ஸ்' ஆகியவை புதிய உச்சம் தொட்டன.
இது இரு பொருளாதாரங்கள் மற்றும் பங்குச் சந்தைகள் சார்ந்த முதலீட்டாளர்களை ஆச்சரியப்பட வைத்தது. அடிப்படையில், பொருளாதார வளர்ச்சி குறைவாக உள்ள சூழலில், வளர்ச்சியில் தெளிவான தொய்வு தெரியும் போது, சந்தையில் எப்படி இவ்வளவு ஆர்வம் இருக்க முடியும் என்ற கேள்வி, பொருளாதார அறிஞர்களை நிச்சயம் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஆனால், சந்தைக்கு என்று ஒரு சிறப்பு எப்போதும் உண்டு. நிகழ்காலத்தை கடந்து, எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே, தன்னுடைய பொருளாதார எதிர்பார்ப்புகளில் உள்ளடக்குவது தான் அது.இந்திய பொருளாதார வளர்ச்சி, தற்போது காணும் தொய்வில் இருந்து மீண்டு விடும் என்பது சந்தையின் கணக்கீடு. அப்படி வளர்ச்சி மீண்டும் அதிகரிக்கும் போது முதலீடு செய்வதை விட, அந்த எதிர்பார்ப்பின் அடிப்படையில், இப்போது முதலீடு செய்வதே சிறந்தது என்ற எண்ணம், உலக முதலீட்டாளர்கள் மனதில் இருப்பதாகவே தெரிகிறது.
கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து பொருளாதார தரவுகளும், குறியீடுகளும் சரியாக இல்லாத சூழலில், பன்னாட்டு முதலீடுகள் கூடி விட்டன. மேலும், டிசம்பர் மாதம் இதே போக்கு தொடரும் என்றே தோன்றுகிறது.இந்தியாவை இத்தகைய கடினமான காலகட்டத்திலும் ஏன் பன்னாட்டு முதலீட்டாளர்கள் இவ்வளவு விரும்புகிறார்கள்?இந்த திகைப்பு பங்கு சந்தையை அறியாதவர் மனதில், இன்னும் அதிகமாக எதிரொலிப்பது தெரிகிறது.பொருளாதார வளர்ச்சி பற்றி தொழில் அதிபர்களும், பொருளாதார அறிஞர்களும் கவலைப்படும் போது, முதலீட்டாளர்களின் உற்சாகம் காட்சி முரண் என்று கூட பலர் நினைக்கக்கூடும்.
ஆனால், முதலீட்டாளர்களின் பங்கு, மற்றவர்களின் பங்கை விட மாறுபட்டது என்பதை புரிந்து கொள்வது தான் மிக முக்கியம். முதலீட்டாளர்கள் மற்றவர்களை விட எல்லாவற்றையும் முன்கூட்டியே பார்க்கும் திறன் உள்ளவர்கள். அந்த திறனும், அதோடு கூடும் அசாத்திய தைரியமும் முதலீட்டாளர்களின் தனிச்சிறப்பு. அதை முதலீட்டு முடிவுகளில், எல்லா தரவுகளும் எதிர்மறையாக வரும்போது நடைமுறைப்படுத்துவது மட்டுமே அசாத்திய வெற்றிகளை தருகிறது.ஆனாலும், வெற்றி என்பது முயற்சிக்கு ஏற்ப அமைவதில்லை. பலமுறை எதிர்மறையான முடிவுகள் அமையக்கூடும். அந்த முடிவுகளுக்காக முதலீட்டாளர்கள் மெனக்கெடுவது பலமுறை பலன் தருவது இல்லை.காலத்தை மீறி பல முடிவுகள் தவறாகி விடுவது சகஜம். இருந்தும் முதலீட்டாளர்கள் மீண்டும் அடுத்த முடிவை எடுக்க துணிய முற்படுவது, பார்வையாளர்களுக்கு ஆச்சரியம் தரக்கூடும். தோல்வியை எப்படி இவ்வளவு எளிதில் கடந்து செல்ல முடிகிறது? முதலீட்டாளர்களின் இயற்கை குணங்கள் சார்ந்து இருந்தால் மட்டுமே, அவர்கள் எதையும் கடந்து செல்லக்கூடிய வல்லமை பெறக்கூடும்.
இத்தகைய வல்லமை, பன்னாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகம் தெரிவது ஏன்? அது பன்னாட்டு முதலீட்டாளர்கள் எடுக்கும் பயிற்சி மற்றும் முயற்சி சார்ந்து மட்டுமே அமைகிறது.இத்தகைய பொருளாதார சூழல்கள், உள்நாட்டு முதலீட்டாளர்களும் அதே பக்குவத்தையும், பயிற்சியையும் வளர்க்கும் வாய்ப்பாகவே பார்க்கப்பட வேண்டும்.பொருளாதாரம் எப்படி மாறும் என்பதை சரியாக கணிப்பவர்கள், பெருவெற்றி காண்பார்கள் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. அந்த கணிப்புகளை முதலீடுகளாக மாற்றிக் கொள்ளும் காலகட்டம் இது.ஷியாம் சேகர்shyamsek@ithought.co.in
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|