பதிவு செய்த நாள்
06 பிப்2020
00:35
புதுடில்லி:நாட்டின் சேவைகள் துறை வளர்ச்சி, கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, ஜனவரி மாதத்தில் அதிகரித்துள்ளது.
‘ஐ.எச்.எஸ்., மார்க்கிட் இந்தியா’ நிறுவனம், தகவல் தொழில்நுட்பம், வியாபாரம், ஓட்டல்,
சுற்றுலா, போக்குவரத்து, நிதி, காப்பீடு, ரியல் எஸ்டேட், வர்த்தகம், கட்டுமானம் உள்ளிட்ட சேவைகள் துறை நிறுவனங்களிடம் ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை ஒன்றை வெளியிட்டு
உள்ளது.
புதிய ஒப்பந்தங்கள்
அதில் கூறப்பட்டு உள்ளதாவது:கடந்த ஜனவரியில், சேவைகள் துறையின் வளர்ச்சியை குறிக்கும், ஐ.எச்.எஸ்., மார்க்கிட் எஸ்.பி.எம்.ஐ., குறியீடு, 55.3 புள்ளிகளாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டு டிசம்பரில், 53.3 புள்ளிகளாக இருந்தது. கடந்த ஏழு ஆண்டுகளில் காணாத வளர்ச்சி அதிகரிப்பாகும் இது.இந்த உயர்வுக்கு, புதிய வணிக ஒப்பந்தங்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்தது முக்கிய காரணமாகும். மேலும், சாதகமான சந்தை சூழ்நிலையும்
நிலவியது.
புதிய வணிக ஒப்பந்தங்கள், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவும், வணிக நம்பிக்கை
அதிகரிக்கவும் உதவிகரமாக இருந்தது.மதிப்பீட்டு மாதத்தில், புதிய வேலைகளுக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. புதிய வேலைகளுக்கான ஒப்பந்தங்கள் பெரும்பாலும்
உள்நாட்டிலேயே பெறப்பட்டு உள்ளன.அதேசமயம் ஏற்றுமதி, ஆண்டின் ஆரம்பத்தில் குறைந்துள்ளது. குறிப்பாக, அமெரிக்கா, சீனா, ஐரோப்பா ஆகிய நாடுகளில், இறக்கு
மதிக்கான தேவைகள் குறைந்துள்ளன.
சேவைகள் துறையைப் போலவே, தயாரிப்பு துறை வளர்ச்சியும் எட்டு ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. இவ்வளர்ச்சியை குறிக்கும், ஐ.எச்.எஸ்., மார்க்கிட் இந்தியா பி.எம்.ஐ., குறியீடு, 55.3 புள்ளியாக உயர்ந்துள்ளது. இது, கடந்த டிசம்பரில், 52.7 புள்ளியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பணவீக்கம்
இதற்கிடையே, தயாரிப்பு துறை மற்றும் சேவைகள் துறை ஆகியவற்றின், கலப்பு வளர்ச்சி குறியீடும், ஏழு ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை எட்டியுள்ளது. கடந்த டிசம்பரில், 53.7
புள்ளிகளாக இருந்த இந்த குறியீடு, ஜனவரி மாதத்தில், 56.3 புள்ளிகளாக அதிகரித்துள்ளது.
இக்குறியீடுகள், 50 புள்ளிகளை தாண்டினால், அது வளர்ச்சியை குறிக்கும்; 50 புள்ளிகளுக்கு கீழே இருந்தால், சரிவை குறிக்கும்.
விலைகளின் அடிப்படையில் பார்க்கும்போது, சேவைகள் துறை செயல்பாட்டின் வளர்ச்சியுடன் சேர்த்து பணவீக்க அழுத்தங்களும் அதிகரித்துள்ளன.உள்ளீட்டு செலவுகள், 2013 பிப்ரவரி முதல் அதிக அளவுக்கு உயர்ந்துள்ளன. பணவீக்கத்தின் போக்கு கவலை தரும் வகையில் உள்ளது.ஏழு ஆண்டுகளில், உள்ளீட்டு விலைகள் கடுமையாக அதிகரித்துள்ளன. இருப்பினும், அதன் தாக்கத்தை வாடிக்கையாளர்களுக்கு தராமல், நிறுவனங்களே தாங்கிக் கொள்கின்றன.
இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய சேவைகள் துறை, புதிய ஆண்டின் துவக்கத்தில் தளிர் விட்டுள்ளது. பலவீனம் குறித்த எதிர்பார்ப்புகளை மீறி, கடந்த ஆண்டின் இறுதியில் பெறப்பட்ட வேகம், நடப்பு ஆண்டில் அதிகரிக்கும்.
பாலியானா டி லிமா,
தலைமை பொருளாதார வல்லுனர், ஐ.எச்.எஸ்., மார்க்கிட்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|