பதிவு செய்த நாள்
10 ஏப்2020
23:12
புதுடில்லி:நுகர்பொருள் துறையைச் சேர்ந்த, ‘கோத்ரேஜ் கன்ஸ்யூமர்’ மற்றும் ‘மேரிகோ’ நிறுவனங்கள், கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக, தங்களுடைய முதல் காலாண்டு வருவாய் பாதிக்கப்படும் என தெரிவித்துள்ளன.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, உள்நாட்டிலும், உலக அளவிலும் வணிகம் பாதிக்கப்பட்டு இருப்பதால், நடப்பு நிதியாண்டின், முதல் காலாண்டில், வருவாய் பாதிப்புக்கு உள்ளாகும் என, இந்த இரு முன்னணி நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.எதிர்பாராத சூழலில், விற்பனை பாதிக்கப்பட்டு இருப்பதால், அதை சரிசெய்யும் வகையில், தீவிரமான நிதி மேலாண்மை நடவடிக்கைகளில் இறங்கி உள்ளதாகவும் தெரிவித்துள்ளன.
மேலும், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வணிகம் குறைந்துள்ளதால், கடந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் கிடைத்த வருவாயை விட, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் குறைவாகவே வருவாய் இருக்கும் என, மேரிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.மார்ச் மாத இறுதியில் இருந்து, விற்பனை, கிட்டத்தட்ட இல்லை என்று சொல்லத்தக்க வகையில் மாறிவிட்டதால், இதன் பாதிப்பு, முதல் காலாண்டில் நிச்சயம் இருக்குமென, கோத்ரேஜ் கன்ஸ்யூமர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிறுவனம், விற்பனையில் இரட்டை இலக்க சரிவை சந்தித்து உள்ளதாக அறிவித்து உள்ளது.கடந்த மார்ச் மாதத்தின், கடைசி, 12 நாட்களில், தேவைகள் நிலையாக இருந்த போதிலும், வினியோகத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. அதேசமயம், சோப்பு உள்ளிட்ட பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளது என கோத்ரேஜ் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
வினியோக நிலைமை படிப்படியாக சரியாகும் போது, மீண்டும் விற்பனை அதிகரிக்கும் என்றும், குறிப்பாக, தனிநபர் ஆரோக்கிய பொருட்கள் மற்றும் வீடுகளுக்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவற்றின் விற்பனை அதிகரிக்கும் என்றும், கோத்ரேஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|