பதிவு செய்த நாள்
27 ஏப்2020
02:53
கொரோனா கொள்ளைநோய் காலத்தில் ஏழை, எளியவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதைப் போன்றே, குறு, சிறு, நடுத்தரத் தொழில்களும் மோசமாக நழிவடைந்துள்ளன.
உலக நாடுகள் ஒவ்வொன்றும் அவர்களைக் கைதுாக்கிவிட பல்வேறு நிதி உதவிகளை அளித்து வருகின்றன. இந்தியாவிலும் இரண்டாவது நிதி உதவித் திட்டத்துக்காக எல்லாரும் காத்திருக்கின்றனர். இங்கே பின்பற்றப்படும் அணுகுமுறை என்ன?26 சதவீதம் செலவு நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட பின்னர், நிதி அமைச்சர், 1.70 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, முதல் நிதி உதவித் திட்டத்தை அறிவித்தார். அதில், ஏழை எளியவர்களுக்கு நேரடிப் பணப்பட்டுவாடா, விவசாயிகளுக்கு, 2,000 ரூபாய் நிதி உதவி போன்ற அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. அதன் பின், மத்திய ரிசர்வ் வங்கி, ரெப்போ விகிதத்தை மாற்றியமைத்தது. எண்ணற்ற இதர நிதிச் சலுகைகளையும், திருத்தங்களையும் அறிவித்தது. இதன்மூலம், வங்கிகளிலும், இதர நிதி நிறுவனங்களிலும், 3.74 லட்சம் கோடி ரூபாய் பணப்புழக்கம் ஏற்பட வழிசெய்தது.
சென்ற வாரம், ரிவர்ஸ் ரெப்போ விகிதத்தையும் குறைத்தது.இதன் நடுவே, மாநிலங்கள், ஆர்.பி.ஐ.,யிடம் வாங்கும் கடனுக்கான அளவையும் உயர்த்தியது. இதெல்லாம் போதவே போதாது என்ற குரல் தொடர்ந்து ஒலித்தபடி இருக்கிறது.இதற்குக் காரணம், சர்வதேச நாடுகள், கொரோனாவுக்காகச் செலவிடும் தொகை. உதாரணமாக, மொத்த உள்நாட்டு உற்பத்தி எனும், ஜி.டி.பி.,யில் ஜெர்மனி, 60 சதவீதம் தொகையை கொரோனா மீட்புக்கும் மறுகட்டமைப்புக்கும் பயன்படுத்த, பிரான்ஸ், 26 சதவீதம் செலவு செய்கிறது.
இத்தாலி, 21 சதவீதமும்; பிரிட்டன், 21 சதவீதமும்; அமெரிக்கா, 14 சதவீதமும்; ஸ்பெயின், 12 சதவீதமும் செலவு செய்ய நிதி ஒதுக்கீடு செய்துள்ளன. இதேபோல், நாமும் நம், ஜி.டி.பி.,யில், 2.5 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதாவது, 5 லட்சம் கோடி ரூபாய் முதல், 10 லட்சம் கோடி ரூபாய் வரை செலவு செய்ய வேண்டும்.நிதி ஆதாரம்இதில் பெரும்பகுதியை, நேரடியாக மக்களுடைய வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும்; குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் மீண்டும் எழுந்துவர, கடனுதவி அளிக்க வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக, இன்னும் இத்தகைய ஓர் இரண்டாவது நிதிச் சலுகைத் திட்டம் ஏன் அறிவிக்கப்படவில்லை என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.இது தொடர்பாக, இந்திய அரசுத் தரப்பில் வெளிவந்துள்ள ஒரே ஒரு குரல், சஞ்சீவ் சன்யாலுடையது தான். நிதி அமைச்சகத்தில் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருப்பவர் இவர். 'சூழ்நிலையின் அழுத்தத்தை நாங்கள் உணர்ந்திருக்கிறோம். நாங்களும் செலவு செய்யப் போகிறோம். மிக அதிக தொகையை செலவழிக்கும் திட்டமும் இருக்கிறது.
நம்மிடம் இதற்கான போதிய நிதி ஆதாரமும் உள்ளது.'வெகுவிரைவில் இதற்கான நிதி உதவித் திட்டத்தை அறிவிக்க உள்ளோம். அதை தற்போது தயாரித்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால், படிப்படியாக செயல்படுத்துவோம்' என்று தெரிவித்திருக்கிறார்.இ துதான் இந்திய அரசு மேற்கொள்ளவிருக்கும் அணுகு முறை என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.அதாவது, வெளிநாடுகள் போன்று, ஒட்டு மொத்தமாக ஒரு பெரும் தொகையை ஒதுக்கிவைத்து, அதை அனைவருக்கும் வழங்க வேண்டும் என்ற திட்டம் நம் அரசிடம் இல்லை. மாறாக, படிப்படியாகவே நிதி உதவிகள், பணக்கொள்கை ரீதியான உதவிகள் செய்யப்படும்.
இது சரியான அணுகுமுறையா என்ற கேள்வி எழாமல் இல்லை. மற்ற நாடுகளால், பெரும் அளவில் நிதியை ஒதுக்கி, நேரடித் நடவடிக்கையில் ஈடுபடும்போது, நாம் மட்டும் ஏன், 'படிப்படியான' திட்டத்தை அமல்படுத்த வேண்டும்?நான்கு காரணங்கள் தெரிய வருகின்றன.அமெரிக்காவில், பணியாளர்கள் சம்பளப் பிரச்னையில் சிக்கிக் கொள்ளாமல் தடுப்பதற்கு என்றே, 'ஊதிய பாதுகாப்பு திட்டம்' எனும், 'பே செக் புரொடெக்ஷன் புரோகிராம்' திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதற்கென்று, 34 ஆயிரத்து 900 கோடி டாலர் ஒதுக்கீடு செய்யப்பட்டது.இதற்காக சிறு நிறுவனங்கள் அனைத்தும் மனு செய்தன.
முதலில் வந்தவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் தொகை ஒதுக்கீடு செய்யப்பட, கடைசியில் இப்போது இந்த நிதியத்தில் பணமே இல்லை. இதேபோல், சிறு தொழில்களைக் காப்பதற்கு என்றே, 'பொருளாதாரப் பேரழிவு நிதியுதவி' எனும், 'எகனாமிக் இஞ்சுரி டிசாஸ்டர் லோன்' திட்டத்திலும் பணமே இல்லை. கூடுதல் கையிருப்புஇப்போது இவ்விரு நிதியங்களிலும் கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்யுங்கள் என்று அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்திக்கொண்டிருக்கின்றனர்.
இரண்டாவது பெரிய பிரச்னை, கொரோனா பாதிப்பு இன்னும் எத்தனை மாதங்கள் தொடரப் போகிறது என்ற தெளிவின்மை. இப்போது பெருமளவு நிதி உதவி அளித்துவிட்டு, மூன்று மாதங்களோ, ஆறு மாதங்களோ கழித்து, தொழில்களை மீட்க வேண்டிய வளர்ச்சிப் பருவம் வரும்போது, அப்போது அரசிடம் போதிய நிதி ஆதாரங்கள் இல்லாமல் போய்விடலாம் என்ற அச்சம் இருக்கிறது. அதற்காகவே இப்போதே இழுத்துப் பிடிக்கின்றனர்.மூன்றாவது முக்கிய காரணம், மேலை நாடுகளில், சமூக பாதுகாப்பு நிதியம் என்ற, 'சோஷியல் செக்யூரிட்டி பண்டு' என்ற திட்டம் அமலில் உள்ளது.
அதாவது, ஊதியம் பெறும் காலத்திலேயே, ஒரு குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படும். நம்ம ஊர் பி.எப்., திட்டம் போன்றது இது. நம் நாட்டில், 12 சதவீத அளவுக்குப் பிடித்தம் செய்யப்பட, சீனாவில் 28.52 சதவீதமும், செக் குடியரசில் 33.80 சதவீதமும், பிரான்சில் 45 சதவீதமும், இத்தாலியில் 30 சதவீதமும், மெக்சிகோவில் 51.15 சதவீதமும், ரஷ்யாவில் 30 சதவீதமும், ஸ்வீடனில் 31.42 சதவீதமும் பிடித்தம் செய்யப்படுகின்றன.கண்டங்கள் ரீதியாக பார்த்தாலும் நாம் பிடித்தம் செய்யும் தொகை குறைவே.
அதாவது, ஐரோப்பாவில் சராசரியாக, 20.16 சதவீதம் பிடித்தம் செய்யப்பட, ஆசியாவின் சராசரி, 13.56 சதவீதம் தான். இதன் அர்த்தம் என்னவெனில், மேலை நாடுகளிடம் செலவு செய்ய கூடுதல் கையிருப்பு இருக்கிறது என்பதே. நான்காவது முக்கிய காரணம், நாணயங்கள் பரிமாற்றம். பவுண்டு, டாலர், யென் போன்றவை சர்வதேச அளவில் செலாவணி மிக்க நாணயங்கள். அதனால் பிரிட்டனோ, அமெரிக்காவோ, ஜப்பானோ, தங்களது நிதிப் பற்றாக்குறையை ஈடுசெய்ய கூடுதல் நாணயங்களை அச்சடித்து இறக்கலாம்.
பணவீக்கம் : அதற்கு இணையான கடன் பத்திரங்களை வெளியிடலாம். சர்வதேச வங்கிகளும், நிதி முதலீட்டு அமைப்புகளும் இவற்றை வாங்கிக் கொள்ளும். நாம் கூடுதலாக ரூபாய் அச்சடித்து இறக்கினால், நம்முடைய பணவீக்கம் தான் அதிகமாகும். எதிர்காலம் மேலும் சிக்கலாகுமே தவிர, மீள்வதற்கான வாய்ப்பு இருக்காது. இந்தப் பின்னணிகளைக் கருத்தில் கொண்டே, இந்திய அரசாங்கம், 'படிப்படியான' நிதி உதவித் திட்டத்தை அறிவிக்கப் போகிறது. அதுவும் மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவிக்கிறது. இந்த அணுகுமுறை தர்க்கரீதியாக சரி என தோன்றலாம். ஆனால், நம்முடைய எல்.ஐ.சி.,யிலும் பி.எப்.,பிலும் இ.எஸ்.ஐ.,யிலும் செலுத்தப்பட்ட கோடிக்கணக்கான பணம், நம் கஜானாவில் தான் உள்ளது.
இன்றைய சிரமமான நேரத்தில், இத்தொகைகளை வெளியே எடுத்துச் செலவழிப்பது ஒன்றே உடனடி நிவாரணமாக இருக்கும். எதிர்காலத்துக்கு தயாராக இருப்பது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம், இப்போதைய நெருக்கடியைத் தீர்ப்பதும். நாளைய பலாக்காய்க்காக இன்றைய களாக்காயை விட்டுத் தரமுடியாது. ஏனெனில் இன்றைக்கு களாக்காயைச் சாப்பிட்டு உயிர்வாழ்வோமானால் தான், நாளைய பலாக்காயைப் பார்க்கவே முடியும்!
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|