பதிவு செய்த நாள்
21 ஏப்2020
08:01
கொரோனா 'லாக்டவுன்' துவங்கி, கிட்டதட்ட ஒருமாதத்தை கடந்திருக்கிறோம். இந்நிலையில், நமக்கு நல்ல, நம்பிக்கையான தகவல்கள் பரவத்தொடங்கி இருக்கின்றன. ஒன்று, இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு, அடுத்த, 11 மாதங்களில், இறக்குமதி, சமாளிக்கும் அளவுக்கு இருக்கும். இரண்டு, 'கொரோனா' பரவல் நாடு முழுவதும் கட்டுப்படுத்தப் பட்டிருக்கிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களையும், தொழில்துறையினரையும், மத்திய, மாநில அரசுகள் கவனித்து நிவாரண அறிவிப்புகள் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கின்றன. அரசின் நிவாரணங்கள், இரண்டு விதமாக, மக்களையும், தொழில்துறையினரையும் சென்றடைகின்றன. ஒன்று 'பிஸ்கல் பாலிசி'; மற்றொன்று 'மானிட்டரி பாலிசி'.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அரசே நேரடியாக (அவரவர் வங்கி கணக்கில்) நிவாரணம், நிதி வழங்குவது 'பிஸ்கல் பாலிசி'. ஏற்கனவே, மார்ச் 26ல், 1.75 லட்சம் கோடிக்கான நிவாரணம் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. மற்றொன்று, மானிட்டரி பாலிசி. அது, ரிசர்வ் வங்கி வாயிலாக செயல்படுத்தப்படும். கொரோனா தாக்கத்துக்கு பின், அனைத்து தரப்பினருக்கும் வங்கி கடன் தவணைகளில், 3 மாதம் தள்ளி வைப்பு உட்பட பல சலுகைகள் அளிக்கப்பட்டன. மேலும், சி.ஆர்.ஆர்., ரிவர்ஸ் ரெப்போ அறிவிப்புகள் மூலம் 3.75 லட்சம் கோடிக்கான நிதி வங்கிகள் பயன்பாட்டுக்கு வந்தன.
வங்கிகளின் கடமை
இந்நிலையில், இரண்டாவது முறையாகவும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. உற்பத்தி தொடங்கி மீண்டு வரவும், பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கவும், தொழில்துறையினருக்கு நடைமுறை மூலதனம் அவசியம் தேவை. அவை வங்கிகள் தான், அந்தந்த வாடிக்கையாளர்களுக்கு மனமுவந்து வழங்க வேண்டும்.
இரண்டாவது முறையாக, ரிசர்வ் வங்கி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. நபார்டு, தேசிய வீட்டு வசதி வங்கி, சிறுதொழில் வங்கிகள் உட்பட, நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை, தனியார் துறை, வங்கி பணிகள் சாராத நிதி நிறுவனங்களை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும் அறிவிப்புகள் அது.
50 ஆயிரம் கோடி 'ரெடி!'
* வங்கிகள், தங்கள் டெபாசிட்டுகளை, ரிசர்வ் வங்கியில் வைத்து, அதற்கு வட்டி பெறுவது தான் ரிவர்ஸ் ரெப்போ. முதல் அறிவிப்பில் 4.9 என்று இருந்ததை, 4 சதவீதம் ஆக குறைத்த ரிசர்வ் வங்கி, தற்போது, 3.75 சதவீதமாக குறைத்துள்ளது. இதனால், ரிசர்வ் வங்கியில் பணத்தை போடாமல், வணிக வாடிக்கையாளர்களின் தொழில் அபிவிருத்திக்காக, கடன்களை வங்கிகள் வழங்க வாய்ப்புள்ளன.
* இலக்குடன் கூடிய நீண்டகால கடன் (டி.எல்.டி.ஆர்.ஓ., - Targeted Long Term Repo Operations) நடவடிக்கையாக, வங்கிகளுக்கு ரூ.50 ஆயிரம் கோடி ரிசர்வ் வங்கி வழங்க உள்ளது. இந்த 'ரீபைனான்ஸ்' தொகை மூலம், எம்.எஸ்.எம்.இ., மற்றும் தகுதி வாய்ந்த தொழில்துறை யினருக்கு வங்கிகள் கடன் வழங்க முன்வரும். அறிவிப்பு மட்டும் போதாது, 'வணிக வாடிக்கையாளர்களுக்கு தெம்பா, கடன் கொடுங்க' என, ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும், வங்கி நிர்வாகங்களுக்கும், மேலாளர்களுக்கும் நம்பிக்கையூட்ட வேண்டும்.
மாநிலங்களுக்கு நிம்மதி
* மாநில அரசுகளுக்கு கடன் வழங்கக்கூடிய, டபிள்யு.எம்.ஏ., (Ways and means advances) வரம்பு, 30 சதவீதம் அதிகரிக்கப்படும் என, ஏப்ரல் முதல் தேதியே ரிசர்வ் வங்கி அறிவித்தது. தற்போது கூடுதலாக 60 சதவீதம் வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.
இது, நடப்பாண்டு செப்., 30 வரை அமலில் இருக்கும். பல மாநிலங்கள் நிதி பற்றாக்குறையுடன் உள்ளன. பல மாநிலங்கள் மத்திய அரசு தரவேண்டிய ஜி.எஸ்.டி., பங்கை மட்டுமே நம்பிக் கொண்டிருக்கின்றன. வரியினங்களில், மத்திய அரசுக்கே திட்டமிட்டபடி வருவாய் இல்லாததால், மாநிலங்கள் பணமின்றி தடுமாறாமல் இருக்க, இந்த டபிள்யு.எம்.ஏ., வரம்பு உயர்வு உதவும்.ரிசர்வ் வங்கியிடம் கடனாக, மாநிலங்கள் பெறும் இத்தொகை, இடையில் சூறையாடப்படாமல், நலத்திட்டங்களுக்கு செலவிடப்படும்.வராக்கடன் ஆகாது
* அடுத்தாக, கடன் தவணை திருப்பி செலுத்தாவிட்டால், வராக்கடன் (என்.பி.ஏ. - Non-performing loan) என அறிவிக்கப்பட்டு, நம் சொத்து முடக்கப்பட்டு விடுமோ? தொழிலுக்காக மீண்டும் கடன்பெற வழியின்றி போய்விடுமோ? என்று தொழில் நிறுவனங்கள், அச்சமின்றி தொழில் தொடர ஒரு முக்கிய அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, 2020 மார்ச் முதல் தேதியில் இருந்து, மே 31ம் தேதி வரை வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டிய கடன்பாக்கி தவணைகளை தள்ளிவைக்க வங்கிகள் அறிவுறுத்தப்பட்டு ள்ளன. வங்கிகளின் வராக்கடன் மதிப்பீட்டில், இந்த, 90 நாட்கள் சேர்க்கப்படாது என அறிவிக்கப் பட்டுள்ளது. இதுதான் தொழில்துறையினருக்கான பெரும் நிம்மதி அறிவிப்பு. இது வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கும் நீட்டிக்கப்பட உள்ளது.
* உள்கட்டமைப்பில் வராத, வணிக ரீதியான கட்டுமானத்துறைக்கு, ரிசர்வ் வங்கி இன்னொரு அறிவிப்பு தந்துள்ளது. அதாவது, எதிர்பாராத காரணங்களால் தொழில் தாமதமாகும் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான திட்டங்களின் வங்கிக் கடன்களுக்கான, வர்த்தக நடவடிக்கை தொடங்கும் தேதி (டி.சி.சி.ஓ., - Date of commencement of commercial operations) வழக்கமான ஓராண்டு நீட்டிப்புடன் கூடுதலாக ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது, கட்டுமானத்துறையினருக்கு இது ஒரு சாதக அம்சம்.
* அதேபோல, வங்கிகள் வைத்திருக்கக்கூடிய ரொக்கமாகக் கூடிய சொத்துகள், அதாவது, எல்.சி.ஆர்., (Liquidity coverage ratio) நுாறு சதவீதத்தில் இருந்து,80 சதவீதமாக உடனடியாக குறைக்க பட்டுள்ளது. மேலும், வங்கிகள், அடுத்த அறிவிப்பு வரும் வரைக்கும், டிவிடெண்ட் அறிவிக்கவோ, வழங்கவோ முடியாது. இவையெல்லாம், கடன் கேட்டு வருபவர்களிடம் பணமில்லை என்று வங்கிகள் கைவிரிக்காமல் இருப்பதற்காக செய்யப்பட்டுள்ள அருமையான நடவடிக்கைகள்.
தலைநிமிரும் வேளாண்மை
'நபார்டு'க்கு ரூ.25 ஆயிரம் கோடி, 'சிட்பி'க்கு ரூ.15 ஆயிரம் கோடி, என்.எச்.பி.,க்கு ரூ. 10 ஆயிரம் கோடி வழங்கப்பட உள்ளது. நபார்டுக்கு வழங்கும் நிதியின் மூலம், மண்டல கிராமிய வங்கிகள், கூட்டுறவு வங்கிகளில் மறுமுதலீடு செய்ய முடியும். இதன்மூலம், நாட்டில் வேளாண் உற்பத்தி உயிர்ப்பிக்கப்பட வாய்ப்புள்ளது. 'சிட்பி'க்கு அளிக்கப்பட்டுள்ள நிதி, சிறுதொழில்கள் ஊக்கம் பெறுவதற்கும், என்.எச்.பி.,க்கு வழங்கப்பட்டுள்ள நிதி, வீடு, கட்டுமான தொழில் ஏற்றம் பெறவும் உதவும்.இந்தியாவில், வேளாண், சிறுதொழில், கட்டுமானம் ஆகிய மூன்று துறைகள் தான், அதிகளவில் வேலை வாய்ப்புகளை அளிக்கின்றன. இந்த மூன்று துறைகளும் மீண்டும் உயிர்ப்பெற, ரூ.50 ஆயிரம் கோடி திட்டமிடப்பட்டுள்ளது.
தொழில் துறையினரின் எதிர்பார்ப்பு
ரிசர்வ் வங்கியின் பல்வேறு நடவடிக்கைகளால், நாட்டில் உள்ள பொதுத்துறை, தனியார் வங்கிகள் மற்றும் என்.பி.எப்.சி., கைகளில் பணம் புழங்க இருக்கிறது.எனவே, வங்கிகளும், என்.பி.எப்.சி.,க்களும், தயக்கம் காட்டாமல், உரிய தொழில் அமைப்புகள், விவசாயிகள், கட்டுமான தொழில்களுக்கு கடன் வழங்கி, நாட்டின் பொருளாதாரம் மீண்டும் எழுச்சி பெற உதவ வேண்டும் என்பதே, தொழில்துறையினரின் எதிர்பார்ப்பு.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|