பதிவு செய்த நாள்
10 பிப்2020
00:01
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள, குறைந்த வரி விகிதம் கொண்ட புதிய வருமான வரி முறையில் உள்ள சாதகம், பாதகம் பற்றி ஒரு பார்வை:
ஒவ்வோர் ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன், வருமான வரி சலுகை அறிவிக்கப்படும் எனும் எதிர்பார்ப்பு நடுத்தர மக்கள் மத்தியில் இருக்கும். இந்த எதிர்பார்ப்பு அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட, 2020 பட்ஜெட்டில் நிறைவேறியுள்ளது. குறைந்த வரி செலுத்தக்கூடிய வருமான வரி விகிதம், பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, 2.50 லட்சம் ரூபாய் வரை வரி கிடையாது.
ஐந்து லட்சம் ரூபாய் வரை, 5 சதவீதம்; 7.5 லட்சம் வரை, 10 சதவீதம்; 10 லட்சம் வரை,
15 சதவீதம்; 12.50 லட்சம் வரை, 20 சதவீதம்; 15 லட்சம் வரை 25 சதவீதம்; 15 லட்சத்திற்கு மேல், 30 சதவீதம் என வரி விகிதம் அமைந்துள்ளது.
புதிய முறை
இந்த புதிய முறையின்படி, பலரும் செலுத்த வேண்டிய வரி குறையும் என்றாலும், இது விருப்பத்தேர்வுக்கு உரியது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த குறைந்த வரி
விகிதத்தை தேர்வு செய்தால், வழக்கமாக பொருந்தக்கூடிய விலக்குகளில் பல பொருந்தாது
என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமான கழிவுகள், வரி சேமிப்பு முதலீடுகள் மூலம், வரி செலுத்தக்கூடிய வருமானத்தை
குறைக்கலாம். வருமான வரிச் சட்டம், 80 சி பிரிவின் கீழ் மட்டும், 1.50 லட்சம் விலக்கு
பெறலாம். என்.பி.எஸ்., முதலீடு மூலம் கூடுதலாக, 50 ஆயிரம் விலக்கு பெறலாம்.
புதிய வருமான வரி விகித முறையை தேர்வு செய்தால், வழக்கமான விலக்குகளின் பலனை பெற முடியாது என்பதால், பலரும் குழம்பும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு சிலருக்கு புதிய முறை வரியை குறைக்க உதவும்.
ஆனால், ஒரு சிலருக்கு, வழக்கமான விலக்குகளை விட்டுக்கொடுக்க வேண்டும் என்பதால், பாதிப்பு ஏற்படலாம். பொதுவாக, குறைந்த வருமானம் மற்றும் குறைந்த முதலீடு
கொண்டவர்களுக்கு, புதிய முறை பலன் அளிக்கும் என்று, வரி வல்லுனர்கள் கூறுகின்றனர்.
மேலும், தற்போதைய முறையில் விலக்குகள் பெறாமல், வரி செலுத்துபவர்களுக்கும், இந்த முறை ஏற்றதாக இருக்கும். உதாரணமாக, 12 லட்சத்திற்கும் குறைவான மொத்த வருமானம் கொண்டவர்கள், 1.91 லட்சத்திற்கும் குறைவான முதலீடுகள் கொண்டிருந்தால், புதிய முறை பலன் அளிக்கும்.
மேலும், புதிய முறையில் கழிவுகள், விலக்குகள் குறைவு என்பதால் வரித்தாக்கல்
செலுத்துவதும் அதிக சிக்கல் இல்லாததாக அமையும். ஆனால், ஏற்கனவே வரி சேமிப்பு
முதலீடுகளை மேற்கொண்டிருப்பவர்களுக்கு புதிய முறை பாதகமாக அமையலாம்.
கால்குலேட்டர்
அவர்கள், குறைந்த வரி விகிதம் கொண்ட புதிய முறைக்கு மாறினாலும், விலக்குகளின் பலனை பெற முடியாது என்பதால், அதிக வரி செலுத்தும் நிலை வரலாம். தற்போதைய முறையில், 2 லட்சம், வரை விலக்கு கோரி, கணிசமான பலன் பெறலாம்.எனவே, இரண்டு முறைகளில் எது பலன் அளிக்கும் என ஆராய்ந்து, அதற்கேற்ப முடிவு செய்ய வேண்டும். இதற்கான இ-கால்குலேட்டர் வசதியை வருமான வரித் துறை அறிமுகம் செய்துள்ளது.
புதிய முறையை தேர்வு செய்தாலும், அடுத்த ஆண்டு பழைய முறைக்கு மாறிக் கொள்ளலாம். ஆனால், இந்த வசதி, வர்த்தக வருமானம் இல்லாதவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|