பதிவு செய்த நாள்
08 பிப்2020
00:03
மும்பை:‘நடப்பு நிதியாண்டில், ஜி.எஸ்.டி., இழப்பீட்டு நிதியம், 15 ஆயிரம் கோடி முதல், 25 ஆயிரம் கோடி ரூபாய் வரை பற்றாக்குறையை சந்திக்கும்’ என, தர நிர்ணய நிறுவனமான, ‘இக்ரா’ மதிப்பீடு செய்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் வெளியிட்டு உள்ள அறிக்கை:முந்தைய வரி நடைமுறையில் இருந்து, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி திட்டத்திற்கு மாறியதால், மாநிலங்களின் வரி வருவாய் குறைந்துள்ளது. இதை ஈடு செய்ய, ஜி.எஸ்.டி., இழப்பீட்டு வரி வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் கிடைக்கும் வருவாய், ஜி.எஸ்.டி., இழப்பீட்டு நிதியத்தில் வரவு வைக்கப்படுகிறது. இந்த நிதியத்தில் இருந்து, ஜி.எஸ்.டி., அமலான, 2017, ஜூலை 1 முதல், மாநில அரசுகளுக்கு, ஆண்டுக்கு, 14 சதவீத இழப்பீட்டு தொகை வழங்கப்படுகிறது.
மதிப்பீடு
இந்நிலையில், நடப்பு, 2019 -– 20ம் நிதியாண்டில், ஜி.எஸ்.டி. வருவாய் வளர்ச்சி, 18 சதவீதமாக இருக்கும் என, மத்திய அரசு மதிப்பிட்டுள்ளது. ஆனால், ஜனவரி வரை, 5 சதவீதம் என்ற அளவிற்கே வருவாய் வளர்ச்சி உள்ளது. இதன் காரணமாக, ஜி.எஸ்.டி., இழப்பீட்டு நிதியத்தில் இருந்து மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய தொகையில், 15ஆயிரம் கோடி முதல் 25ஆயிரம் கோடி ரூபாய் வரை பற்றாக்குறை ஏற்படும்.
எனவே, மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி., இழப்பீடு நிலுவை மேலும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இருந்த போதிலும், மத்திய அரசு, நடப்பு நிதியாண்டில், செப்., வரை, மாநிலங்களுக்கு, ஜி.எஸ்.டி., இழப்பீடாக ஒரு லட்சம் கோடி ரூபாய் வழங்கியுள்ளது.நடப்பு நிதியாண்டில், அக்.,– ஜன., வரை, மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி., இழப்பீடாக, 60 ஆயிரம் கோடி முதல் 70 ஆயிரம் கோடி ரூபாய் வரை, மத்திய அரசு தர வேண்டும்
வரி வசூல்
ஆனால், 2019 டிச., நிலவரப்படி, ஜி.எஸ்.டி., இழப்பீட்டு நிதியத்தில், 17ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே, இருப்பு உள்ளது. வரும் மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில், ஜி.எஸ்.டி., இழப்பீட்டு வரி மூலம், 28ஆயிரம் கோடி ரூபாய் வசூலாகும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, ஜி.எஸ்.டி., இழப்பீட்டு நிதியத்தின் மொத்த இருப்பு, 45ஆயிரம் கோடி ரூபாய் என்ற அளவிற்கே இருக்கும்.
இதன் காரணமாக, மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டு தொகையில், 15 ஆயிரம் கோடி ரூபாய் முதல் 25ஆயிரம் கோடி ரூபாய் வரை பற்றாக்குறை ஏற்படும். ஜி.எஸ்.டி., வருவாய் குறைந்துள்ள நிலையில், மாநிலங்களுக்கு, மத்திய அரசு வழங்கும் இழப்பீடு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், மத்திய பட்ஜெட்டில், வரி நிலுவை வசூல் மூலம், இழப்பீட்டு நிதியத்தின் இருப்பு அதிகரிக்கப்படும் என்பதால், மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்குவதில் எந்த பிரச்னையும் இருக்காது என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|