பதிவு செய்த நாள்
01 மே2020
01:39
மும்பை : நடப்பு ஆண்டில், ஜனவரி முதல், மார்ச் வரையிலான காலாண்டில், தங்கத்தின் தேவை, 36 சதவீதம் அளவுக்கு சரிவை சந்தித்திருப்பதாக, உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.
இது குறித்து, உலக தங்க கவுன்சில் மேலும் தெரிவித்துள்ளதாவது: கடந்த ஜனவரி முதல், மார்ச் வரையிலான காலத்தில், நாட்டின் தங்கத்தின் தேவை, 36 சதவீதம் சரிந்து, 101.9 டன்னாக குறைந்துள்ளது.
தொற்று பரவல் : இந்த சரிவுக்கு, விலையில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுகள், பொருளாதாரத்தின் நிச்சயமற்ற தன்மை, நோய் தொற்று பரவல் காரணமாக, நாடு முடக்கப்பட்டது ஆகியவை முக்கிய காரணங்களாக அமைந்தன.ஆபரண தேவை மட்டு மின்றி, தங்க முதலீட்டுக்கான தேவையும், மதிப்பீட்டு காலத்தில் குறைந்து உள்ளது.இந்த நிலை மேலும் தொடரும் பட்சத்தில், இந்த ஆண்டு ஒரு சவாலான ஆண்டாக, துறையினருக்கு இருக்கும்.மதிப்பீட்டு காலத்தில், தங்கத்தின் மதிப்பு அடிப்படையில் பார்க்கும்போது, 20 சதவீதம் சரிந்து, 37 ஆயிரத்து, 580 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இதுவே, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில், 47 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.மதிப்பீட்டு காலத்தில், தங்கத்தின் விலை, 25 சதவீதம் அதிகரித்து, 10 கிராம் தங்கத்தின் விலை, சராசரியாக, 36 ஆயிரத்து, 875 ரூபாயாக இருந்தது. இதுவே, கடந்த ஆண்டு இதே காலத்தில், 29 ஆயிரத்து, 555 ரூபாயாக இருந்தது.மொத்த ஆபரண தேவை, மார்ச்சுடன் முடிந்த காலாண்டில், 41 சதவீதம் சரிந்து, 73.9 டன்னாக குறைந்தது. கடந்த ஆண்டில், 125.4 டன்னாக இருந்தது.மதிப்பு அடிப்படையில், ஆபரண தேவை, 27 சதவீதம் சரிந்து, 27 ஆயிரத்து, 230 கோடி ரூபாயாக உள்ளது. இதுவே, கடந்த ஆண்டில், 37 ஆயிரத்து, 70 கோடி ரூபாயாக இருந்தது.
எதிர்பார்ப்பு : மதிப்பீட்டு காலாண்டின் ஆரம்பத்தில், திருமண தேவை அதிகரித்து, விற்பனையும் அதிகரித்தது. ஆனால், மார்ச் துவக்கத்திலிருந்து, எதிர்பாராத சூழலில் சந்தை பாதிக்கப்பட்டு, நுகர்வோருடைய நம்பிக்கையும் சரிந்தது. இதன் காரணமாக, ஆபரண தேவை, 41 சதவீதம் அளவுக்கு சரிந்துவிட்டது.முதலீட்டு தேவையை பொறுத்தவரை, மதிப்பீட்டு காலமான ஜனவரி முதல், மார்ச் வரையிலான காலத்தில், 17 சதவீதம் சரிந்து, 28.1 டன்னாக குறைந்துவிட்டது.இருப்பினும், மதிப்பு அடிப்படையில், 4 சதவீதம் உயர்வை கண்டு, 10 ஆயிரத்து, 350 கோடி ரூபாயாக உயர்ந்தது.
முழு ஆண்டில் தேவை எப்படி இருக்கும் என்பதை இப்போதே சொல்ல முடியாவிட்டாலும், பெரிய பாதிப்புகள் இருக்காது என, எதிர்பார்க்கப்படுகிறது.ஆனால், நகை செய்யும் தொழிலில் உள்ள கைவினைஞர்கள் மற்றும் ‘சப்ளை’ சரியாக இல்லாவிட்டால், சவாலான ஆண்டாக மாறிவிடும். இவ்வாறு, உலக தங்க கவுன்சில் தெரிவித்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|