பதிவு செய்த நாள்
13 மார்2020
00:13
புதுடில்லி:‘கொரோனா’ வைரஸ் அச்சத்தால், இந்திய நிதிச் சந்தைகள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், ரிசர்வ் வங்கி, பணப் புழக்கத்தை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளில் இறங்கி, பல அறிவிப்புகளை வெளியிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் முதற்கட்டமாக திங்களன்று, 200 கோடி அமெரிக்க டாலர்களை விற்பனை செய்து, பணப்புழக்கத்தை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது.இது குறித்து, உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:கொரோனா அச்சத்தின் காரணமாக, பங்குச் சந்தைகள் உள்ளிட்ட அனைத்து நிதிச் சந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பணப் புழக்கத்தை அதிகரிக்கும் வகையிலான முயற்சிகளை, ரிசர்வ் வங்கி மேற்கொள்ள இருக்கிறது.
கொரோனா வைரஸ் தொற்று மற்றும் உலகளாவிய எண்ணெய் விலைகளில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக, உள்நாட்டு அன்னிய செலாவணி சந்தையில் பணப்புழக்கத்தை ஊக்குவிக்கும் முயற்சியாக, ரிசர்வ் வங்கி, 200 கோடி அமெரிக்க டாலரை வங்கிகளுக்கு விற்பனை செய்ய இருக்கிறது.அடுத்தது, வட்டி விகிதத்தை குறைப்பது. ஆனால், அதை இப்போதே அறிவிக்க முடியாது.
வரும், 31ம் தேதி ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கூட்டம் நடைபெறுகிறது. அதில் தான் வட்டி விகிதத்தை குறைப்பதா, வேண்டாமா என்பது குறித்த முடிவை எடுக்கும். ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தை குறைத்து, பணப் புழக்கத்தை அதிகரிக்க விரும்பினாலும், சில்லரை விலை பணவீக்கம், ரிசர்வ் வங்கியின் சவுகரியமான நிலையில் இல்லை என்பது, தடையாக இருக்கிறது.
இருப்பினும், இடைக்காலத்தில், 0.25 – 0.40 சதவீதம் அளவிலான வட்டி குறைப்பை அறிவிக்கவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையே, ‘கோத்ரெஜ்’ குழுமத்தின் தலைவர் அதி கோத்ரெஜ், ரிசர்வ் வங்கி, 0.50 சதவீதம் வட்டி குறைப்பை மேற்கொள்ள வேண்டும் என, தெரிவித்துள்ளார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|