பதிவு செய்த நாள்
24 பிப்2020
03:47
கடந்த சில ஆண்டுகளாகவே, தங்கம் இறக்குமதியை குறைக்க, அரசு இறக்குமதி வரிகள் மூலம் நுகர்வை கட்டுப்படுத்தி உள்ளதும், தங்கத்தின் மீதான முதலீடுகளை காகித வடிவத்தில் மாற்ற பல முயற்சிகள் செய்ததும் அனைவரும் அறிந்ததே.
அதே சமயம், இவை எளிதில் நடக்காததற்கு காரணம், தங்கம் விலை ஏற்றம், நுகர்வுக்கு நல்லதா அல்லது நுகர்வை பாதிக்குமா என்பதே, பல தங்கம் முதலீட்டாளர்களுக்கு தொடரும் அடிப்படை குழப்பம்.தங்கத்தின் விலை, வாங்க வசதியாக, குறைவாக இருக்க வேண்டும் என்பதே நுகர்வோரின் விருப்பம். அதே சமயம், வணிகத்திலும் குறைந்த விலை தான் வளர்ச்சி சூழலுக்கு உதவும் என, நவரத்தினங்கள் மற்றும் ஆபரண தொழில் முனைவோர் நினைக்கின்றனர். இந்தச் சூழலில் தான், தங்கத்தின் விலை இந்த ஆண்டில் தொடர் ஏறுமுகம் கண்டுள்ளது.
இந்த வளர்ச்சி, சர்வதேச நிகழ்வுகளின் பிரதிபலிப்பு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கடந்த ஆண்டில், மே மாதத்தில், 32 ஆயிரத்து, 440 ரூபாய் என்று விற்ற, 10 கிராம் தங்கம், கடந்த வெள்ளி அன்று, 43 ஆயிரத்து, 25 ரூபாய்க்கு விற்றது. இன்னும் விலை ஏற்றம் ஏற்படக்கூடும் என்பதே, தங்கம் வர்த்தகத்தை கூர்ந்து கவனிக்கும் பலரது கணிப்பு.இந்தச் சூழலில், தங்கத்தின் விலை மேலும் அதிகரித்தால், அது நுகர்வை பெரிதும் பாதிக்கும் என்ற அச்சம், தங்க ஆபரண வியாபார வட்டத்தில் தெரிகிறது.
ஆனால், தங்கத்தின் விலையை நிர்ணயிக்கும் இடத்தில், இந்திய அரசும், தங்க ஆபரண தொழிலும் இல்லை என்பதே உண்மை. எது நடந்தாலும், அதைச் சார்ந்து முன்னே செல்வது மட்டுமே, இந்தியாவால் முடியும். நம் நாட்டில், தங்கத்தின் மீதான முதலீட்டு மோகத்தால், பல தரப்புகளில் இருந்து, அரசு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுவது வழக்கம். இது புரிதல் இல்லாத ஓர் எதிர்பார்ப்பு. விலை உயர்ந்தால், நுகர்வு குறையும். அதைச் சார்ந்து விலை குறையக்கூடும். இது தான் தங்க ஆபரண தொழில், விலை மீது ஏற்படுத்தும் தாக்கம். இதுவும், மற்ற நாடுகளின் நுகர்வும் குறைந்தால் மட்டுமே நடக்கும்.
இந்திய நுகர்வு மட்டும் குறைந்து, மற்ற நாடுகளின் நுகர்வு கூடினால், தங்கம் விலை இறங்க வாய்ப்பில்லை. அதே போல, பல நாடுகளின் மத்திய வங்கிகள், அவர்களுடைய அரசின் பணத்தை, தங்கத்தில் தொடர்ந்து முதலீடு செய்வதும், தங்கம் உற்பத்தியை தேவைக்கு ஏற்ற அளவு அதிகரிக்காததும், தங்கம் விலை உயர முக்கிய காரணங்கள். இந்த காரணங்கள் தொடரும் என்றே தோன்றுகிறது. மேலும், ‘கொரோனா’ வைரஸ் போன்ற நிகழ்வுகள், உலகில் அச்சத்தை அதிகரித்து, பொருளாதாரம் பற்றிய கவலைகளை பெருகச் செய்து, தங்கத்தின் விலையை மேலும் உயர்த்தி உள்ளன.
இந்த சூழல் எப்படி உருமாறி, விலை மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது யாராலும் எளிதில் கிரகிக்க முடியாது. ஆனால், விலை ஏற்றங்கள், மேலும் பல கமாடிட்டி வர்த்தகர்களை ஈர்க்கும். தங்க வர்த்தகம் இன்னும் விலை ஏறும் என்ற எதிர்பார்ப்பில் உலக தங்க வர்த்தகம் நடப்பது தெளிவாகிறது. வரும் வாரங்களில், தங்கம் விலையை கூர்ந்து கவனிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. இந்த ஏற்றம், மேலும் வலுப்பெறும் பட்சத்தில், உலக முதலீட்டு பார்வைகள் தலைகீழாகக் கூட மாறலாம். அதே சமயம், அச்சங்கள் விரைவாக குறைந்தால், தங்கத்தின் இந்த விலை உயர்வு வலுவிழக்கக் கூடும்.
தங்கம் வர்த்தகம் எந்த பக்கம் நகர்கிறது என்று நாமும் கூர்ந்து கவனிப்போம். ஷியாம் சேகர் shyamsek@ithought.co.in புரிதல் இல்லாத எதிர்பார்ப்புகடந்த சில மாதங்களாக, தங்கத்தின் விலை கிடு கிடு என உயர்ந்து,
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|