பதிவு செய்த நாள்
16 மார்2020
00:05
அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை இல்லாதவர்களையும் வாய் பிளக்க வைத்திருக்கிறது, கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி. அதன் பலன் பொதுமக்களுக்கு வந்து சேருமா?
கடந்த வாரம், ரஷ்யாவுக்கும், சவுதி அரேபியாவுக்கும் ஏற்பட்ட வர்த்தக மோதலில், கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்தது. சர்வதேச சந்தையில், பீப்பாய் ஒன்றுக்கு, 65 டாலர் வரை விற்ற கச்சா எண்ணெய், 31 டாலருக்கு சரிதந்து. இந்தக் கட்டுரை எழுதப்படும்போது, கச்சா எண்ணெயின் விலை, 36.17 டாலர். ஆனால், கடந்த ஒரு வாரத்தில், பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு சரிந்தன?
பெட்ரோல் விலை, 1 ரூபாயும்; டீசல் விலை, 1 ரூபாய், 20 காசுகளும் தான் குறைந்தன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை உயரும்போதெல்லாம் உடனே, இங்கே பெட்ரோலியப் பொருட்களின் விலை அதிகமாகின்றன. ஆனால், குறையும்போது, அதன் பலன் முழுமையாக சாதாரணவர்களுக்கு ஏன் கிடைக்க மாட்டேன் என்கிறது?
லாபம்
மூன்று முக்கிய காரணங்கள் தான் தென்படுகின்றன.முதலாவது, உற்பத்தி செலவை கணக்கிடுவதில் உள்ள சூத்திரம். இதற்கு, வர்த்தக சம விலை – ‘டிரேட் பேரிட்டி பிரைஸ்’ கணக்கீடு என்று பெயர்.இதன்படி, ஒரு பொருள் இறக்குமதி செய்யப்படும் விலையில், 80 சதவீதமும், அதே பொருள் ஏற்றுமதி செய்யப்பட்டால் கிடைக்கும் விலையில், 20 சதவீதமும் சேர்த்து எடுத்துக் கொள்ளப்பட்டு, விலை நிர்ணயம் செய்யப்படும்.
பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், எந்த வகையிலும் விலை வீழ்ச்சியால் பெரிதும் பாதிக்கப்படாமல் பாதுகாப்பதற்கான ஏற்பாடு, இந்தச் சூத்திரத்துக்குள் இருப்பது தான் இதன் அதிசயம். ஒரு பீப்பாயில் இருந்து, 159 லிட்டர் பெட்ரோலியப் பொருட்கள் கிடைக்கும். விலை வீழ்ச்சிக்கு முன், பெட்ரோலின் அடக்க உற்பத்தி செலவு, 30.08 ரூபாய். மார்ச், 12ன் நிலவரப்படி அதுவே, 17.79 ரூபாய். இது தான் அடிப்படை விலை. இதன் மீது தான், மத்திய அரசு கலால் வரி விதிக்க, மாநில அரசுகள் மதிப்புக்கூட்டு –வாட் வரியை விதிக்கின்றன.
வரிகளையெல்லாம் அப்படியே வைத்துக் கொண்டாலும், கிட்டத்தட்ட, 13 ரூபாய் லாபம். மத்திய அரசு, கலால் வரியாக பெட்ரோல் மீது, 19.98 ரூபாயும், டீசல் மீது, 15.83 ரூபாயும் வசூலிக்கிறது. கடந்த சனிக்கிழமை, கலால் வரியை, லிட்டருக்கு மேலும், 3 ரூபாய் அதிகரித்து விட்டது.இதன் மீது, தமிழக அரசு மதிப்புக்கூட்டு வரி விதிக்கிறது. அது பெட்ரோலுக்கு, 34 சதவீதம், டீசலுக்கு, 25 சதவீதம்.
பெரிய கணக்குகளுக்குள் செல்லாமல், கொஞ்சம் எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், அடிப்படை உற்பத்தி செலவைப் போல், இரண்டு மடங்கு தொகையை நாம் விலையாகக் கொடுத்துக் கொண்டுஇருக்கிறோம்.
பிரச்னை எங்கே?
வர்த்தக சம விலை கணக்கீட்டிலேயே தவறு. பல ஆண்டுகளாக இந்த விஷயத்தை பல எண்ணெய் துறை நிபுணர்களும் சுட்டிக் காட்டி, அதை ஏற்றுமதி சம விலையாக – ‘எக்ஸ்போர்ட் பேரிட்டி பிரைஸ்’ மாற்றியமைக்க வேண்டும் என்று தெரிவித்து வருகின்றனர்.
இன்னொரு பிரச்னை, ஜனவரி மாதத்தில் இருந்து, ரூபாய் மதிப்பு சரிந்து வருவது. கிட்டத்தட்ட, 4 சதவீதம் வரை சரிவு ஏற்பட்டுள்ளது. இதனாலும், உடனடியாக சில்லரை விலையை மாற்றியமைக்க தயக்கம் காட்டுகின்றனர்.அடுத்தொரு பிரச்னை, விலை நிர்ணயத்தில் பின்பற்றப்படும் நடைமுறை; 15 நாட்கள் வரை காத்திருக்கின்றனர். அந்த, 15 நாட்களில் ஏற்படும் விலையேற்றம் மற்றும் இறக்கத்தை ஒட்டியே விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
இதனாலும், உடனடியாக மக்களுக்கு விலை வீழ்ச்சியின் பயன் வந்து சேருவதில் தாமதம் ஏற்படுகிறது.இரண்டு, மூன்று அம்சங்கள் தான் யோசிக்க வைக்கின்றன. 2017 முதல், நம்ம ஊரில் பெட்ரோலுடன் எத்தனால் கலக்கப்படுகிறது. தற்போது, 7.2 சதவீதம் வரை, பெட்ரோலுடன் எத்தனால் சேர்க்கப்படுகிறது. எத்தனால் விலையோ, லிட்டருக்கு, 43.75 முதல், 54.27 ரூபாய் வரை தான் உள்ளது. இதற்கும் சேர்த்து தான் நாம் பெட்ரோல் விலையை கொடுத்துக் கொண்டு இருக்கிறோம்!
நவீனமானவை
பொதுத் துறை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை விட்டுவிடுங்கள். தனியார் துறை நிறுவனங்கள், எவ்வளவு லாபம் பார்க்கின்றன என்று கணக்கிட்டுப் பாருங்கள். இத்தனைக்கும் அவர்கள் பயன்படுத்தும் சுத்திகரிப்பு தொழில்நுட்பங்கள் நவீனமானவை; திறன் அதிகமானவை. அவர்களால், பொதுத் துறை நிறுவனங்களை விட, தங்கள் நிலையங்களில் இன்னும் சல்லிசான விலைக்கு பெட்ரோல், டீசலை விற்க முடியும். அரசுக்கு கொள்ளை லாபமோ இல்லையோ, தனியாருக்கு நல்ல லாபம்.
பெட்ரோலும், டீசலும் தான் நம் உற்பத்திக்கான உண்மையான சக்கரங்கள். ‘வாராது வந்த மாமணி’ போல் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி வந்திருக்கிறது. இதன் அத்தனை பயனையும் அரசாங்கமே வைத்துக் கொள்வது ஏற்புடையது அல்ல. விலை நிர்ணயிப்பதற்கான அடிப்படைக் கணக்கீட்டை மாற்றியமைத்து, 15 நாட்கள் காத்திருப்பை இன்னும் சுருக்கி, கலால் மற்றும் வாட் வரி சதவீதங்களில் கொஞ்சம் சலுகை காட்டலாம்.
இதன் மூலம், தேக்கத்தில் தத்தளிக்கும் பொருளாதாரத்துக்கு உயிர் மூச்சு கிடைக்கும். பொருளாதாரச் சுழற்சி ஏற்படுவதற்கு, இயற்கையாக நமக்கு அளித்துள்ள அற்புத வாய்ப்பு இது. பயன்படுத்திக் கொள்வதே புத்திசாலித்தனம்.
ஆர்.வெங்கடேஷ்
பத்திரிகையாளர்
pattamvenkatesh@gmail.com
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|