பதிவு செய்த நாள்
20 ஏப்2020
03:24
இன்று முதல் ஒரு சில பகுதிகளில், ஒரு சில தொழில்களையும், வேலைகளையும் தொடங்குவதற்கு வாய்ப்பு கிடைக்கும். ஒரு மாதத்துக்கு மேலான ஊரடங்குக்குப் பிறகு, மீண்டும் சிறு, குறு, நடுத்தரத் தொழில்களை ஆரம்பிக்கும் இச்சமயத்தில், அவர்களுக்கு என்னவிதமான உதவிகள் தேவைப்படும்?
கி.மு., கி.பி., என்று சொல்வது போல், இனிமேல் கொரோனாவுக்கு முன், கொரோனாவுக்குப் பின் என்று பேசவேண்டிய நிலைக்கு வந்துள்ளோம். புதிய யதார்த்தம் ஒன்று தலையெடுத்துள்ளது. அதாவது, இனிமேல் கூட்டமாக நின்று தொழில்களில் ஈடுபடமுடியாது. நெருக்கமான இடங்களில் கூட தனிமனித இடைவெளி அவசியம். இதை வாடிக்கையாளர்கள் மட்டுமல்ல, பணியாளர்களும் கூட வலியுறுத்தத் தொடங்குவார்கள். அடிப்படையில், கொரோனாவுக்கு மாற்று மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை இத்தகைய அச்சம் நிலவவே செய்யும்.ஆனாலும், வாழ்க்கை நிலைகுத்தி நிற்க முடியாதல்லவா? அதனால், கடந்த வாரத்தில் இருந்தே ஒருசில தொழிற்சாலைகளை மீண்டும் இயக்குவதற்கான முயற்சிகள் தொடங்கியுள்ளன. இன்றைக்கு, நோய்த்தொற்று இல்லாத பகுதிகளில் மேலும் சில தொழில்கள் தொடங்க வாய்ப்புண்டு. ஆனால், எல்லோருக்கும் பல கவலைகள் உள்ளன. தீர்மானமில்லாத சூழல் நிலவுகிறது. இந்தியாவில் மட்டுமல்ல; உலகம் எங்குமே இது தான் சூழ்நிலை.
ஐந்து விதமான அணுகுமுறைகளை மேற்கொண்டு, பல நாட்டு அரசாங்கங்கள் இதை எதிர்கொள்கின்றன. அவை, வட்டிவிகித குறைப்புகள், நிதி உதவிகள், வரி ஒத்திவைப்புகள், வங்கித் துறைக்குள் நிதி மூலதனத்தை அதிகப்படுத்துதல், வட்டி தளர்வுகள் ஆகியவையே.இந்த நடைமுறைகள் இந்தியாவிலும் பின்பற்றப்படுகின்றன. சென்ற வாரம் தான், ஆர்.பி.ஐ. ஆளுனர், ரிவர்ஸ் ரெப்போ விகிதத்தை வரலாறு காணாத விதத்தில் குறைத்தார். தற்போது அந்த விகிதம், 4 சதவீதத்தில் இருந்து, 3.75 சதவீதமாக குறைந்துள்ளது. பொதுவாக, தங்களிடம் உபரியாக இருக்கும் தொகையை, ஆர்.பி.ஐ.,யிடம், வர்த்தக வங்கிகள் இருப்பு வைக்கும். இதற்குக் கிடைக்கும் வட்டியே ரிவர்ஸ் ரெப்போ என்பது. அந்த வட்டி விகிதத்தைக் குறைப்பதன் மூலம், வங்கிகள் கூடுதல் தொகையை இருப்பு வைக்காது. மாறாக, தொழில்களில் முதலீடு செய்ய வற்புறுத்தப்படும்.
இதனால், வங்கித் துறைக்குள் கூடுதல் பணம் புழங்கும். அதாவது, சிறு,குறு, நடுத்தரத் தொழில்கள் கூடுதல் கடன்களைக் கோர முடியும். இதன் இன்னொரு முகம் தான், நிதி உதவிகள். அமெரிக்கா உட்பட, சிறு தொழில்களை மீட்பதற்கென்றே நிதி ஒதுக்கீடு செய்துள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை முதல், இதற்காக மனுச் செய்தவர்களுக்கு கூடுதல் நிதி வழங்கப்படுகிறது. அமெரிக்கா மேற்கொண்டுள்ள ஒரு புத்திசாலித்தனமான உத்தி கவனம் பெறுகிறது. வங்கிகள் தான் நிதி உதவி செய்ய வேண்டும். ஆனால், ஒருவேளை நாளை இந்தக் கடன்கள் வாராக்கடன்கள் ஆகிவிட்டால், அதன் அத்தனை சுமையும் வங்கிகளின் மேல் தானே விழும்!
அதன், நிதி நிர்வாகமே கேள்விக்குள்ளாகும். அதனால், அமெரிக்க அரசு, இதற்கென்று சிறப்புத் தொகுப்பு நிதியம் எனப்படும், 'ஸ்பெஷல் பர்ப்பஸ் வெஹிக்கிள்' ஒன்றை உருவாக்கியுள்ளது. வங்கிகள் இதனிடம் இருந்து கடன் பெற்று, சிறு தொழில்களுக்கு வழங்கும். பணம் திரும்ப அடைக்கப்பட அடைக்கப்பட, அந்தத் தொகை நிதியத்துக்குத் திருப்பிச் செலுத்தப்படும். இதன்மூலம், வங்கிகள் தைரியமான கடன் கொடுக்க முடியும்.டென்மார்க் போன்ற நாடுகளில், வேறு விதமான உதவிகள் செய்யப்படுகின்றன. அந்த நாட்டு அரசாங்கம், தொழிலக முதலாளிகளையும் தொழிற்சங்கத்தினரையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இந்த அபாயகரமான காலக்கட்டத்தில், பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளம் குறையக்கூடாது. ஆனால், தொழிலகங்களால் சம்பளங்களை முழுமையாக வழங்க முடியாமல் போகலாம்.இதற்கு என்ன வழி?
பணியாளர்களின் சம்பளத்தில், 75 சதவீதத்தை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள, தொழிலகம் மிச்சமுள்ள, 25 சதவீத சம்பளத்தைக் கொடுத்தால் போதுமானது. நிலைமை சீரான பின்னர், தொழிலகங்கள் மீண்டும் பழைய அளவுக்கு உற்பத்தியை மேற்கொள்ளவும் கடுமையாக உழைக்கவும் தொழிற்சங்கங்கள் உறுதியளிக்கின்றன. இதற்கு 'ஊதிய மானியம்' என்று பெயர். இங்கிலாந்து இதுபோல், 80 சதவீத ஊதிய மானியம் வழங்க, தென்கொரியா, 70 சதவீதமும், நெதர்லாந்து, 90 சதவீதமும் வழங்க ஒப்புக்கொண்டுள்ளன.இந்த அணுகுமுறையின் மூலம், அடுத்த மூன்று மாதங்களுக்கு சிறு தொழில் நிறுவனங்கள் கொஞ்சம் மூச்சுவிட முடியும். ஒவ்வொரு மாதமும் ஊதியத்துக்கான தொகையை திரட்ட வேண்டிய அழுத்தம் அவற்றுக்கு இல்லை.
இன்னும் சில நாடுகளில், கடை வாடகைகளையும் அரசாங்கமே ஏற்றுக் கொள்கின்றது. அரசாங்கத்துக்குச் செலுத்த வேண்டிய வரிகளிலும் மூன்று மாதங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய தொழிற்கடன்கள் ஏதும் இருந்தாலும், அதற்கான மாதாந்திர தவணைகளும் தள்ளுபடி செய்யப்படுகின்றன அல்லது, ஒத்தி வைக்கப்படுகின்றன.கட்டுமானத் துறை, சிறுவணிகம் போன்ற ஒருசில துறைகள் தான் அதிகப் பணியாளர்களை ஈடுபடுத்தியுள்ளது. அத்தகைய தொழில் முனைவோருக்கு முதலில் உதவிகள் மேற்கொள்வதன் மூலம், மீண்டும் வேலைவாய்ப்புகளை உருவாக்க பல அரசுகள் முயற்சிகள் மேற்கொள்கின்றன.பழைய உலகம் இனி இல்லை. அப்படியானால், புதிய உலகத்துக்கு ஏற்ப சிறு, குறு, நடுத்தரத் தொழில்களைத் திறனும் தகுதியும் பெற வைப்பது மிகவும் முக்கியம். பல நாடுகள் இதைத் தான் செய்ய முனைகின்றன. நாம் போக வேண்டிய பாதையும் இது தான்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|