பதிவு செய்த நாள்
10 ஏப்2020
23:09
புதுடில்லி:நடப்பு ஏப்ரல் மாதத்தில், நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் தேவை, 66 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
விமான எரிபொருள், 90 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது.கொரோனா வைரஸ் தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில், நாடு முடக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நாட்டின் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் தேவையில் மிகப்பெரும் அளவு சரிவு ஏற்பட்டுள்ளது.மேலும், பெரும்பாலான விமான சேவைகள் நிறுத்தப்பட்டு, தரை இறக்கப்பட்டதால், அவற்றுக்கான எரிபொருள் தேவையும் சரிந்துள்ளது.
இந்தியாவில், கடந்த ஆண்டு, ஏப்ரல் மாதத்தில், 24 லட்சம் டன் பெட்ரோல் பயன்படுத்தப்பட்டு உள்ளது. டீசலை பொறுத்தவரை, 73 லட்சம் டன் டீசல் பயன்படுத்தப்பட்டுள்ளது. விமானங்களுக்கான எரிபொருள், 6.45 லட்சம் டன் பயன்படுத்தப்பட்டுள்ளது.கடந்த மார்ச் மாதத்தில், 10 ஆண்டுகளில் இல்லாத வகையில், எரிபொருள் தேவை குறைந்து போனது. அதன் தொடர்ச்சியாக,ஏப்ரல் மாதத்திலும் எரிபொருள் தேவை சரிந்துள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில், நாட்டின் எரிபொருள் தேவை, 24.23 சதவீதம் குறைந்து, 56.5 லட்சம் டன் ஆக சரிந்தது. இந்த மிகப்பெரிய சரிவுக்கு காரணம், சரக்கு வாகனங்கள் மற்றும் ரயில்கள், தங்கள் போக்குவரத்தை நிறுத்தியது தான்.கடந்த மார்ச் மாதத்தில், பெட்ரோல் விற்பனை, 16.37 சதவீதம் குறைந்து விட்டது.
நாடு முடக்கப்பட்டதால், கார் மற்றும் இருசக்கர வாகனங்களின் போக்குவரத்து குறைந்து, தேவையும் சரிந்தது.மாறாக, சமையல் எரிவாயு தேவை மட்டுமே, மார்ச் மாதத்தில், 1.9 சதவீதம் அதிகரித்துள்ளது.நடப்பு ஏப்ரலில், சமையல் எரிவாயு தேவை, 30 சதவீதம் அதிகரிக்கும் என தோராயமாக தற்போது கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|