பதிவு செய்த நாள்
01 மே2020
22:59
மும்பை:‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனம், தன்னுடைய கடனை, அடுத்த ஆண்டுக்குள் முடித்துவிட வேண்டும் என்பதில் வேகம் காட்டி வருகிறது. இதையடுத்து, ‘பேஸ்புக்’ நிறுவனத்திடம் பங்குகளை விற்றது போன்ற முயற்சியில் இறங்கி உள்ளது.
சமீபத்தில், ரிலையன்ஸ் நிறுவனம் அதன், ‘ஜியோ பிளாட்பார்ம்’ நிறுவனத்தின், 9.99 சதவீத பங்குகளை, 53 ஆயிரத்து, 125 கோடி ரூபாய்க்கு, ‘பேஸ்புக்’ நிறுவனத்திடம் விற்றது. இப்போது, அதே போன்ற பெரிய அளவிலான, ‘டீலு’க்காக, பிற நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி வருகிறது.எந்தெந்த நிறுவனங்களிடம் இது குறித்து பேச்சு நடத்தி வருகிறது என்பதை பற்றி எதுவும் சொல்லாமல், வரும் மாதங்களில் புதிய முதலீடுகள் குறித்து அறிவிக்கப்படும் என, கடந்த வியாழன்று, அதன் நான்காவது காலாண்டு அறிவிப்பில், ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.
‘ஆன்லைன் ஷாப்பிங்’
பேஸ்புக் முதலீடு செய்ததை அடுத்து, வேறு சில நிறுவனங்கள் அதே போன்ற அளவுக்கு முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டியுள்ளதாக, ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.ஏற்கனவே கூகுள் நிறுவனத்துடன் முதலீடு குறித்து பேச்சு நடப்பதாக செய்திகள் வந்தன. ஆனால், அதன் பிறகு அது குறித்து எந்த தகவலுமே இல்லாமல் இருந்தது.இந்நிலையில், பேஸ்புக் போல முதலீடு செய்ய, வேறு நிறுவனங்கள் விருப்பப்படுவதாக அறிவித்திருப்பதால், அது அனேகமாக கூகுள் நிறுவனமாக இருக்கக் கூடும் என்கின்றனர், சந்தை நிபுணர்கள்.
சீனாவில், ‘விசாட்’ நிறுவனமும், ‘அலிபே’ நிறுவனமும் இணைந்து, வெற்றிகரமான பல்நோக்கு செயலியாக செயல்படுவது போன்று, ஜியோ பிளாட்பார்மையும் மாற்ற, முகேஷ் அம்பானி விரும்புகிறார் என்கின்றனர்.இதன்படி, குறுஞ்செய்திகள், நிதி சேவைகள் போன்றவற்றுக்கு பேஸ்புக் உடனும், ‘ஆன்லைன் ஷாப்பிங்’ சேவைக்காக, ‘அமேசான், வால்மார்ட்’ உடனும் கூட்டு வைக்க, முகேஷ் அம்பானி முயற்சிப்பதாகவும் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
விரிவுபடுத்த முடியும்
‘பேஸ்புக், வாட்ஸ் ஆப்’ நிறுவனத்தை வாங்குவதற்காக, அதிகளவில் முதலீடு செய்தது. அதற்கு அடுத்து, இரண்டாவது மிகப் பெரிய முதலீடு, ரிலையன்ஸ் ஜியோ பிளாட்பார்மில் செய்யப்பட்டது.இதற்கிடையே, பெட்ரோலிய சுத்திகரிப்பு வணிகத்தில், 20 சதவீத பங்கு களை சவுதி அரோமா நிறுவனத்துக்கு கொடுக்கும் முயற்சியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வேறு சில நிறுவனங்களிடமிருந்து, இதே போன்ற அளவிலான முதலீட்டை ஈர்ப்பதன் மூலம், கடனை குறைக்க முடிவதோடு, வணிகத்தை மேலும் பல தளங்களுக்கு விரிவுபடுத்த முடியும் என முகேஷ் அம்பானி கருதுகிறார்.அவர் நினைப்பது போல நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.வரும் மாதங்கள் இதற்கு பதில் சொல்லும்.
நாட்டின் மிகப் பெரிய உரிமை பங்கு வெளியீடு
ரிலையன்ஸ் நிறுவனம், கடனை அடைப்பதற்காக, பிற நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி வரும் நிலையில், இன்னொரு பக்கம், உரிமை பங்குகளை வெளியிட்டு, நிதி திரட்டும் முயற்சியிலும் இறங்கி உள்ளது.இந்நிறுவனம், 53 ஆயிரத்து, 125 கோடி ரூபாயை திரட்டும் வகையில், உரிமை பங்குகளை வெளியிட இருப்பதாக, வியாழன்று அறிவித்துள்ளது.
பங்குதாரர்களுக்கு, 15 பங்குகளுக்கு ஒரு பங்கு வீதம் வழங்கப்படும்., ஒரு பங்கின் விலை, 1,257 ரூபாய் என வெளியிடப்படும். இந்த விலை, ஏப்., 30ம் தேதி விலையிலிருந்து, 14 சதவீத தள்ளுபடி விலையாகும்.இந்தியாவில் இதுவரை வெளியிடப்பட்ட உரிமை பங்குகள் வெளியீட்டில், இது தான் மிகப் பெரியதாக இருக்கும் என, ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது. மார்ச், 30ம் தேதி நிலவரப்படி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கடன், 3.36 லட்சம் கோடி ரூபாயாகும். தற்போது கையில் ரொக்கமாக, 1.75 லட்சம் கோடி இருக்கிறது. இதையடுத்து நிகர கடனாக, 1.61 லட்சம் கோடி ரூபாய் உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|