பதிவு செய்த நாள்
11 ஏப்2020
22:56
பெங்களூரு:தற்போது, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, நாட்டில் விதிக்கப்பட்டு இருக்கும் தடைகள் திரும்பப் பெறப்பட்ட பின், எந்தெந்த துறைகள் எழுச்சி பெறும் என, நிபுணர்கள் சிலர், தங்கள் கருத்துக்களை தெரிவித்து உள்ளனர்.
தடை நீக்கத்திற்குப் பின், மக்களின் மனநிலையைப் பொறுத்தே, துறைகள் மீண்டும் வளர்ச்சிக்கு திரும்பும். அதேசமயம், சில துறைகள், தடை நீக்கத்திற்குப் பின், வேகமாக மீண்டு, குறிப்பாக, மருந்து துறை, மருத்துவ மற்றும் சுகாதார உபகரணங்கள் துறை, ‘டிஜிட்டல்’ துறை ஆகியவை, வைரஸ் பாதிப்பின் பின்னணியில் உயர்வை காணும் என, நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பழைய நிலை திரும்பும்
இது குறித்து, தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை முன்னாள் செயலர், ஆர்.சந்திரசேகர் கூறியதாவது:டிஜிட்டல் உலகத்துடன் இணைந்திருக்கும் நிறுவனங்கள், டிஜிட்டல் பொழுதுபோக்கு, சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட துறைகள் சிறப்பாகச் செயல்படும். கூடவே, அத்தியாவசியப் பொருட்களுக்கான தேவை அதிகரிக்கும் என்பதால், அவை சம்பந்தப்பட்ட துறைகளும், பழைய நிலைக்கு விரைவில் திரும்பும். மக்கள் ரிஸ்க் எடுக்க விரும்ப மாட்டார்கள்.
மனித மனோபாவம் காரணமாக பாதிக்கப்பட்ட துறைகள், வளர்ச்சி காண நாட்கள் பிடிக்கும். அதேசமயம், அரசு உத்தரவால், தற்போது தடையில் இருக்கும் துறைகள், விரைவாக வளர்ச்சி காணும்.இவ்வாறு அவர் கூறினார்.அரசு துறை சார்ந்த அதிகாரிகள் சிலர் கூறும்போது, போக்குவரத்து, கிடங்கு ஆகியவை உடனடியாக பழைய நிலைக்கு திரும்பும் என்றனர்.அதேசமயம், சில துறைகள், மக்களின் மனநிலையைப் பொறுத்தே, மீண்டும் பழைய நிலைக்கு வரும் என்றும் தெரிவித்தனர்.
வலைதள வர்த்தகம்
குறிப்பாக, பயணம் மேற்கொள்வது, ஓட்டலில் தங்குவது, வெளிநாடு செல்வது, ‘மால்’களில் பொருட்களை வாங்கச் செல்வது என பலவற்றை சொல்லலாம் என, தெரிவித்தனர்.பெரு நிறுவன அதிகாரி, ஒருவர் கூறும்போது, வலைதள வர்த்தகம், வீட்டு வினியோகம் ஆகிய இரண்டும், மேலும் வளர்ச்சி பெறும். சுற்றுலாவை பொறுத்தவரை, வளர்ச்சி காண்பதற்கு நீண்ட நாட்கள் ஆகும். மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பர்.
இதற்கு முன், அறையில் யார் யார் தங்கி இருந்தனர் என்பதை அறிய முடியாத நிலையில், ஓட்டல் அறையில் தங்க தயங்குவர். எனவே, இவை சார்ந்த துறைகள் எழுச்சி பெற காலதாமதமாகும் என, தெரிவித்தார்.மொத்தத்தில், நிலைமை சரியானாலும் கூட, பல துறைகளின் வளர்ச்சி, மக்களின் மனோபாவம் சார்ந்தே இருக்கிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|