பதிவு செய்த நாள்
28 ஏப்2020
13:34
'கொரோனா' பாதிப்பில் இருந்து, பொருளாதாரத்தை மீட்க, மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. ரிசர்வ் வங்கியின் முதல் அறிவிப்பில், பண இருப்பு விகிதம் (சி.ஆர்.ஆர்.), 'ரெப்போ ரேட்' மற்றும் 'ரிவர்ஸ் ரெப்போ' விகிதங்களை குறைத்தது.இரண்டாவது அறிவிப்பில், நபார்டு, சிட்பி, என்.எச்.பி., போன்ற வங்கி அமைப்புகளுக்கு, மறுநிதியாக (ரீபைனான்ஸ்) ரூ.50 ஆயிரம் கோடி வழங்குவதற்கான உத்தரவு வெளியானது. இதில், ரிவர்ஸ் ரெப்போ, 4 சதவீதத்தில் இருந்து, 3.75 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதனால், பொதுத்துறை, தனியார் வங்கிகளுக்கு, சில லட்சம் கோடிகள் கூடுதல் கடனாக வழங்க ஏதுவாகியுள்ளது.
வங்கிகள் தாராளம்
ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகளுக்கு பின், பொதுத்துறை வங்கிகள், தொழில் அமைப்புகளுக்கு கடன் வழங்க தயாராகி விட்டன. ஸ்டேட் வங்கி, 'எக்ஸ்ட்ரா லைன் ஆப் கிரெடிட்' திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.அதன்படி, ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர், வங்கியில், முன்னர் பெற்ற நடைமுறை கடன் தொகை மதிப்பில், 10 சதவீதம் அளவுக்கு புதிய கடன் பெறலாம். அதற்கு, எம்.சி.எல்.ஆர்., வட்டி விகிதம் பொருந்தும். கடன் பெற்று ஆறு மாத விடுமுறைக்கு பின், 24 மாதத்துக்குள் கடனை திருப்பி செலுத்த வேண்டும். ஏற்கனவே, கடன் தவணைகளை சரிவர திருப்பி செலுத்தாத வாடிக்கையாளர், வராக்கடன் (என்.பி.ஏ.,) வாடிக்கையாளர், ஸ்பெஷல் மென்ஷன் அக்கவுண்ட் (எஸ்.எம்.ஏ.2) வாடிக்கையாளர்கள் சிறப்பு கடன் பெறமுடியாது. ஒரு வாடிக்கையாளர், அதிகபட்சம் ரூ.200 கோடி கடன் பெறமுடியும்.'கோவிட் எமர்ஜென்சி கிரெடிட் லைன்' என்ற பெயரில், இந்தியன் வங்கியும், 'கோவிட் எமர்ஜென்சி லைன் ஆப் கிரெடிட்' என்ற பெயரில், 'யூனியன் பேங்க் ஆப் இந்தியா'வும், 'பேங்க் ஆப் பரோடா' போன்ற முன்னணி வங்கிகளும், நிவாரணத்துக்காக கடன் திட்டங்களை அறிவித்துள்ளன.இந்தியன் வங்கி, நடைமுறை மூலதனமாக பயன்படுத்த, ஏற்கனவே பெற்ற கடன் தொகை மதிப்பில் 10 சதவீதம் தருகிறது. இந்த கடன், தொழில் அமைப்புகளை, கார்ப்பரேட், மீடியம், எம்.எஸ்.எம்.இ., சம்பளம் பெறுபவர், பென்ஷனர் என, வகை பிரித்திருக்கிறார்கள். அதிகபட்சம், 100 கோடி ரூபாய் பெறமுடியும். இதற்கு, 8 சதவீதம் முதல், 8.75 சதவீதம் வட்டி; 36 மாதங்களில் இருந்து, 60 மாதங்களில் திருப்பி செலுத்த வேண்டும்.பேங்க் ஆப் இந்தியா, 20 சதவீதம் அளவுக்கு கடன் தருகிறது. ஏற்கனவே, வீட்டுக்கடன் பெற்றவர்களுக்கு டாப்-அப் கடன்களும் வழங்குகிறது.
ஐந்து சதவீதம் வட்டி
சிறுதொழில் வங்கியான 'சிட்பி', மருத்துவ உபகரணங்கள், மருந்து பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு, 5 சதவீத வட்டியில், கொலாட்ரல் செக்யூரிட்டி இல்லாமல், 48 மணி நேரத்துக்குள் கடன் வழங்குகிறது. பொதுத்துறை வங்கிகள் அறிவித்திருக்கும் கடன் திட்டங்கள் போல், தனியார் வங்கிகளும் அறிவிப்புகள் வெளியிட வேண்டும் என, வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
நிவாரண எதிர்பார்ப்புகள் என்ன?
'கொரோனா' பாதித்துள்ள பெரும்பாலான நாடுகளில், குறைந்த வட்டியிலோ அல்லது வட்டி இல்லாமலோ சம்பளத்துக்கான கடன், தொழிலை தொடர்ந்து நடத்த, குறைந்த வட்டியில் நீண்டகால கடன், தொழிலதிபர்கள் செலுத்தவேண்டிய 'சோசியல் செக்யூரிட்டி ஸ்கீம்', ஜி.எஸ்.டி., போன்ற வரிகளை, வட்டியில்லாமல் செலுத்த கால அவகாசம் போன்ற சலுகைகளை, தொழில் அமைப்புக்களுக்கு வழங்கியுள்ளன.பேரிடரில், அரசு, நேரடி மற்றும் மறைமுக வரி வருவாயில், பெரும் பகுதி இழந்து, இறுக்கமான நிதி நிலைமையில் உள்ளதையும் உணர முடிகிறது. இருப்பினும், வங்கிகள் மூலம் தொழில்களை உயிர்ப்பித்து வைத்திருக்க வேண்டிய கடமையும், பொறுப்பும், அரசுக்கு உள்ளதை மறுக்க முடியாது.வங்கிகளின் சிறப்புக்கடன் திட்டங்களை, குறைந்த வட்டியில் நீண்டகால அடிப்படையில், அதாவது, 5 முதல், 7 ஆண்டுகள் வரை திருப்பி செலுத்தக்கூடிய வகையில் வழங்க வேண்டும் என, தொழில்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.தவிர, ஒரு தொழில்கூடத்தில், வர்த்தக நிறுவனத்தில், 'கொரோனா' தொற்று கண்டறியப்பட்டால், நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்து, மூன்று மாதங்களுக்கு, அந்த வர்த்தக நிறுவனத்துக்கு 'சீல்' வைக்கப்படும் என்கிற தகவல், சரியானது அல்ல என்று, கடந்த வாரம், உள்துறை செயலாளர் தெளிவுபடுத்தியது, தொழில் அமைப்புக்களுக்கு நம்பிக்கை அளிக்ககூடிய செய்தி.
ஆக்சிஜன் எங்கே?
ஊரடங்கு தளர்த்தப்பட்டு, சந்தைகள் திறக்கப்பட்டாலும், மக்களிடம் பணப்புழக்கம் இருக்குமா என்பது சந்தேகம். மக்கள் கையில் பணம் புரள, தொழில் அமைப்புகள் மீண்டும் முழு அளவில் இயங்க வேண்டும். சங்கிலி தொடரான வணிக சுழற்சியை உயிர்பெற செய்யும் 'நடைமுறை மூலதன கடன்' என்ற ஆக்சிஜன், வங்கிகளிடம் மட்டும்தான் உள்ளன.இக்கட்டான சூழலில், சோர்ந்துள்ள வாடிக்கையாளர்களை அலைகழிக்காமல், தகுதியான வாடிக்கையாளர்களை வங்கிகளே போனில் அழைத்து பேசி உதவலாம். இந்தியாவில் இப்படியும் நடக்கும் என்பதற்கு, வங்கிகளின் அணுகுமுறைகள் முன்னுதாரணமாக இருக்கட்டும்.தொழில் அமைப்புகள் உயிர் பெற்றால் தான், வங்கிகள் பிழைக்கும். வங்கிகளில் வரவு - செலவு இருந்தால் தான், நாட்டின் பொருளாதாரம் தேக்கம் இருக்காது.
அமெரிக்காவில் நடவடிக்கை இப்படி!
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை குறிக்கும் ஜி.டி.பி., (Gross domestic product) அதிகம் கொண்ட நாடு அமெரிக்கா. இந்தியாவின் ஜி.டி.பி.,யை விட, 8 மடங்கு அதிகம். தன் நாட்டின் தொழில்துறை தடம் புரளாமல் இருக்க, அமெரிக்கா பல அதிரடிகளை எடுத்து வருகிறது. அவற்றில் முக்கியமான மூன்றைப் பார்ப்போம்.
* பே-செக் புரொடெக்ஷன் புரோகிராம் (Paycheck Protection Program)அமெரிக்காவில், 500 பணியாளர்கள் வரை உள்ள நிறுவனங்கள், சிறுதொழில் பட்டியலில் வருகின்றன. இந்த. சிறுதொழில் அமைப்புகள், தங்கள் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, ஒரு சிறுதொழில் நிறுவனம், தன் பணியாளர்களுக்கு, மாத சம்பளம் ரூ.10 லட்சம் தருகிறது என்றால், நிறுவனத்துக்கு இரண்டரை மடங்கு, அதாவது ரூ.25 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. அதில், 75 சதவீதம் சம்பளம் தர உபயோகப்படுத்த வேண்டும். மீதி, 25 சதவீதம் வாடகை, மின்சார பில் போன்றவற்றுக்கு பயன்படுத்தலாம். 8 வாரங்கள், நிறுவனத்தின் பணியாளர்களை வேலையில் இருந்து எடுக்கக்கூடாது. இதைப் பூர்த்தி செய்தால், கடன் தொகை முழுவதையும் அரசு வங்கிக்கு செலுத்தி விடும். இதன் பெயர் மன்னிக்கக்கூடிய கடன் (forgiveable loan).'
* சிறு தொழில் அமைப்புக்களுக்கு, மேலும், 2 மில்லியன் டாலர் வரை, 3.75 சதவீதம் வட்டியில், 30 ஆண்டுகளில் திருப்பி தரக்கூடிய கடன் வசதியும் உண்டு.
* இங்கே, இ.எஸ்.ஐ., பி.எப்., இருப்பது போல, அமெரிக்காவில் 'சோஷியல் செக்யூரிட்டி ஸ்கிம்' உள்ளது. கொரானா பாதிப்புக்காலத்தில் கட்ட வேண்டிய தொகையில் பாதியை, 2021 டிசம்பருக்கு முன்பாகவும், மற்றொரு பாதியை, 2022 டிசம்பருக்கு முன்பாகவும் செலுத்தலாம். அத்தொகையை, நடைமுறை மூலதனமாக தொழிலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன்
வாசக வணிகர்களே உங்கள் சந்தேகங்களை எழுத வேண்டிய இமெயில்: karthi@gkmtax.com
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|