‘பான் கார்டு’ செயலிழந்தால் என்ன செய்வது?‘பான் கார்டு’ செயலிழந்தால் என்ன செய்வது? ...  ரூ.10.52 லட்சம் கோடி  வசூலாகாமல் போக வாய்ப்பு ரூ.10.52 லட்சம் கோடி வசூலாகாமல் போக வாய்ப்பு ...
தெரிவது ஒளிக்கீற்றா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மார்
2020
00:05

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான, 2019- –20 நிதியாண்டின், மூன்றாம் காலாண்டு, ஜி.டி.பி., சின்ன ஒளிக்கீற்றாகக் கருதப்படுகிறது. உண்மையில் வளர்ச்சி கண்ணுக்குத் தென்படுகிறதா?

அப்படி நம்பவே மனம் விரும்புகிறது. ஆனால், உண்மை அப்படி இல்லையோ என்று புத்தி சொல்கிறது. ஏனெனில், அக்டோபர் முதல் டிசம்பர் 2019 வரையிலான மூன்றாம் காலாண்டின், மொத்த உள்நாட்டு உற்பத்தி எனும், ஜி.டி.பி., 4.7 சதவீதமாக உள்ளது.

இதற்கு முந்தைய இரண்டாம் காலாண்டு, ஜி.டி.பி.,யான, 4.5 சதவீதத்தோடு ஒப்பிடும்போது, இது வளர்ச்சி தானே என்று நினைக்கத் தோன்றும். ஆனால், முதல் இரண்டு காலாண்டுகளின் திருத்தப்பட்ட மதிப்பீடுகள் வெளியாகி உள்ளன.அதன்படி, முதலாம் காலாண்டில், 5.6 சதவீதமும் இரண்டாம் காலாண்டில், 5.1 சதவீதமும் (இதுதான் முன்பு 4.5 சதவீதமாக குறிக்கப்பட்டது) வளர்ச்சி ஏற்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக பார்த்தால், 4.7 சதவீதம் என்பது, முந்தைய காலாண்டுகளைவிட குறைவுதானே!

வாய்ப்பு அதிகம்

இந்த நிதியாண்டின் மொத்த ஜி.டி.பி., 5 சதவீதமாக இருக்கும் என, கணிக்கப்பட்டுள்ளது. அப்படியென்றால், மார்ச் மாதத்துடன் முடியும், 4ஆம் காலாண்டின் வளர்ச்சி, 4.6 சதவீதமாகத் தான் இருக்கும் என்பது உள்ளுறை.இந்த மூன்றாம் காலாண்டில், விவசாயமும், சுரங்கத் துறையும் தான் வளர்ந்துள்ளன. மற்ற துறைகளில் மிக முக்கியமான உற்பத்தித் துறை, 0.2 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது.

ஏற்கெனவே இரண்டாம் காலாண்டில் அது, 0.4 சதவீதச் சரிவை பெற்றிருந்தது. அரசாங்கத்தின் தொடர்ச்சியான முதலீடு மட்டும் தான், ஜி.டி.பி., பெருமளவு சரியாமல் காப்பாற்றியிருக்கிறது.அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள், பொருளாதார வீழ்ச்சி தரை தட்டிவிட்டது, இனிமேல் வளர்ச்சி தான் என்கிறார்கள். 4.7 சதவீத வளர்ச்சி என்பதே இப்போதைய நிலவரப்படி மிகவும் குறைவான ஜி.டி.பி., இன்னும் சரியுமா சரியாதா என்பதை இப்போது சொல்வதற்கில்லை.

ஏனெனில், டிசம்பர் மாதத்தோடு முடிந்த மூன்றாம் காலாண்டே பண்டிகைக் காலம். அப்போது தான் வர்த்தகம் பெருகியது. ஏராளமான நிறுவனங்கள் விதவிதமான சலுகைகளை வழங்கி வியாபாரத்தை உயர்த்தினர்.அந்த காலகட்டத்தின், ஜி.டி.பி.,யே, 4.7 சதவீதம் தான் எனும் போது, ஜனவரி முதல் மார்ச் வரையான காலகட்டத்தில் வளர்ச்சி மேலும் தளர்ந்திருக்கவே வாய்ப்பு அதிகம்.

மேலும், உலகையே வாரிச் சுருட்டிக்கொண்டிருக்கும் பேரபாயமான கொரோனா வைரஸ், ஒவ்வொரு பங்குச் சந்தையையும் பதம் பார்த்துக்கொண்டு இருக்கிறது.நமக்கு சீனாவும், ஹாங்காங்கும் முக்கியமான நாடுகள். நாம் இவ்விரு நாடுகளுக்கும், 9 சதவீத அளவுக்கு ஏற்றமதி செய்கிறோம். இவற்றிடம் இருந்து, 17 சதவீத அளவுக்கு இறக்குமதி செய்கிறோம்.


சீனாவில், கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்ட பின்னர், அங்கே உற்பத்தி சரிந்து, இறக்குமதி அளவு குறைந்துவிட்டது.இதனால், இந்தியாவில் நடைபெறும் மருந்து தயாரிப்பு, ஆட்டோமொபைல், மின்னணு, சூரிய மின்சாரம், விவசாய உற்பத்திகள் பெரும் பாதிப்பைச் சந்திக்கும். அடுத்த சில மாதங்களில் கையிருப்பு சரக்குகள் குறையும்போது, இவற்றுக்கான விலை கடுமையாக உயரக்கூடும். அதனால் விற்பனை சரிந்து, மொத்த உள்நாட்டு உற்பத்தி மேலும் சரிவையே சந்திக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

கொரோனா வைரஸ் பாதிப்பு எவ்வளவு துாரம் தொடரும் என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது. பல நாடுகளில் சீதோஷண நிலை மாறி, வெப்பம் பெருகும்போது, கொரோனா தானாகவே குறைந்துபோய்விடக் கூடும் என்ற நம்பிக்கையும் முன்வைக்கப்படுகிறது.அதற்குள் ஏதேனும் அதிசயம் நிகழ்ந்து, கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து, வெற்றி கிடைத்துவிடாதா என்ற பதைபதைப்பும் நிலவி வருகிறது.

இலக்கை மீறிய செலவு

இதையெல்லாம் சேர்த்துப் பார்க்கும்போது, ஒரு விஷயம் தான் புரிகிறது. பட்ட காலிலேயே படும் என்று முதுமொழி சொல்லப்படுவதுண்டு. அதுபோல், பொருளாதாரத் தேக்கம் என்னும் காயத்துக்கு பல்வேறு மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளன.நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி குறைப்பு, துறை சார்ந்த சலுகைகள், வட்டி விகிதங்கள் குறைப்பு, வங்கிகளின் வாராக்கடன் கணக்கீட்டு முறைகளில் மாற்றம் ஆகியவை அறிவிக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப் பட்டன.

இதேசமயத்தில், ஜனவரி மாதத்துக்கான எட்டு அடிப்படைத் துறைகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி விகிதம் வெளியாகியுள்ளது. சென்ற ஆண்டு, ஆகஸ்டு முதல் நவம்பர் வரை வளர்ச்சியே அடையாத இத்துறைகள், தற்சமயம், 2.2 சதவீதம் வளர்ந்துள்ளன.படிப்படியாக இத்தகைய பலன்கள் வெளியே தெரியவரும் வேளையில், கொரோனா என்னும் கொடிய வில்லன் தலைகாட்டி இருக்கிறான்.

இன்றைய சூழலில், அரசாங்க முதலீடுகள் தான் தொடர்ந்து பெருகிவருகின்றன. நிதிப் பற்றாக்குறையை நாம், 7.66 லட்சம் கோடி ரூபாயில் கட்டுப்படுத்த இலக்கு நிர்ணயித்து இருந்தோம். ஆனால், ஜனவரி 2020க்குள்ளேயே நாம், 9.85 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவை எட்டிவிட்டோம். இது திட்டமிட்ட இலக்கை மீறிய செலவு தான்.

ஆனால், வளர்ச்சியை மீட்டெடுக்க வேண்டிய அவசியம் இருப்பதால், இத்தகைய செலவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்திலும் இருக்கிறோம். மூன்றாம் காலாண்டு ஜி.டி.பி., ஒரு செய்தியையே சொல்கிறது: வெளிச்சப்புள்ளி அருகில் இல்லை.
ஆர்.வெங்கடேஷ்
பத்திரிகையாளர்
pattamvenkatesh@gmail.com

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)