பதிவு செய்த நாள்
29 டிச2019
05:58
புதுடில்லி: நாட்டின் ஏற்றுமதியில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் சரிவு, அடுத்த ஆண்டில் தடுத்து நிறுத்தப்படலாம் என்றும், அதேசமயம், வளர்ச்சி விகிதம் குறைவாகவே இருக்கும் என்றும் கருதப்படுகிறது.
ஆகஸ்ட் மாதத்திலிருந்து, நாட்டின் ஏற்றுமதி மிகக் கடுமையான சரிவை கண்டு வருகிறது. இதற்கு பெட்ரோலியம், பொறியியல், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் உள்ளிட்ட முக்கியமான துறைகளில் ஏற்றுமதி குறைந்தது காரணமாக அமைந்தது.இவை மட்டுமின்றி, தரைவிரிப்புகள், ஆயத்த ஆடைகள், தோல் போன்ற மனித உழைப்பு அதிகம் தேவைப்படும் துறைகளிலும் ஏற்றுமதி சரிவை கண்டு வருகிறது.சவால்உலக வர்த்தக அமைப்பின் தகவலின்படி, உலகளாவிய வர்த்தகம், நடப்பு ஆண்டில், 1.2 சதவீதம் மட்டுமே உயர்ந்திருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
இதுவே, கடந்த ஏப்ரலில், 2.6 சதவீதமாக இருக்கும் என, கணிக்கப்பட்டிருந்தது.இருப்பினும், அடுத்த ஆண்டில் வர்த்தக வளர்ச்சி, 2.7 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.உலக நாடுகளில் நிலவும் பாதுகாப்புவாதம், நிச்சயமற்ற நிலைக்கு இட்டுச் செல்வதால், நிலைமை மிகவும் சவாலானதாக மாறி வருகிறது என, இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பான, எப்.ஐ.இ.ஓ., தெரிவித்துள்ளது.இது குறித்து, எப்.ஐ.இ.ஓ., அமைப்பின், டைரக்டர் ஜெனரல் அஜய் சஹாய் கூறியதாவது:பல்வேறு நாடுகளில் பாதுகாப்புவாதம் அதிகரித்து வரும் காரணத்தால், ஏற்றுமதி, உலகளவில் சவாலான ஒன்றாக மாறிவருகிறது.
இருப்பினும், அடுத்த ஆண்டில் முதல் அரையாண்டில் நிலைமை மேம்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.இது, இந்தியாவின் ஏற்றுமதியில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். அடுத்த ஆண்டில், ஏற்றுமதி எதிர்மறையான நிலையிலிருந்து மாறும். ஆனால், வளர்ச்சி விகிதம் இரட்டை இலக்கங்களில் இருக்காது.அடுத்த நிதியாண்டில், ஏற்றுமதியில், 15 சதவீத வளர்ச்சியை காண வாய்ப்புள்ளது.இந்திய ஏற்றுமதியாளர்களின் ஆர்டர்கள் நிலை ஊக்கமளிப்பதாக உள்ளது. மேலும், ரூபாயில் ஏற்ற, இறக்கங்கள் குறைவாக இருப்பதால், வர்த்தகர்களுக்கு சாதகமான நிலைமை இருக்கிறது.கவனம்உலக இறக்குமதியில், 50 சதவீதம், மின்சாரம் மற்றும் மின்னணு பொருட்கள், வாகனங்கள், இயந்திரங்கள், பெட்ரோலியப் பொருட்கள் , பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவை உள்ளன. இந்திய ஏற்றுமதிகள், உலக நாடுகளின் மாறும் இறக்குமதி முறைகளுக்கு ஏற்ப மாறிக்கொள்ள வேண்டும்.வேலைவாய்ப்புகள் அதிகம் இருக்கும் துறைகளில், ஏற்றுமதிக்கு அதிக வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும். தொழில்நுட்ப ரீதியிலான துறைகளிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
இந்த ஆண்டு ஜனவரி முதலாகவே, ஏற்றுமதி வளர்ச்சி விகிதம் குறைந்து வந்தது. ஆகஸ்ட் மாதத்தில் மேலும் குறைந்து, எதிர்மறை நிலைக்கு சென்றுவிட்டது. நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலத்தில், நாட்டின் ஏற்றுமதி, 2 சதவீதம் குறைந்து, 21 ஆயிரத்து, 200 கோடி டாலராக சரிந்துள்ளது.தற்போதைய இந்த போக்கின் அடிப்படையில், நடப்பு நிதியாண்டில், ஏற்றுமதி, 33 ஆயிரம் முதல், 34 ஆயிரம் கோடி டாலராக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.கடந்த நிதியாண்டில், நாட்டின் ஏற்றுமதி, 9 சதவீதம் அதிகரித்து, 33 ஆயிரத்து, 100 கோடி டாலராக இருந்தது.இதுவே, அதற்கு முந்தைய, 2017 – 18 நிதியாண்டில், 30 ஆயிரத்து, 350 கோடி டாலராக இருந்தது.
நாட்டின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்காக, அடுத்த ஆண்டில், உலக வர்த்தக அமைப்பின் விதிகளுக்கு இணக்கமான வகையில், ஏற்றுமதி ஊக்கத் திட்டத்தை அறிவிப்பது, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கையை அறிமுகம் செய்வது போன்ற பல நடவடிக்கைகள் குறித்து, வர்த்தக அமைச்சகம் பரிசீலனை செய்து வருகிறது. வெளிநாட்டு வர்த்தக கொள்கையை இறுதி செய்வதற்கான பல்வேறு சந்திப்புகளை, அமைச்சகம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|