பதிவு செய்த நாள்
01 மார்2020
23:58
கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு, ஒரு மாதத்திற்கு மேல் ஆன பின், கடந்த ஒரு வாரத்தில், உலக பங்கு சந்தைகள் அது குறித்த மிரட்சியை வெளிப்படுத்தியது. இது, சந்தையின் இயல்புக்கு முற்றிலும் மாறான ஒரு போக்கு.
பொதுவாக, ஒரு பிரச்னை வெடிக்கும் போது, அதன் ஆரம்ப காலத்திலேயே சந்தை அதைப் பற்றிய அச்சத்தை வெளிப்படுத்தி, கவலையினால் வீழ்ந்து, தாக்கத்தை உள்வாங்கி, வர்த்தகம் மூலம் கடந்து செல்லும். ஆனால், வைரஸ் பிரச்னை வெடித்து, ஆறு வாரங்கள் ஆன பின், சந்தை நடுக்கம் காட்டுவது அதன் இயல்புக்கு முரணானது. இந்த நடுக்கத்தின் காரணமாக, உலக சந்தையில் காணும் பணப் போக்குவரத்தின் திசை மாற்றங்கள் மேலும் வியப்பானவை.
முதலில், தங்கம் நோக்கி நகர்ந்த உலக முதலீடுகள், கடந்த வாரம் திசைமாறி, அமெரிக்க அரசின் கடன் பத்திரங்களை குவிக்கத் தாவின. இதனால், அமெரிக்க அரசின் கடன் பத்திரங்களின் மீதான வருவாய் வெகுவாக குறைந்து, அவற்றின் மதிப்பு கூடியது. அமெரிக்க பொருளாதாரம் பாதிக்கப்படும் என்ற தாமதமான புரிதலை சந்தை வெளிப்படுத்துகிறதா அல்லது, வேறு மதிப்பீடு சார்ந்த அச்சங்கள் இந்த நேரத்தில் மேலும் அதிகரித்துவிட்டதால் ஏற்பட்ட மாற்றமா?
இந்த கேள்விக்கான விடையை, உலக பங்குச் சந்தைகள் வரும் வாரங்களில் தேடும். ஆனால், அச்சம் அதிகரிக்கும் தருணத்தில், வீழ்வதற்கு காரணங்களை, சந்தை தானே தேடிக்கொள்ளும் என்பதை கடந்த வாரம் மீண்டும் உறுதி செய்தது.டவ் ஜோன்ஸ், 3000 புள்ளிகள் சரிந்தது. ஒரே வாரத்தில் புள்ளிகள் அதிகம் வீழ்ந்த சாதனையை டவ் நிகழ்த்தியது. இந்த ஆண்டின் துவக்கத்தில், கிடுகிடு என கண்ட மொத்த ஏற்றமும் இந்த ஒரு வாரத்தில் சந்தை இழந்தது.
இண்டெக்ஸ் முதலீட்டு முறையில், அமெரிக்க சமூகம், மிக அதிகமான பணத்தை சேமிப்பு வைப்பு போல உபயோகித்து வரும் இந்த தருணத்தில், இந்த சரிவு, அமெரிக்க மக்கள் மனதில் அச்சத்தை உயர்த்தி விடும். எது எளிய முதலீடு என்று எண்ணினார்களோ, அந்த முதலீடு அவர்களுக்கு வலியை கொடுக்கும் தருணம் இது.
தங்கள் சேமிப்பை அரசின், கருவூல பில்கள் மூலம் முதலீடு செய்தவர்கள், சந்தையின் மாற்றங்களில் இருந்து காக்கப்பட்டு இருக்கிறார்கள். குறைந்த வருவாய் முதலீடு என்று பொது சமூகத்தால் ஒதுக்கப்பட்ட அரசு பத்திரங்கள் இப்பொது, அமெரிக்க முதலீட்டாளர்களின் காப்பாளனாக தெரிகிறது. இந்த அரசு பத்திர மதிப்பு உயர்வில் இன்னொரு எதிர்ப்பார்ப்பும் அடங்கும்.
அமெரிக்க பெடரல் ரிசர்வ், வரும் காலாண்டுகளில் வட்டியை மேலும் குறைத்து, வளர்ச்சி தொடர உதவும் என்ற எதிர்பார்ப்பு சந்தையில் ஓங்கி நிற்கிறது. அதிபர் தேர்தலை நோக்கி நாடு போகும் போது, பொருளாதாரம் நலிந்தாற்போல காட்டிக்கொள்ள அரசு விரும்பாது. அப்படி ஒரு தோற்றம் வராமல் இருக்க, வட்டி குறைப்பு மற்றும் பண புழக்கம் ஆகிய இரண்டு கருவிகளையும், அமெரிக்கா கையிலெடுக்கும் என்ற எதிர்பார்ப்பு நோக்கி சந்தை இப்போதே நகர்ந்து விட்டது.
இந்த நகர்வு, அச்சத்தால் நடந்தாலும், அதன் எதிர்பார்ப்புகளின் நியாயத்தை நாம் எளிதில் கடந்து செல்ல முடியாது. இந்த வாரம் உலக பங்குச் சந்தைகள் கண்ட நடுக்கங்களுக்கு முரணாக, சீனாவில் இருந்து வரும் தகவல்கள் இருக்கின்றன. சகஜ நிலை சில வாரங்களில் திரும்பும் என்பது போலவும், இந்த வைரஸின் எதிர்ப்பில் சீன அரசு முன்னோடி என்பது போலவும் பிம்பங்கள் ஏற்படுத்தப்படுகின்றன.
கொரோனா வைரஸ் சில வாரங்களில் கட்டுப்பாட்டிற்குள் வந்தாலும், உலக பங்குச் சந்தைகள் மீது அது ஏற்படுத்திய தாக்கம் மாற, வெகுகாலம் ஆகும் என்று சந்தையின் முக்கிய பார்வையாளர்கள் நினைக்கிறார்கள்.
முதலீடுகள் தேர்வு செய்வதில் இருந்த மதிப்பீடு சார்ந்த கவலைகள் நீங்கி, திடீரென பல முதலீட்டு வாய்ப்புகள் நமக்கு சாதகமாக தோன்றும் சூழல் நோக்கி நாம் விறுவிறுப்பாக நகர்கிறோம். எதிர்காலம் சார்ந்த முன் நகர்வுகளே வெற்றி தரும் முதலீட்டுப் பாதையில் நம்மைக் கொண்டு செல்லும் என்பதை நினைவில் கொள்ளும் தருணம் இது.
ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்
shyamsek@ithought.co.in
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|