பதிவு செய்த நாள்
20 பிப்2020
07:11
புதுடில்லி : ‘கொரோனா’ வைரஸ் தாக்குதல் நீடிக்கும் பட்சத்தில், இந்திய வாகனத் துறையில் பாதிப்புகள் ஏற்படும்; வினியோக தொடர் சங்கிலியும் பாதிக்கப்படும் என, ‘இக்ரா’ நிறுவன ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
சீனா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில், கொரோனா வைரஸ் நோய் தாக்குதல் தொடர்ந்து நீடிக்கும்பட்சத்தில், இந்தியாவின் வாகனத் துறையில் பாதிப்புகள் ஏற்படும். அதன் வினியோக தொடர் சங்கிலியும் பாதிப்புக்கு உள்ளாகும் என, தர நிர்ணய நிறுவனமான, இக்ரா தெரிவித்துள்ளது.
இந்நிறுவனம் அதன் அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் வாகன உதிரிபாக தயாரிப்பு நிறுவனங்கள், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பெரும்பாலும் சீனாவைச் சார்ந்தே உள்ளன.இந்தியாவின் வாகன பாகங்கள் இறக்குமதியில், 27 சதவீதம், சீனாவிலிருந்து இறக்குமதி ஆகிறது. இதன் மதிப்பு, 35 ஆயிரம் கோடி ரூபாய்.
புதிய முயற்சிகள்:
இந்நிலையில், சீன இறக்குமதி பாதிக்கப்பட்டால், பிரத்யேக பாகங்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகும்.சாதாரண பாகங்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள், வேறு இடங்களை நோக்கி திரும்பும். இருப்பினும், அவை அம்முயற்சிகளை மேற்கொள்ளவும், அதில் வெற்றி பெறவும் கூடுதல் காலம் பிடிக்கும். அவர்களே தயாரிப்பது எனில், அதற்கு கூடுதல் முதலீடுகள் தேவைப்படும்.மேலும், வாகன தயாரிப்பு நிறுவனங்கள், தற்போது புதிய மாசு விதிமுறையான, ‘பி.எஸ்., – 6’ அடிப்படையிலான வாகனங்களை தயாரிக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றன.
இந்நிலையில், அதற்கான முக்கியமான பாகங்களை இறக்குமதி செய்து, பயன்படுத்த வேண்டிய நிலையில் இந்நிறுவனங்கள் உள்ளன. அப்படி செய்தால் தான், புதிய முறைக்கு அவற்றால் எளிதாக மாற முடியும். ஆனால், நோய் தாக்குதல், அத்தகைய பாகங்களை இறக்குமதி செய்வதில் பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கிறது. எரிபொருள் பம்புகள், டர்போ சார்ஜர், மீட்டர் கருவிகள், எல்.இ.டி.,கள், காந்தம், காற்றுப் பைகளுக்கான சாதனங்கள், ஸ்டீயரிங் அமைப்பு சாதனங்கள் மற்றும் மின் வாகன பாகங்கள் ஆகியவற்றின் இறக்குமதியை சார்ந்து இருக்கும் நிறுவனங்கள், மிகவும் பாதிப்புகளை சந்திக்கக்கூடும்.
அதிக பாதிப்புகள்:
வர்த்தக வாகனங்கள், பயணியர் வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் ஆகிய பிரிவுகளில் பாதிப்புகள் அதிகம் இருக்கும்.அதேசமயம், டிராக்டர் போன்ற வாகனங்களின் தயாரிப்புகள், பெரும்பாலும் உள்நாட்டை சார்ந்தே இருப்பதால், அவற்றை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அதிக பாதிப்புகள் இருக்காது.வர்த்தக வாகனங்களைப் பொறுத்தவரை, எதிர்மறையான கண்ணோட்டத்தை கொண்டு உள்ளோம். தற்போதிருக்கும் நிதிக் கட்டுப்பாடுகள், பலவீனமான பொருளாதார சூழ்நிலை ஆகியவை காரணமாக, தேவைகள் தொடர்ந்து குறைந்திருக்கும்.
பயணியர் வாகனங்களைப் பொறுத்தவரையும், எதிர்மறையான கண்ணோட்டமே உள்ளது. தேவைகள் மெதுவாகத் தான் இப்பிரிவில் அதிகரிக்கும்.டிராக்டர் மற்றும் இருசக்கர வாகன பிரிவைப் பொறுத்தவரை, விளைச்சல் காரணமாக, கிராமப்புற தேவைகள் அதிகரித்து, இப்பிரிவின் நிலை ஸ்திரமானதாக இருக்கும். இருப்பினும், பி.எஸ்., 6 இரு சக்கர வாகனங்கள் விலை அதிகமாக இருப்பின், தேவைகள் குறையவும் வாய்ப்பிருக்கிறது.இவ்வாறு இக்ரா தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|