பதிவு செய்த நாள்
16 மார்2020
00:11
பங்குச் சந்தைகள் விழுவதும், எழுவதும் புதிதல்ல! காலம் மாற மாற, சந்தை இன்னும் அதிக ஏற்ற, இறக்கங்களை நமக்கு தருகிறது. புள்ளி அளவிலும் சரி, சதவீத அளவிலும் சரி, சந்தையில் நாம் காணும் தினசரி மாற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
ஏற்றம் காணும்போது நமக்கு உற்சாகமூட்டும் இந்த மாற்றங்கள், இறக்கம் காணும்போது நமக்குள் பீதியை ஊட்டுவதும் உண்டு. கடந்த இரண்டு வாரங்கள், தொடர்ந்து பீதியை ஊட்டிய காலகட்டமாக அமைந்தன. அந்த அச்சத்தின் உச்சமாக, வெள்ளியன்று, பங்குச் சந்தைகளின் குறியீடான, 'சென்செக்ஸ்' மற்றும் 'நிப்டி' 10 சதவீதம் வீழ்ச்சி கண்டு, சந்தையை, 45 நிமிடத்திற்கு மூடச் செய்தன. இது, அசாதாரண அச்சத்தின் வெளிப்பாடு என்று அனைவரும் அறிவர்.
பேராசை
ஆனாலும், அப்படி நடக்கும் போது, எத்தனை பேருக்கு பங்குகளை வாங்கத் தைரியம் வரும்? அதே சமயம், 2009ல், தேர்தல் முடிவு அறிவிப்பு வந்த பின், இதே குறியீடுகள், 10 சதவீதம் உயர்ந்து, சந்தை வர்த்தகம் நிறுத்தப்பட்ட போது, நாம் எப்படி நடந்து கொண்டோம்? சந்தை ஒரே நாளில், 10 சதவீதம் ஏறினால் பேராசைப்படுவதும், 10 சதவீதம் சரிந்தால் அச்சப்படுவதும், முதலீட்டாளர்களின் பொதுவான இயல்பு.
ஆனால், இந்த இயல்புக்கு மாறாக, நாம் எப்படி நடக்கிறோம் என்பது தான், நம்மை முதலீடு வெற்றி நோக்கி கொண்டு செல்லும். நேற்று கண்ட பதற்றம், சமீபகால அச்சங்களின் உச்சம் என்றே சொல்ல வேண்டும். ஆனால், இத்தகைய உச்ச அச்சம் குறையும்போது, சந்தை, குறுகிய காலத்தில் மீண்டும் உயரும்.எல்லாரும் மீண்டும் அச்சம் நீங்கி, கவலையில் இருந்து மீண்டு வருவர். ஆனால், இந்த மனமாற்றம் நிலைத்து நிற்க, பல பொருளாதார ஆதாரங்கள் தொடர்ந்து உதவ வேண்டும்.
இப்போது இருக்கும் வைரஸ் சார்ந்த நிலையாமை, அத்தகைய ஆதாரங்கள் வெளிப்
படுவதற்கு கூட உதவாது. ஆகவே, இனி தொடர்ந்து வரும் பொருளாதார குறியீடுகள், உலகத்தில் மீண்டும் சகஜ நிலை திரும்புவதை உறுதி செய்ய, கால அவகாசம் தேவை. வரும் காலாண்டுகளில், முதலில் வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு, உலகம் முழுதும் முடங்கியவற்றின் நடமாட்டம் திரும்ப வேண்டும். மக்கள் நடமாட்டம் இயல்பு நிலைக்கு வர வேண்டும்.
இப்போது, அன்னிய நாடுகளில் இருந்து, அவரவர் சொந்த நாடுகளுக்கு நடக்கும் பண வரத்துகள் திசை மாறி, மீண்டும் முதலீட்டில் அதிக லாபம் வரும் நாடுகளில் உயர வேண்டும்.இப்படி பல தொடர் நிகழ்வுகள் நடக்க வேண்டும் என்பதை, முதலில் நாம் மனதில் கொள்வோம். ஒவ்வொரு நாட்டின் அரசும், பொருளாதார வளர்ச்சி திரும்ப, பல அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இயல்பு நிலை
இந்திய அரசு என்ன செய்யப் போகிறது என்ற தெளிவும், அரசின் நடவடிக்கைகள் ஏற்படுத்தப் போகும் தாக்கமும் தெளிவாக நமக்கு வெளிப்பட வேண்டும். அச்சம் உச்சம் தொட்டு விட்டது என்று உறுதி செய்து கொள்வது தான், முதலீட்டுப் பயணத்தின் அடுத்த கட்டம். அதன் நீட்சியாக, பொருளாதார இயல்பு நிலை திரும்ப வேண்டும்.
shyamsek@ithought.co.in
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|