பதிவு செய்த நாள்
09 பிப்2020
01:44
சீனாவில் தோன்றிய ‘கொரோனா’ வைரஸ், அந்நாட்டின் பொருளாதாரத்தை முடக்கிப் போட்டுள்ளது. அத்துடன், 25க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது. 34 ஆயிரத்து, 800 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த கொடிய வைரஸ் நோயால், சீன தொழில் துறை ஸ்தம்பித்துள்ளது. அங்குள்ள ஏர்பஸ் நிறுவனம், விமான தயாரிப்பையும், பாக்ஸ்கான் நிறுவனம், ஆப்பிள் மொபைல்போன் உற்பத்தியையும் நிறுத்தியுள்ளன. இந்திய தொழில் துறையிலும், கொரோனா தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மறுபரிசீலனை
நம் நாட்டின் ஏற்றுமதியில், சீனாவின் பங்கு, 5 சதவீதம் என்ற அளவிற்கே உள்ளது. வைரம், மீன், மசாலா பொருட்கள், ரப்பர் போன்றவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆனால், நம் இறக்குமதியில், 14 சதவீதம், சீனாவில் இருந்து வருகிறது. இதில், மருந்து துறைக்கு தேவைப்படும் மூல மருந்துகள், வாகன உதிரிபாகங்கள் ஆகியவை அடங்கும்.
சீனாவில், உற்பத்தி சரிந்துள்ளதால், அந்நாட்டில் இருந்து மூல மருந்துகள், வாகன உதிரி பாகங்கள் ஆகியவற்றின் இறக்குமதி குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக, இந்திய மருந்து, வாகன துறைகளின் தயாரிப்பு சரிவடைந்துள்ளது. இதற்கு, இத்துறைகள் சர்வதேச வர்த்தகத்தில் ஆழமான ஒருங்கிணைப்பை ஏற்படுத்திக் கொண்டது தான், காரணம்.
குறைந்த விலையில் கிடைக்கும் சீன வாகன உதிரி பாகங்களை சார்ந்து இருந்ததால், இந்த பாதிப்பை சந்தித்துள்ளோம். வாகன உதிரி பாகங்கள் உற்பத்தியில், இந்தியா அதிக கவனம் செலுத்தி இருந்தால், இந்த நிலை ஏற்பட்டிருக்காது. இத்தகைய சூழலில், சர்வதேச வர்த்தக ஒருங்கிணைப்பின் பயனாய், நமக்கு கிடைக்கும் லாபத்தையும், பாதிப்பையும் மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியத்தை, கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது.
இழப்பை சந்திக்கும்
ஒரு விவசாயி, தன் பொருளாதாரத்தை மேம்படுத்த முடிவெடுத்து, நகர்ப்புறத்தை அணுகுகிறார் என, வைத்துக் கொள்வோம். அவர், டிராக்டரை வாடகைக்கு கொண்டு வருவார். அதை ஓட்டுவதற்கு, தினக் கூலிக்கு ஒரு ஓட்டுனரை பணியமர்த்துவார். பயிர் சாகுபடி பணிகளுக்கு, ஆட்களை வரவழைப்பார். ஆழ்துளை கிணறு பிரச்னைகளை சரி செய்ய, ஒரு வல்லுனரை அழைத்து வருவார். விதைகள், பூச்சிக் கொல்லி மருந்துகள் ஆகியவற்றை வாங்க, நகரத்திற்கு செல்வார்.
இப்படி, நகரம் சார்ந்து, தன் தேவைகளை பூர்த்தி செய்வதன் மூலம், அந்த விவசாயி, பயிர் உற்பத்திச் செலவை குறைத்து, தன் பொருளாதாரத்தை மேம்படுத்தலாம். ஆனால், சாலை மோசமாக இருந்தாலோ, போராட்டம் போன்றவற்றால், நகரில் நுழைய முடியாத சூழல் இருந்தாலோ, அவர் எப்படி பூச்சிக் கொல்லி மருந்துகளை வாங்குவார். அந்த மருந்துகள் இல்லாமல் பயிர் பாழாகி, இழப்பை சந்திக்க நேரிடும் அல்லவா.
அதற்கு பதில், அவர் உள்ளுரில் தயாரிக்கும் பூச்சி கொல்லி மருந்துகளை பயன்படுத்தி இருந்தால், பாதிப்பை தவிர்த்திருக்கலாம்.நகர்ப்புறங்களை அதிகம் சார்ந்திருப்பது எந்த அளவிற்கு, உற்பத்தி செலவை குறைக்க உதவுகிறதோ அதே அளவிற்கு, இடர்பாடு அதிகரிப்பதற்கும் வாய்ப்பளிக்கிறது. அதனால், இந்த இருஅம்சங்களுக்கும் பொதுவான வழியை தேர்வு செய்வது சிறந்தது.உள்ளூரில் கிடைக்காத கலப்பின விதைகளை, விவசாயி, நகரத்தில் வாங்கலாம். இது அவருக்கு லாபத்தை தரும். இடர்பாடும் குறைவாகவே இருக்கும்.
அதிக பலன்
அதேசமயம், அந்த விவசாயி, நகரில் இருந்து ஆட்களை வரவழைத்து பணிக்கு அமர்த்துவதால் பெறும் பயனை, பண்டிகை காலங்களில் வேலையாட்கள் சொந்த நகரங்களுக்குச் செல்லும் போது, இழந்து விடுவார்.
அவர், தன், பொருளாதாரத்தில், அதிகபட்ச பயனையும், குறைவான தாக்கத்தையும் ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு தான், வர்த்தகத்தை ஒருங்கிணைக்க வேண்டும். உதாரணமாக, ‘பாஸ்பேட்’ உரங்கள் அல்லது முன்னோடி தொழில்நுட்பங்களை உள்ளூரில் பயன்படுத்தினால், குறைந்த இடர்பாட்டில், அதிக பலன் பெறலாம்.
ஆபத்து
சரி விஷயத்திற்கு வருவோம். நாம், உள்நாட்டில் தயாரிக்கக் கூடிய வசதி இருந்தும், விலை குறைவாக உள்ளது என்பதற்காக, சீனாவில் இருந்து, வாகன உதிரிபாகங்களை இறக்குமதி செய்கிறோம். இது, தற்போது கொரோனா வைரஸ் வடிவில் நம் பொருளாதாரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியதாக மாறியுள்ளது.
விதிவிலக்குஇந்திய நிறுவனங்கள், சர்வதேச வர்த்தக ஒருங்கிணைப்பை ஒரு கட்டம் வரை தான் கொண்டு செல்ல வேண்டும். இதில், பன்னாட்டு நிறுவனங்கள் விதிவிலக்கு. அவற்றின் அடிப்படை கொள்கையே வேறு. அவை, ஆழமான வர்த்தகஒருங்கிணைப்பின் மூலம், அதிகபட்ச ஆதாயத்தை பெறுகின்றன. ஏனெனில், அவை மாற்றுத் திட்டங்களுடன் செயல்படுகின்றன.
உதாரணமாக, சீனாவில், மொபைல்போன் உற்பத்தியை நிறுத்திய பாக்ஸ்கான் நிறுவனம், மலேஷியா, தென் கொரியா, செக் குடியரசு, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ் நாடுகளில் உள்ள தொழிற்சாலைகளில் அவற்றை தயாரித்து கொண்டிருக்கிறது. ஆனால், இந்திய வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு அப்படிப்பட்ட வாய்ப்பு இல்லை. அவை இடம் மாறினால், இந்திய பொருளாதாரத்திற்கு தான் இழப்பு ஏற்படும்.
அதனால், மத்திய அரசு, தொழில் துறையின் சர்வதேச பொருளாதார ஒருங்கிணைப்பை வரையறுக்க, ஓர் அளவுகோல் நிர்ணயிக்க வேண்டும். இதன் மூலம், கொரோனா போன்ற எத்தகைய தாக்கத்தையும், சுலபமாக சமாளித்து விட முடியும்.
பாரத் ஜூன்ஜூன்வாலா
முன்னாள் பொருளாதார பேராசிரியர்,
ஐ.ஐ.எம்., பெங்களுரு.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|