பதிவு செய்த நாள்
09 மார்2020
00:34
யெஸ் பேங்கின் வீழ்ச்சி, ஒரு மாறுதலான முதலீட்டு சூழலை நமக்கு வெளிப்படுத்தி உள்ளது. இந்த சூழலின் முக்கிய அம்சம் என்னவென்றால், வெவ்வேறு முதலீட்டாளர்களின் மாறுபட்ட, ஒன்றுக்கொன்று முரணான முதலீட்டு அணுகுமுறைகள் தான்.
வங்கியின் முன்னாள் தலைவரும், நிறுவனருமான, ராணா கபூர், ரிசர்வ் வங்கியின் வற்புறுத்தலின் பேரில் விலகி, ஓராண்டை கடந்தும், இந்த நிகழ்வுகள் தொடர்ந்து அரங்கேறி உள்ளன. இந்த இடைக்காலத்தில், இந்த வங்கியின் பங்குதாரர்களும், வைப்பு கணக்கு முதலீட்டாளர்களும், கடன் பத்திர உரிமையாளர்களும் வங்கியின் எதிர்காலம் சார்ந்து வெளிப்படுத்திய பார்வையில் இருந்த வேறுபாடுகள் நமக்கு ஒரு முதலீட்டுப் பாடம்.
அதிர்ச்சி
அதுவும், பொதுவெளியில் இந்த வங்கி பற்றிய அனைத்து சிக்கல்களும் தெளிவாக பதிவு செய்யப்பட்டு இருந்தும், இந்த மூன்று வகையான முதலீட்டாளர்களின் அணுகுமுறை சார்ந்த முரண்கள் அதிர்ச்சி தருகின்றன. சிறு முதலீட்டாளர்கள், இந்த பங்கை தொடர்ந்து வாங்கி குவித்து, அதன் முக்கிய பங்குதாரர் குழுமமாக மாறிவிட்டனர்.
நிறுவன முதலீட்டாளர்கள் விற்ற பெருவாரியான பங்குகள், சில்லறை முதலீட்டாளர்களின் வசம் கைமாறின. அதுவும், ராணா கபூரின் சொந்த பங்குகள் விற்கப்பட்ட போதும், அதையும் சில்லறை முதலீட்டாளர்கள் வாங்கி விட்டனர். சில்லறை முதலீட்டாளர்களின் கண்மூடித்தனம், இப்போதைய தகவல் உலகில் பரவும் முதலீட்டு கருத்துக்களின் செல்வாக்கு பற்றியும், அதன் தாக்கம் பற்றியும், தனிப்பட்ட முடிவெடுக்கும் திறன் பற்றியும் முக்கிய கேள்விகளை எழுப்புகின்றன.
கடந்த ஓராண்டில், பங்குகள் தொடர் விலை சரிவைக் கண்டன. விலை சரிய சரிய, பங்குகள் இன்னும் அதிகமாக வாங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. வங்கி சரிகிறது. அதன் எதிர்காலம் கேள்விக்குறி ஆகிவிட்டது என்பது நன்கு தெரிந்தும், முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கிக் குவித்தார்கள்.
இதற்கு நேர் எதிர் பாதையை எடுத்தன, யெஸ் பேங்கின் கடன் பத்திரங்கள். வட்டி அதிகம் இருக்கும் என்று முதலீடு செய்யப்பட, இவை தொடர்ந்து, 30 சதவீத மதிப்பிழந்து, வாங்க ஆள் இன்றி, இதே காலகட்டத்தில் திணறியது குறிப்பிடத்தக்கது. இதன் அடிப்படை விளக்கம், கடன் சந்தை இந்த நிறுவன எதிர்காலத்தை தெளிவாக பார்த்தது என்பதையே குறிக்கிறது.
வைப்புக் கணக்கு முதலீட்டாளர்களில், நிறுவனங்களும் பெரும் செல்வந்தர்களும், வங்கியை விட்டு பணத்தை வெளியே எடுத்தனர். அவர்களின் தெளிவான அணுகுமுறை, வங்கியின் பிரச்னைகளை புரிந்து, தங்களை காத்துக்கொண்டனர் என்பதை காட்டுகிறது. ஆனால், இந்த வங்கியில் சம்பள கணக்குகள் அதிகம் இருந்த காரணத்தால், அதனால் அந்த கணக்குகளின் உரிமையாளர்களின் சேமிப்புகளை வைப்பு கணக்குகளாக மாற்ற முடிந்தது. பலர் வசதிக்காகவும், வட்டிக்காகவும் சிந்திக்காமல் முதலீடு செய்தார்கள்.
சந்தேகம்
விவரமறிந்தவர்கள் இந்த வங்கியை தவிர்த்தார்கள் என்பது தான் உண்மை. ஆக, வைப்பு கணக்கு வைத்திருந்தவர்களும், வங்கியின் கடன் பத்திரங்கள் வாங்கியோரும் காட்டிய சந்தேகங்களும், அச்சங்களும் சில்லறை பங்கு முதலீட்டாளர்களால் பொருட்படுத்தப் பட வில்லை என்பது மிக தெளிவாக வெளிப்படுகிறது. இந்த அச்சம், மியூசுவல் பண்டின் அறிவு சார்ந்த முதலீட்டாளர்களான நிதி மேலாளர்களால் கூட காட்டப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இனியாவது, கடன் சந்தைகளின் புரிதல் பங்கு சந்தையிலும் வெளிப்பட வேண்டும் என்பதே யெஸ் பேங்க் நமக்கு கற்று கொடுத்த பாடம்.
ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்
shyamsek@ithought.co.in
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|