பதிவு செய்த நாள்
23 மார்2020
04:13
‘கொரோனா’ கொள்ளைநோயை எதிர்கொள்வது தொடர்பாக பிரதமர் ஆற்றிய உரையில், நிதி அமைச்சர் தலைமையில், பொருளாதாரப் பணிக்குழு ஒன்றை அமைக்கவிருப்பதாகத் தெரிவித்தார். இந்த அசாதாரண தருணத்தில், அது என்னவெல்லாம் செய்ய வேண்டும்?இரண்டே வாரங்களில் இந்தியாவில் நிலைமை தலைகீழ் ஆகும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
ஓலா, ஊபர், மேரூ போன்ற வாடகை வாகன சேவைகளின் தேவை, 53 சதவீதம் குறைந்துவிட்டது. பெட்ரோல், டீசல் தேவை, 11 சதவீதம் குறைந்துவிட்டது. தொடர்ந்து ஒவ்வொரு பெரிய விமான நிலையத்திலும் வெளிநாட்டு விமானங்கள் மட்டுமல்ல; உள்நாட்டு விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.முன்னெச்சரிக்கைமாநில எல்லைகள் அடைக்கப்படுகின்றன. பேருந்து சேவைகள் முடங்கியுள்ளன. முட்டை, கறிக்கோழியின் விலைகள் அதலபாதாளத்தில். பல ஓட்டல்களில் ஈ மொய்த்துக் கொண்டிருக்கின்றன. அவ்வளவு ஏன், திருப்பதி கோவிலில், பக்தர்கள் சேவையை நிறுத்தி வைக்க வேண்டிய நிலைமை.
இவையெல்லாம் எதிர்பாராத முன்னெச்சரிக்கை முடக்கங்கள். கொரோனாவின் வீரியம் என்ன என்று முழுமையாகத் தெரியாத நிலையில், நம்மை நாமே காத்துக் கொள்ள வேண்டியது அவசியம் தான். இந்தச் சூழல் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள், என்ன இழப்பை ஏற்படுத்தும் என்பதையும் இப்போது கணிக்க முடியவில்லை. ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லமுடியும். வழக்கமான வாழ்க்கை இனி இருக்கப் போவதில்லை. இதை எதிர்கொள்வதற்கு, குறிப்பாக இந்தச் சமயத்தில் ஏழை எளியவர்கள், மத்தியமர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு என்ன செய்யவேண்டும் என்பதுதான் முக்கியம்.சந்திப்புநிதி அமைச்சர் தலைமையிலான குழு பல்வேறு தொழிற்துறையினரைச் சந்தித்து வருகிறது.
குறிப்பாக, விமானப் போக்குவரத்து, சுற்றுலா மற்றும் ஓட்டல்கள், சிறு, குறு, நடுத்தரத் தொழிற்துறையினரைச் சந்தித்துள்ளனர். ஒவ்வொரு அமைப்பும் வைக்கும் பல்வேறு கோரிக்கைகளை, நிதி அமைச்சர் காது கொடுத்துக் கேட்டு வருவதாகத் தெரிகிறது.நாம் ஏழை எளியவர்களுக்கும் மத்தியமர்களுக்கும் என்ன செய்யலாம் என்பதை முன்வைப்போம்.இந்த விஷயத்தில், கொரோனா கொள்ளை நோய் பாதிப்புக்குள்ளான ஒவ்வொரு மேலைநாடும் நமக்கு வழிகாட்டுகின்றன.சலுகைகனடா நாடு, ‘அவசரகால பாதுகாப்பு சலுகை’ என்ற பெயரில், பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை, 47,374 ரூபாயை – 900 கனேடிய டாலர்களை, அந்நாட்டில் உள்ளோருக்கு வழங்கவிருக்கிறது.
இது அடுத்த, 15 வாரங்களுக்குத் தொடரும். ஹாங்காங் நாட்டில், ஒவ்வொரு நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும், 96,497 ரூபாயை – 10,000 ஹாங்காங் டாலர்கள், அந்நாடு அவசர கால நிதியாக வழங்கவிருக்கிறது.பிரான்ஸ் அரசாங்கம், கொரோனாவால் பாதிக்கப்பட்ட சுயதொழில் செய்வோருக்கும், தனிநபர்களுக்கும், 1 லட்சத்து, 22 ஆயிரம் ரூபாயை – 1,500 யூரோக்களை, வழங்கவிருக்கிறது.
இதேபோல், அமெரிக்காவில் வரி செலுத்தும் ஒவ்வொருவருக்கும், 72 ஆயிரத்து, 622 ரூபாயை –1,000 டாலர்களை, அமெரிக்க அரசு வழங்கலாம் என்று உத்தேசித்திருக்கிறது. இவையெல்லாம் தனிநபர்களின் வங்கிக் கணக்குகளுக்குச் செய்யப்படும் நேரடி பணப்பட்டுவாடா. எத்தகைய பிற உதவிகளைச் செய்தாலும், கையில் நேரடியாகப் பணத்தைக் கொடுப்பது ஒன்றே அவர்களைக் காப்பதற்கான வழி என்று இந்நாடுகள் கருதுகின்றன.இந்தியாவில் இதைப் பற்றி பேச்சு எழுந்துள்ளது. நேரடி பணப் பட்டுவாடாவை தேசிய அளவில் செய்ய வாய்ப்பிருப்பதாக, இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
ரூ.1,000இந்த விஷயத்தில், உ.பி.,யின் யோகி ஆதித்யநாத் முந்திக்கொண்டு விட்டார். ஏழைத் தொழிலாளர்களுக்கு, நாளொன்றுக்கு, 1,000 ரூபாய் வழங்க முடிவெடுத்துள்ளது வரவேற்கத்தக்கது.பொருளாதார அறிஞரான சி.ரங்கராஜன், இத்தகைய முயற்சியை மேற்கொள்வதற்கு நம்மிடம் போதிய பணபலம் இல்லை என்று தெரிவித்திருக்க, சி.ஐ.ஐ.,யின் தலைவரான விக்ரம் கிர்லோஸ்கர் வேறொரு வழியைத் தெரிவித்துள்ளார். கச்சா எண்ணெய் விலைச் சரிவால், இந்தியாவுக்கு சுமார், 3.78 லட்சம் கோடி ரூபாய் – 50 பில்லியன் டாலர்கள், லாபம் கிடைத்திருக்கிறது.
இதை மக்கள் நலனுக்கு நேரடியாகப் பயன்படுத்தலாம் என்பது இவரது ஆலோசனை. வாய்ப்புவேறு சில ஆலோசனைகளும் முன்வைக்கப்படுகின்றன. வாடகை, எரிவாயு, மின்சாரக் கட்டணங்களை உடனடியாகச் செலுத்தவேண்டாம் என, பிரான்ஸ் நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது, நல்ல முன்னுதாரணம்.இந்தியாவிலும் இதற்கான வாய்ப்புகள் அதிகம். தண்ணீர் வரி, சொத்து வரி, கார்ப்பரேஷன் வரி, வீட்டுக் கடன், வாகனக் கடன்களுக்கான, இ.எம்.ஐ., தொலைபேசி கட்டணம் என, மத்தியமர்கள் படும் அவஸ்தைகள் சொல்லி மாளாது.அரசாங்கம் சம்பந்தப்பட்ட அத்தனை இடங்களிலும், கட்டணங்களை மூன்று மாதங்களுக்கு தள்ளிவைக்க வாய்ப்பு வழங்கலாம்.
நீண்டகால அளவில் தள்ளிவைக்கக் கூடியவையும் உண்டு. மாணவர்களுக்கான கல்விக் கடன் தவணை, காப்பீட்டுக்கான பிரிமியம் தொகை ஆகியவற்றை இன்னும் தள்ளிப்போடலாம். ஆண்டு முடிவில் செலுத்த வேண்டிய வருமான வரிக்கான, கால அவகாசத்தை நீட்டிக்கலாம். பள்ளிக்கூட, கல்லுாரிக் கட்டணங்களைச் செலுத்துவதற்கும் தவணை முறையை அறிமுகப்படுத்தலாம்.எதிர்வருவது எத்தகைய அபாயம் என்றே தெரியவில்லை. அடுத்த மூன்று மாதங்களுக்குள் கொரோனா பாதிப்பு நீங்கிவிடுமா என்றும் தெரியவில்லை. இந்நிலையில், குறைந்தபட்சம், பொருளாதார ரீதியான இடர்களையேனும் பகிர்ந்து கொள்ள, நமக்குக் கூடுதலாக ஒரு தோள் தேவை. அரசாங்கம் தான் நம் சுமைகளைத் தாங்கும் தோளாக, தோழனாக இருக்க வேண்டும். ஆர்.வெங்கடேஷ்பத்திரிகையாளர்pattamvenkatesh@gmail.com
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|