பதிவு செய்த நாள்
10 பிப்2020
00:12
இந்த பட்ஜெட்டில் தனி நபர் வருமான வரி சலுகைகளும், முதலீட்டு லாபங்களின் மீது வரி சலுகைகளும் இருக்க வேண்டும் என்பதே பங்குச்சந்தையின் முக்கிய எதிர்பார்ப்பு. அதே சமயத்தில், அரசு தொடர்ந்துஉட்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க, முதலீடுகளையும் செய்யவேண்டும் என, முதலீட்டாளர்கள் நினைக்கிறார்கள்.
அரசின் நிதி ஆதாரம் அதிகரிக்க புதிய வழிகள் எதுவும் இல்லாத சூழ்நிலையில் அரசால் எப்படி மேலும் சலுகைகள் தர முடியும் என்று பலருக்கு தெரிந்து இருந்தாலும், பட்ஜெட் சார்ந்த எதிர்பார்ப்புகள் ஒவ்வொரு ஆண்டும் இயல்பாக உருவாகி வருகின்றன.
வரிகளை குறைத்து வருவாயை கூட்டி, செலவு களை சமாளித்து, முதலீடுகளை அதிகரித்து, அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எளிதில் நடைமுறைப்படுத்த முடியாதது.இந்த பட்ஜெட் இதையே தெளிவுபடுத்தியது. முதலீட்டாளர்கள் இதை ஏற்றுக்கொண்டு விட்டனர். இது எப்படி ஏற்பட்டது?
நிதி ஆதாரம்
பட்ஜெட்டில் பங்கு சந்தைக்கு என்று தனித்துவமான சலுகைகள் எதுவுமில்லை என்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின், ஒருமித்த கருத்து உருவானது.இதன் அடிப்படையில் அடுத்து சந்தையில் என்ன நடக்கும் என்ற அச்சம் பல முதலீட்டாளர்களின் மனதில் இருந்தது. ஆனால், பட்ஜெட்டை தொடர்ந்து, சென்ற வாரம் நடந்த வர்த்தகம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
சந்தை சரியும் என்ற எதிர்பார்ப்பை எளிதில் கடந்துவிட்டு, சந்தை மேலும் உயர்ந்தது. முதலீட்டாளர்கள் பட்ஜெட்டின் ஏமாற்றத்தை எளிமையாக கடந்து சென்றது எதை குறிக்கிறது? எதிர்பார்ப்புகள் இருந்தாலும், அவற்றை நிறைவேற்றக்கூடிய நிதி ஆதாரம் அரசுக்கு இல்லை என்பதை முதலீட்டாளர்கள் நன்கு அறிவர்.அதனால் தான், முதலீட்டாளர்கள் தங்கள் ஏமாற்றத்தை எளிதில் கடந்து விட்டதாகவே பல சந்தை பார்வையாளர்கள் கருதுகின்றனர். இப்போது சந்தையின் கவனம் பொருளாதாரம் சார்ந்த எதிர்பார்ப்புகள் சார்ந்து நகர்ந்துள்ளது.
நம்பிக்கை
அதனால், சந்தையின் எதிர்பார்ப்புகளையும், ஏமாற்றங்களையும் கடந்து இந்திய பொருளாதாரத்தில் உலக முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகமாக இருக்கிறது.மேலும், நிறுவன மேலாளர்களின் நம்பிக்கை குறியீடு(பி.எம்.ஐ.,) தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மீண்டும் வளர்ச்சி திரும்பும் என்று தொழில் செய்பவர்களின் நம்பிக்கை தெளிவாக வெளிப்படுகிறது. ரிசர்வ் வங்கி சிறுதொழில், வாகனம் மற்றும் வீட்டு கடன்களுக்கு வட்டியை குறைக்க வழி செய்துள்ளது. இப்படி பல தரப்புகளில் நற்செய்திகள் வந்த வண்ணம் இருப்பதும் முதலீட்டாளர்களின் பார்வைகள் பட்ஜெட்டை கடக்க உதவி உள்ளது.
ஆகவே, இந்தியா, வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்க விரும்பும் பொருளாதாரங்களில் முக்கிய நாடாக பார்க்கப்படுகிறது.வரும் மாதங்களில், பொருளாதார குறியீடுகள் மீண்டும் வளர்ச்சி போக்கை வெளிப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு இப்போதே சந்தையில் வெளிப்பட துவங்கிஉள்ளது.இனி வரும் காலாண்டுகளில், பொருளாதாரம் மாற்றங்களை மேலும் பிரதிபலிக்கக்கூடும் என்பது தற்போதைய சந்தை மனநிலை. இந்த நிலைப்பாடு தான் பட்ஜெட்டை பங்குச் சந்தை உள்வாங்கி, கடந்து, உயரவும் செய்துள்ளது.
ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்
shyamsek@ithought.co.in
பங்குச் சந்தை
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|