பதிவு செய்த நாள்
10 பிப்2020
00:07
பன்னாட்டு இணைய நிறுவனங்களின் வருவாய் மீது வரி விதிப்பதற்கான வழிமுறையை இந்திய அரசு மேற்கொண்டுள்ளது. மிக முக்கியமான சுவாரசிய முன்னேற்றம் இது. இதனால் ஏற்படப் போகும் தாக்கம் என்ன?
‘இணைய வணிக நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடிக்கின்றன, அவர்கள் என்ன வரியா கட்டுகிறார்கள்?’ என்று பல வர்த்தக சங்கங்கள் போர்க்குரல் எழுப்புவதைப் பலமுறை கேட்டிருப்போம். இந்தியா மட்டுமல்ல, உலக அளவிலேயே இந்த ஏக்கம் உள்ளது.ஒவ்வொரு நாடும், இணைய வர்த்தக நிறுவனங்கள் சம்பாதிக்கும் லாபத்தின் மீது வரி விதிக்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டுள்ளன.
இணைய வணிகம் பெருகத் தொடங்கிய 2005 ஆண்டுக்குப் பிறகு இந்தக் குரல் இன்னும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கிஉள்ளது.இதை எப்படிச் செய்வது என்ற குழப்பம் நிலவி வந்தது.
பரிந்துரை
பிரான்ஸ் நாட்டில் உள்ள ‘பொருளாதாரக் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு’ எனப்படும் ஓ.இ.சி.டி. இது தொடர்பாக ஆய்வு செய்து, நெறிமுறைகளை உருவாக்கி வருகிறது. அதன்படி, இணைய நிறுவனங்களின் வருவாயை எப்படி ஒவ்வொரு நாடும் கணக்கிடுவது, அதில் உள்ள பல்வேறு வழிமுறைகள், சிக்கல்கள் என்னென்ன என்றெல்லாம் விவாதிக்கப் பட்டு வருகின்றன.
ஓ.இ.சி.டி.யின் பரிந்துரைகள், இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகிவிடும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.இந்தப் பின்னணியில் தான், இந்திய பட்ஜெட், 2020ல் வருமான வரிச் சட்டத்தில் ஒரு புதிய பிரிவை அறிமுகம் செய்து உள்ளது.இதன்படி, “இந்திய வாடிக்கையாளரிடம் காண்பிக்கப்படும் விளம்பரங்கள் மூலம், பன்னாட்டு நிறுவனங்கள் பெறும் வருவாய்; இந்தியர்களிடம் இருந்து திரட்டப்படும் தகவல்களை விற்பதன் மூலம் பெறும் வருவாய்; இந்தியர்களிடம் இருந்து திரட்டப்படும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படும்.
‘‘பொருட்கள் மற்றும் சேவைகளின் விற்பனை மூலம் பெறும் வருவாய்” ஆகியவை வரி விதிப்புக்கு உள்ளாகும்.இதற்கு, ‘புதிய நெக்சஸ் விதிகள்’ என்று பெயர். இங்கே நெக்சஸ் என்றால், இணைப்பு அல்லது உறவு என்று பொருள்.வாடிக்கையாளருக்கும் அவர் இருக்கும் நாட்டுக்கும் இடையே உள்ள வணிக உறவே கவனத்தில் கொள்ளப்படுகிறது. அதன்மூலம், அந்த நாட்டுக்குக் கிடைக்கவேண்டிய வரிவருவாய் கணக்கிடப்படுகிறது.
வழக்கம்போல், இவ்விதிகளில் உள்ள சிக்கல்கள் அலசப்படுகின்றன. விளம்பரங்களின் மூலம் வரும் வருவாயோ, பொருட்கள் மற்றும் சேவைகளை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் வருவாயோ பிரச்னை இல்லை. அவற்றை ஓரளவுக்கு கணக்கிட்டு விட முடியும். தகவல் எனப்படும் டேட்டாவை எப்படி கணக்கிடுவீர்கள்? அதற்கு என்ன பொறிமுறை இருக்கிறது?
நாம் உருவாக்கியுள்ள டேட்டா பாதுகாப்புச் சட்டம், தற்போது பார்லி நிலைக்குழுவின் பரிசீலனையில் இருக்கிறது.அதில், தனியுரிமைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டேட்டாவை எப்படி விற்பனை செய்ய முடியும்? விற்பனை செய்வதாலேயே, அதை இணைய வணிக நிறுவனங்கள் எப்படிவேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளுமே, அதன் பாதிப்புகளுக்கு யார் பொறுப்பு? அதன் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என்பன போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.
அதாவது, வாடிக்கையாளர்களின் விருப்பு வெறுப்பு, தேர்வுகள் பற்றிய தகவல்களைத் திரட்டுவதே மிகப்பெரிய பிரச்னையாகவும் அபாயமாகவும் பார்க்கப்படுகிறது.ஆனால், அந்தத் தகவல்களை எப்படி வரிவருவாய்க்கான வாய்ப்பாக மாற்ற முடியும் என்று அரசாங்கங்கள் நினைக்கின்றன. அதற்கு இந்திய அரசும் விதிவிலக்கல்ல.
கூடுதல் வருவாய்
இணைய வணிகத்தின் வருவாய் மீது, 35 சதவீத வரி விதிக்கப்படலாம் என்று கருதப் படுகிறது. அதன் மூலம், அமேசான், நெட்பிளிக்ஸ், பேஸ்புக், கூகுள் போன்ற இணைய பெருநிறுவனங்கள் வரி கட்டத் தொடங்கும்போது, இந்திய அரசுக்குக் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.ஆனால், வாடிக்கையாளர்களையும் இணைய தொழிலதிபர்களையும் இந்த விதிமுறை எப்படி பாதிக்கும்?
தற்போது, இணைய பெருநிறுவனங்கள் உருவாக்கியிருக்கும் பேரங்காடிகளில் சின்னச் சின்ன கடைகளைத் திறந்து வைத்துக்கொண்டு வியாபாரம் செய்து வருகின்றனர்.அதில் வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான விலைச் சலுகைகளை வழங்கி வருகின்றனர். நாளை, வரி விதிப்பு வரும்போது, இந்தக் கடைக்காரர்களும் தங்கள் வருவாயில் ஒரு பகுதியைச் செலுத்த வேண்டியிருக்கும். உண்மையில், அவர்கள் இதை ஒரு செலவாகத்தான் பார்ப்பர். படிப்படியாக, இந்தச் செலவை வாடிக்கையாளர் தலைமீது சுமத்தவே முயற்சி செய்வர்.
இணைய வணிகம் ஏதோ தன்னிச்சையாக நடைபெறுகிறது, அல்லது கேட்பாரற்று நடைபெறுகிறது என்ற தோற்றம் இனிமேல் மாறிவிடும். வரி வருவாய் ரீதியான சட்டத் திட்டங்கள் அமலுக்கு வரும்போது, இணைய வணிகம் மேலும் முதிர்ச்சியடையும். பல்வேறு கட்டுப்பாட்டுக்குள் அவற்றைக் கொண்டுவர முடியும்; நெறிப்படுத்தவும் முடியும்.இன்றைய தேதியில், புதிய நெக்சஸ் விதிகளில் பல விஷயங்கள் தெளிவில்லாமல் இருக்கின்றன.
ஓ.இ.சி.டி.யின் பரிந்துரைகள் வெளிவரும்போது, இதில் ஒரு வெளிச்சம் கிடைக்கும். அதே சமயம், இணைய வணிகம் என்பது வளரும் குழந்தை. நம்பிக்கையுள்ள இளைஞர்கள் தொழிலதிபர்களாக மலரக்கூடிய இடம்.அதில் வரி விதிப்புகள் ஊக்கப்படுத்துபவையாக இருக்கவேண்டுமே ஒழிய, விலகி ஓடக்கூடிய மனநிலையை உருவாக்கிவிடக் கூடாது என்பதே இளைஞர்களின் எதிர்பார்ப்பு.
– ஆர்.வெங்கடேஷ்
பத்திரிகையாளர்
pattamvenkatesh@gmail.com
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|