பதிவு செய்த நாள்
04 பிப்2020
23:23

மத்திய பட்ஜெட் பரிந்துரைகள் தொடர்பாக, முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் தெரிவித்த கருத்துகள் தவறானவை என்று வரித்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.இது குறித்து சென்னை ஆடிட்டர் சுந்தர்ராமன் கூறியதாவது:
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த, 2020 – 21ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் சில பிழைகள் இருப்பதாக, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் குற்றம் சுமத்தியிருக்கிறார். அவரது குற்றச்சாட்டுகள் என்ன, பட்ஜெட்டில் பிழைகள் இருக்கிறதா என்று பார்ப்போம்.
ஆய்வுகள்
* இந்தியாவின் வளர்ச்சி விகிதம், 6 முதல், 6.5 சதவீதம் அதிகரிக்கும் என, பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதை, ‘முற்றிலும் பொறுப்பற்றது’ என, சிதம்பரம் குற்றம் சாட்டி உள்ளார்.
ஐ.எம்.எப்., அமைப்பு, சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவின் வளர்ச்சி விகிதம், 6 முதல், 6.5 சதவீதம் அதிகரிக்கும் என, தெரிவித்திருந்தது. எந்த தரவுகளையும் ஆய்வையும் நிகழ்த்தாமலா அந்த அமைப்பு அறிக்கையை வெளியிட்டிருக்கும்?
ஐ.நா., சபையின், உலக பொருளாதார நிலைகள் மற்றும் வாய்ப்புகள் குறித்த ஆய்வு முடிவிலும், இந்தியாவின் வளர்ச்சி, 6ல் இருந்து, 6.5ஆக இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஐ.நா., போன்ற ஒரு அமைப்பும் எந்த ஆய்வையும் மேற்கொள்ளாமலா, இந்த வளர்ச்சி விகிதத்தை தெரிவித்திருக்கும்?மேலும், ஐ.நா., ஆய்வில், இந்தியாவின் தனிநபர் வருமான விகிதம், குறைந்தபட்சம், 4 சதவீத வளர்ச்சியை நோக்கி பயணிக்கும் என, குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படியான ஆய்வு முடிவுகள் இருக்கையில், சிதம்பரத்தின் குற்றச்சாட்டு அர்த்தமற்றதாகிறது.
*‘அன்னிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில், இந்த பட்ஜெட் இல்லை’ என, சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார். நமது பட்ஜெட் குறித்து, அமெரிக்காவின் தொழில் வர்த்தக சபை, வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டால், இந்தியாவில் அன்னிய நேரடி முதலீடுகள் அதிகரிக்கும்’ என, குறிப்பிட்டுள்ளது.
மேலும், அமெரிக்க – இந்திய தொழில் கூட்டமைப்பு, ‘மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிப்பது மற்றும் வருவாயை அதிகரிப்பது ஆகிய நோக்கத்துடன், இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம், இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை அம்சங்கள் வலுவடையும். பணவீக்கமும் குறையும்’ எனக் கூறியுள்ளது.
மேலும், இந்த பட்ஜெட்டில், வெளிநாட்டு முதலீடுகளைக் கவரும் வகையில், லாப பங்கீடு வரி (Dividend distribution tax) முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் தொழில் நிறுவனங்களை அமைக்க, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவில் விருப்பப்படுவர்.ஆறு மாதங்களுக்கு முன்பே, இந்தியாவில் உற்பத்தி தொழிற்சாலைகளை நிறுவியுள்ள, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான வரி, 15 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது.
இம்மாதிரியான சிறப்பு அம்சங்களால், அந்நிய நேரடி முதலீடுகள் இந்தியாவில் கூடும். தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கும். நிலைமை இப்படியிருக்கையில், சிதம்பரம் குறிப்பிட்டிருப்பது ஏற்புடையதாக இல்லை.
முதலீடுகள்
* கடந்த ஆண்டின் பட்ஜெட்டுடன் ஒப்பிட்டு, உணவு மானியம் குறைக்கப்பட்டுள்ளதாக சிதம்பரம் கூறியிருக்கிறார். 2019 – 20 பட்ஜெட்டில், உணவு மானியத்திற்கு, 1.80 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. இது மிக அதிகமாக உள்ளது எனக் கருதியதால், அப்போதே அதை, 1.08 லட்சம் கோடி ரூபாயாக குறைத்தனர்.
அதிலிருந்து தற்போது, 1.15 லட்சம் கோடியாக உயர்த்தியுள்ளனர்.இதை, பட்ஜெட்டின் திருத்தப்பட்ட மதிப்பீடுகளின் பட்டியல் குறித்து, அமைச்சக அறிக்கையின், 58ம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை சிதம்பரம் படிக்கவில்லையா. அல்லது பார்க்கவில்லையா? அல்லது அவருக்கு இது புரியவில்லையா?
விவசாய உர மானியம், கடந்த பட்ஜெட்டில், 79 ஆயிரம் கோடி ரூபாய் என, ஒதுக்கப்பட்டதில் இருந்து தற்போது, 71.5 ஆயிரம் கோடி ரூபாய் என, மிகக் குறைந்த அளவில் குறைக்கப்பட்டு உள்ளது. அதைத் தவிர்த்து, உணவு மானியமும் முற்றிலும் குறைக்கப்பட்டுள்ளது என்பதை துளியளவும் ஏற்கும்படியாக இல்லை.
* பா.ஜ., அரசு தன்னிச்சையாக முடிவெடுப்பதாகவும், அதிகப்படியான வரிகளை விதிப்ப தாகவும் குற்றம்சாட்டுகின்றனர். ஆண்டுக்கு, 5 கோடி ரூபாய் வரை, விற்றுமுதல் கொண்ட சிறு தொழில் நிறுவனங்கள், ஆடிட்டரின் உதவியின்றி, தங்களது வரவு – செலவு கணக்கை தாக்கல் செய்யலாம் என, இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில், 2 கோடி ரூபாய்க்கு மேல் விற்றுமுதல் கொண்ட நிறுவனங்கள், ஆடிட்டரை தேடி அலையும் நிலை இருந்தது. சிறு தொழில் நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜ., அரசு, சிறு தொழில் நிறுவனங்களை ஊக்குவிப்பதும் நம்புவதும் தவறா?
கடந்த ஓராண்டாக, முகம் இல்லாத வரி முறையை செயல்படுத்தியுள்ளது. இப்போது கேள்விக்கு பதில் சொல்வதற்கு, வருமான வரி அலுவலகம் செல்ல வேண்டிய அவசியமில்லை. ‘இ – அசெஸ்மென்ட்’ என்ற முறை, இது தான்.இ – மெயிலில் கேள்விக்கு பதில் கொடுத்தால் போதும். வரி செலுத்துவோர் நேரில் வர வேண்டிய அவசியமில்லை. இது, வரி செலுத்துவோருக்கு மிகவும் வசதியானது.
சாதனை
* ‘நிதி பற்றாக்குறை முறையாக பராமரிக்கப்படவில்லை’ என்றும் சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவின் நிதி பற்றாக்குறை, 2011ம் ஆண்டு, 5.9 சதவீதம் இருந்தது. இந்தாண்டு நிதி பற்றாக்குறையை சமாளிப்பது சிரமம் என்று தான் பலரும் கணக்கிட்டனர். ஆனால், இந்தாண்டு, 3.5 சதவீதமாக கொண்டு வந்துள்ளனர். இது, பாஜ., அரசின் சாதனையாக தெரியவில்லையா?
* தனிநபர் வரிவிதிப்பில் செய்யப்பட்டுள்ள மாற்றம், நடுத்தர மக்களுக்கும், கீழ் நிலையில் இருப்பவர்களுக்கும் பயன் தருவதாக இல்லை என்கின்றனர். பட்ஜெட் என்பது சம்பளம் பெறுபவர்களுக்கு மட்டுமானது அல்ல; அனைவருக்கும் பயன் தருவதாக இருக்க வேண்டும். பழைய வரி முறை முற்றிலும் நீக்கப்படவில்லை. ஓய்வு பெற்ற வங்கி அலுவலர் ஒருவர், புதிய வரிவிதிப்பின் படி, ஆண்டுக்கு, 15 ஆயிரம் ரூபாய் வரை சேமிக்க முடியும். இந்த பொருளாதார தேக்க நிலையிலும், 5 லட்சம் வருமானம் பெறுபவர்களுக்கு வரி கிடையாது.
எனவே, இது அனைத்து தரப்பு மக்களையும் திருப்தி செய்யக்கூடிய வகையிலான பட்ஜெட். தொலைநோக்குப் பார்வையில் நாட்டுக்கு அதிக பயன் தரக்கூடியது.இவ்வாறு, ஆடிட்டர் சுந்தர்ராமன் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|