பதிவு செய்த நாள்
01 மார்2020
00:35
புதுடில்லி: மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய, நிலுவைத் தொகைக்கான பாக்கியில், ஏர்டெல் நிறுவனம், நேற்று, 8,004 கோடி ரூபாயை செலுத்தி உள்ளது.
இதையடுத்து, செலுத்த வேண்டிய முழு பாக்கித் தொகையையும் செலுத்தி விட்டதாக, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.தொலைதொடர்பு நிறுவனங்கள், அலைக்கற்றை பயன்பாடு, உரிமம் தொடர்பாக, அதன் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் அடிப்படையில், அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தாமல் இருந்தன. அந்த வகையில் பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா உள்ளிட்ட தொலைதொடர்பு நிறுவனங்கள், 1.47 லட்சம் கோடி ரூபாயை அரசுக்கு செலுத்த வேண்டியதிருந்தது. அதற்கான காலக்கெடு கடந்த ஜனவரி மாதம் முடிந்தது. ஜியோ நிறுவனம் மட்டும் அதன் நிலுவைத் தொகையை செலுத்தியது.இந்த நிலையில், இதுதொடர்பான வழக்கில், அனைத்து தொலைதொடர்பு நிறுவனங்களும், தங்களது பாக்கித்தொகையை, மார்ச் 1-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
வோடபோன் ஐடியா, 53 ஆயிரத்து, 39 கோடி ரூபாயும், ஏர்டெல் 35 ஆயிரத்து, 586 கோடி ரூபாயும் பாக்கி வைத்திருந்தன.உச்ச நீதிமன்ற தீர்ப்பினைத் தொடர்ந்து, ஏர்டெல் நிறுவனம், 10,000 கோடி ரூபாயை, கடந்த மாதம், 17ம் தேதியன்று செலுத்தியது. மார்ச் 1ம் தேதிக்குள் பாக்கித் தொகையை செலுத்த வேண்டும் என்பதால், காலக்கெடு முடிவடையும் நிலையில், கூடுதலாக, 8,004 கோடி ரூபாயை, ஏர்டெல் நிறுவனம் நேற்று செலுத்தியது.இதையடுத்து, இந்நிறுவனம் மொத்தம், 18 ஆயிரத்து, 4 கோடி ரூபாய் செலுத்தி உள்ளது. நேற்று செலுத்தப்பட்ட, 8,004 கோடி ரூபாயில், 3,004 ரூபாய் இறுதி பாக்கித் தொகைக்கானதாகும் என, ஏர்டெல் தெரிவித்துள்ளது. மேலும் மீதி, 5 ஆயிரம் கோடி ரூபாய், தற்காலிகமாக தொலைதொடர்பு துறையில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்றும், இது கணக்கீடுகளில் ஏதாவது வேறுபாடுகள் வந்தால், அதை சரிசெய்வதற்காக கூடுதலாக டெபாசிட் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.மேலும், ஏர்டெல் நிறுவனம், 2006- – 07 நிதியாண்டிலிருந்து, 2019ம் ஆண்டு, டிசம்பர், 31ம் தேதி வரையிலான காலகட்டத்தில் செலுத்த வேண்டிய தொகை, மற்றும் அதன்பிறகு நடப்பு ஆண்டில், பிப்ரவரி 29ம் தேதி வரையிலான காலத்துக்கான வட்டி ஆகியவற்றை, சுய மதிப்பீடு செய்து செலுத்தி இருப்பதாக, ஏர்டெல் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, வோடபோன் ஐடியா நிறுவனம், அதன் பாக்கி தொகையான, 57 ஆயிரம் கோடி ரூபாயில், 3,500 கோடி ரூபாயை மட்டுமே செலுத்தி உள்ளது.டாடா டெலிசர்வீசஸ்நிறுவனம், அதன் சுய மதிப்பீட்டின் அடிப்படையில், 2,197 கோடி ரூபாயை செலுத்தி உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|