பதிவு செய்த நாள்
27 ஏப்2020
02:45
பண விஷயத்தை வெறும் பொருளாதார அடிப்படையில் மட்டும் பார்த்தால், அதை வெற்றிகரமாக கையாள முடியாது.
அதை ஒரு உளவியல் அடிப்படையில் புரிந்து கொண்டால் மட்டும் தான் வெற்றி பெற முடியும்.ஓர் எண்ணிக்கையாக மட்டும் செல்வத்தை உங்களால் வசப்படுத்த முடியாது. செல்வம் சேர, உங்களை தகுதிபடுத்திக் கொள்ள வேண்டும். சரியான எண்ணமும் செயலும் முக்கியம். இதற்கு தான் உளவியல் அறிவும் ஆலோசனையும் தேவைப்படுகிறது.ஏன் உங்களுக்கு பணம் தேவை என்ற கேள்வியை முதலில் கேளுங்கள். அது உங்கள் எண்ணத்தை தெளிவுபடுத்தும்.பயணம்ஏன் என்பது தெரிந்து பின், அதற்கு என்ன செய்யப் போகிறீர்கள் என்று பட்டியல் இடுங்கள். இது உங்கள் செயல்களின் வீரியத்தை தெரியப்படுத்தும். எண்ணம் தான் திசை காட்டி. செயல் உங்கள் பயணம்.
எண்ணம் வலிமையாகவும் தெளிவாகவும் இருந்தால், அது உங்களை குறிக்கோளை நோக்கி கொண்டு செல்லும். அதன் பின் சரியான உழைப்பும் நிர்வாகமும் தான் வெற்றியை ஊர்ஜிதப்படுத்துகிறது. பெரிய நோக்கங்கள் கொண்ட பலருக்கு முதலீடு என்று கையில் எதுவும் இருந்தது கிடையாது. ஆனால், அந்த நோக்கத்தின் வலிமை அவர்களை வலிமையான வழிமுறைகளுக்கு இட்டுச் செல்லும்.இன்று நம் தேசத்தில் இருக்கும் பல அமைப்புகள், வெறுங்கையுடன் தொடங்கியவை தான்.
ஆனால் அவர்கள் அனைவருக்கும் ஒரு தெளிவான தொலைநோக்கு பார்வை இருந்தது. அதனால் தான் ஜெயித்தார்கள். உங்கள் தொலைநோக்கு பார்வை என்ன? அது தெரிந்தால் அதை நிறைவேற்றுவதற்கு தேவையான பணம் கண்டிப்பாக உங்களுக்கு கிட்டும்.'கல்யாணம் வச்சப்போ கையில காசில்ல. எப்படியோ கடைசியில நினைச்ச தொகை வந்து ஜாம் ஜாம்னு நடந்துச்சு!' என்று சொல்வதை கேட்டிருக்கிறோம். அது தான் நோக்கத்தின் வலிமை. கார் ஷெட்டில் கம்பெனி ஆரம்பத்த பில்கேட்ஸின் கனவு, ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கம்ப்யூட்டர் இருக்க வேண்டும் என்பது.
அதற்குத் தேவையான அனைத்தும் அவருக்கு கிடைத்தது. அதற்கான முழு அர்ப்பணிப்பையும் அவர் செய்தார். வெறும் ஆசைகள் மட்டும் பணம் ஈட்டுவதில்லை. அதற்கான உழைப்பும் தியாகமும் தான் பணத்தையும் வெற்றியையும் கொண்டு குவிக்கிறது. என் நண்பர் ஒருவர், முகேஷ் அம்பானியின் குழுவில் வேலை செய்பவர். அவர் சொன்ன சம்பவம் இது. பெரும்பாலான நேரங்களில், இரவு, 10:00 மணிக்கு தான் முகேஷ் அம்பானி முக்கிய பரிசீலனை கூட்டங்களை நடத்துவாராம். ஒரு முறை ஒரு புதிய வர்த்தகத்திற்கு, 600 கடைகள் துவக்கவேண்டியிருந்தது.
பெருங்கனவு வேண்டும்அனைத்து கடைகளின் வரைபடங்களுடன் சந்திப்பு முடிந்து, வாங்கிச் சென்றவர், மறுநாள் அதிகாலை, 4:00 மணிக்குள் அத்தனை வரை படங்களையும் பார்த்து, திருத்தங்களுடன் ஒப்புதல் அளித்தாராம். எப்போது உறங்குகிறார், எப்போது பணிபுரிகிறார் என்பதே தெரியாது என்பார் நண்பர்.பணம் சேர்த்தல், பணம் காத்தல் இரண்டுமே மிக கடின உழைப்பை கோரும். அப்படி உழைக்க பெருங்கனவு வேண்டும். அதனால் தான் சொல்கிறேன், பணம் வேண்டும் என்று எண்ணுவதை விட, பெருங்கனவு வேண்டும்.பெரிது என்பது பணத்தின் மதிப்பில் அல்ல, உங்கள் குறிக்கோளின் மேன்மையில்.
எந்த பெரிய எண்ணமும் இல்லாமல், சொகுசாக வாழ வசதி வேண்டும், பணம் வேண்டும் என்று எண்ணுபவர்கள், கண்டிப்பாக கடின உழைப்பிற்கு தயாராக இருக்க மாட்டார்கள். அதனால் தான் சுலபமாக குறுக்கு வழியைத் தேடுகின்றனர். வேலை, தொழில், வாழ்க்கை அனைத்திலும் ஏற்றத்தாழ்வுகள் வந்து போகும். ஆனால், கொண்ட நோக்கங்கள் திடமாக இருந்தால், அவை நம்மை முன்னேற்றப் பாதையில் தக்க வைக்கும். பிற வழிகளில் அலைக்கழிக்காது.எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவன் தவறிழைக்க வாய்ப்புகள் அதிகம். இந்த குறிக்கோளைத் தான் அடைய வேண்டும் என்று எண்ணுபவன் தடைகள் தாண்டி வெற்றி பெறுவான்.
வெற்றியுடன் செல்வமும் சேர்ந்திருக்கும். உங்கள் தொழிலில் எல்லா விதத்திலும் சிறந்து விளங்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் பணி செய்யும்பொழுது உங்களைத் தேடி செல்வம் வரும். அதற்கு தேவையான முதல் முதலீடு என்ன தெரியுமா? உங்கள் திறன் வளர்ப்பில் முதலீடு செய்வது தான். உங்கள் வேலை அல்லது தொழில் திறன் ஒன்று தான் உங்களுக்கு செல்வம் சேர காரணமாக இருக்கும்.அதைத் தொடர்ந்து கூர்மைபடுத்த வேண்டியது உங்கள் கடமை. சந்தையில் உங்கள் மதிப்பு கூட இது வழி வகுக்கும்; புதிய சிந்தனைகள் பிறக்கும்; புதிய தொடர்புகள் கிட்டும்.
முதலீடு செய்யுங்கள்கடைசியாக நீங்கள் என்ன புத்தகம் வாசித்தீர்கள்? யாரிடம் தொழில் ஆலோசனை கேட்டீர்கள்? எந்த புதிய படிப்பு படித்தீர்கள்? எந்த புதிய தொழில் கூடத்திற்கு சென்றீர்கள்? உங்கள் தொழில் துறை பற்றிய புதிய போக்குகள் என்ன என்று தெரியுமா? போட்டியாளர்களிடமே தொழில் சார்ந்த ஆக்கபூர்வமான உறவு உண்டா? இந்த கேள்விகளுக்கு திருப்தியான பதில்கள் இருந்தால், நீங்கள் உங்களின் மேல் சரியான முதலீடுகள் செய்து கொண்டிருக்கிறீர்கள்.அது உங்களை தொழிலில் தக்க வைத்து சிறப்பான இடத்திற்கு இட்டுச் செல்லும்.மீதம் எவ்வளவு உள்ளது என்று தெரியாமல், நாம் செலவளிக்கும் பெரும் செல்வம் நம் நேரம். அதை உங்கள் வேலை அல்லது தொழில் மேம்பாட்டிற்கு அதிகம் செலவளியுங்கள்.
கொரோனா காரணமாக வீட்டில் அடைபட்டு கொண்டுள்ள நாம் இந்த நேரத்தை, உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு முதலீடு செய்யுங்கள்.இந்த தகவல் யுகத்தில், வித்தை தான் செல்வத்திற்கு வித்து. லட்சுமி கடாட்சம் வேண்டும் என்றால் சரஸ்வதி கடாட்சம் வேண்டும்!- பணம் பெருகும்.
டாக்டர் ஆர். கார்த்திகேயன்
கட்டுரையளர், உளவியல் மற்றும் நிர்வாக ஆலோசகர்,
gemba.karthikeyan@gmail.com
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|