பதிவு செய்த நாள்
03 மே2020
22:51
இரண்டாவது ஊரடங்கு முடிந்து, மூன்றாவதாக, அடுத்த, 14 நாட்கள் ஊரடங்கும் அமலுக்கு வந்துவிட்டது. மத்திய அரசு, எப்போது இரண்டாவது நிதிச் சலுகைத் திட்டத்தை அறிவிக்கப் போகிறது; எப்போது குறு சிறு, நடுத்தரத் தொழில்களுக்கான சிறப்புத் திட்டத்தை வெளியிடப் போகிறது என்ற கேள்விகள், உரத்து ஒலிக்கத் தொடங்கியுள்ளன.
கடந்த வாரம் கூட, பிரதமர் நரேந்திர மோடி, நிதி அமைச்சர், உள்துறை அமைச்சர், தொழில், வர்த்தகத் துறை அமைச்சர்களை, தொடர்ந்து சந்தித்துள்ளார். அதில், இரண்டாவது நிதிச் சலுகைத் திட்டம் பற்றி விவாதிக்கப்பட்டதாகச் செய்திகள் வந்துள்ளன. இதில், நேரடியாக மக்கள் கையில் பணத்தைக் கொடுப்பதற்குப் பதிலாக, வேளாண்மை, குறு சிறு, நடுத்தரத் தொழில்களுக்கு நிதிச் சலுகைகளை மேம்படுத்தி, அதன்மூலம், தொழில் முடக்கத்தைப் போக்கும் திட்டம் இருப்பதாகவே தெரிகிறது.இதன் மூலம், அனைவருக்கும் வேலைவாய்ப்பும், வருவாயும் கிடைக்கும் என்பதே இவர்கள் திட்டம்.
திணறும் வங்கிகள்
திணறிக் கொண்டிருக்கும் குறு சிறு, நடுத்தரத் தொழில்களுக்கான நிதிச் சலுகைகள் வழங்குவதில் தாமதம் ஏன்?கடந்த, 2008 அனுபவம் கொஞ்சம் தயக்கம் காட்ட வைத்திருக்கிறது. அப்போதைய பொருளாதாரத் தேக்கத்துக்குப் பின், அரசு, பெருமளவு நிதிச் சலுகைகளை வழங்கத் தொடங்கியது. அதில், பலனடைந்தவை பெருநிறுவனங்களே.
மேலும், அதில் இருந்து தான், இன்று நாம் சிக்கித் தவிக்கும், ‘வாராக் கடன்’ என்ற பெரும்பூதம் தோன்றியது. வங்கிகளால் தலைநிமிர முடியாமல திணறுகின்றன.இப்போதும், அது போன்ற தொரு பாதிப்பு ஏற்பட்டு விடக் கூடாது என்ற கவனமே, தாதமத்துக்கு முதல் காரணம். உண்மையிலேயே, கடன் தேவைப்படும் உரிய நிறுவனங்களைக் கண்டுபிடித்து, அவர்களுக்கு கடனுதவி வழங்க வேண்டும் என்ற எண்ணம், இதன் பிறகே செயல்படுகிறது.
பல்வேறு சேமிப்புகள்
எப்படி, இத்தகைய தேவையுள்ள நிறுவனங்களை இனம் காணுவது... இது, பிரச்னையின் ஒரு முனை. இதற்கு இன்னொரு முனை இருக்கிறது. அது, வங்கிகளில் இருந்து கடன் பெறுவது. வங்கிகளில் பணம் இருந்தும், கடன் அளவு பெருகாதது தான் ஆச்சரியம். என்ன காரணம்?முதலில், வங்கிகளில் உள்ள பணத்தைத் தெரிந்து கொள்வோம்.
ஒவ்வொரு நாள் இரவும், கிட்டத்தட்ட, 7 லட்சம் கோடி ரூபாயை, ஆர்.பி.ஐ.,யிடம் இருப்பு வைக்கின்றன வங்கிகள். இந்தத் தொகை, அவர்களிடம் பல்வேறு சேமிப்புகள் மூலம் திரண்டவை. அத்தொகையை, வங்கிகள், குறு சிறு, நடுத்தரத் தொழில்கள் முதல், பல்வேறு பெரிய நிறுவனங்களுக்கும் கடனாகக் கொடுக்க வேண்டும். அது தான் எதிர்ப்பார்ப்பு. ஆனால், வங்கிகள் பயப்படுகின்றன. அவற்றைக் கொடுக்கத் தயங்குகின்றன.
வெளியே கொடுப்பதை விட, ஆர்.பி.ஐ., கொடுக்கும், சொற்ப வட்டியே போதும் என்று அத்தொகையை அங்கு இருப்பு வைத்துள்ளன.இதை உடைக்க வேண்டும் என்று தான், கடந்த வாரத்தில், ‘ரிவர்ஸ் ரெப்போ’ விகிதத்தைக் கூட, ஆர்.பி.ஐ., குறைத்தது. ஆனாலும், வங்கிகள் இருப்பு வைக்கும் தொகையின் அளவைக் குறைக்க மாட்டேன் என்கின்றன.
கறார்த்தனம்
இது, ஒருவிதமான இடியாப்பச் சிக்கல். அதாவது, வங்கி நிர்வாகிகள் பயப்படுகின்றனர். ஏற்கனவே, வாராக்கடன் பிரச்னையில் சிக்கி, ஒவ்வொரு வங்கியின் மூத்த அதிகாரிகளும், வழக்குகளிலும், விசாரணைகளிலும் சிக்கியுள்ளனர்; அவர்களுடைய கடன் வழங்கும் முடிவுகள் கேள்விக்குள்ளாக்கப்பட்டன.விளைவு, அவர்கள், ஆர்.பி.ஐ., வகுத்துக் கொடுத்த நெறிமுறைகள் படி மட்டுமே கடன் கொடுக்க முனைகிறார்கள்.\
அதாவது, மியூச்சுவல் பண்டு என்றாலோ, வங்கி சாராத நிதி நிறுவனங்கள் என்றாலோ, குறு சிறு, நடுத்தரத் தொழில்கள் என்றாலோ, அவர்களுடைய நிதி நிலைமையின் தரம், குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருந்தால் தான், கடன் கொடுக்க வேண்டும். அதை இப்போது மிகவும் கறாராக பின்பற்றுகின்றனர். அந்தக் கறார்த்தனம், இப்போது எடுபடாது. கடன் வாங்க வரும் பல்வேறு நிறுவனங்களும் அமைப்புகளும், கோரப்படும் தர நிலையில் இல்லை. அவை ஏற்கனவே சிக்கலில் தவிக்கின்றன. அவற்றை, தற்போது மீட்டால் தான் உண்டு.
இந்நிலையில், தர நிர்ணய அளவுகோல்களை மாற்றவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் அத்தகைய திருத்தங்களை மேற்கொள்ளாதவரை, வங்கிகள், இவர்களுக்கு கடன் வசதிகளைச் செய்யாது. மேலும், வங்கித் துறையினர் இன்னொரு கோரிக்கையையும் வைக்கின்றனர். குறு சிறு, நடுத்தரத் தொழில்களுக்குக் கொடுக்கப்படும் கடன்களில், 15 சதவீதத்துக்கும், வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடன்களில், 25 சதவீத அளவுக்கும், அரசாங்கம் கடன் உத்தரவாதம் வழங்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கின்றனர்.
அதாவது, ஒருவேளை, கொடுக்கப்படும் இக்கடன்கள் நாளை திரும்பி வராமல் போய் விட்டாலும், அரசாங்கம், அதற்கான ஜவாப்தாரியாக இருக்கும்.
சிறப்பு நோக்க நிதியம்
தங்கள் கணக்குப் புத்தகத்தில், அவற்றை முழுமையாக வாராக்கடனாக குறிப்பிட வேண்டிய அவசியமில்லை. கடனின் சுமை தங்கள் தலைமீது வடியக்கூடாது என்ற, எச்சரிக்கை உணர்வே இதன் பின்னே செயல்படுகிறது.தற்போது, குறு சிறு, நடுத்தரத் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன்கள் என்பவை, மொத்த கடன்களில், 16 சதவீதம் வரை இருக்கின்றன. மேலும், பொதுவாக, வாராக்கடன் என்பது, 10 சதவீதம் வரை இருக்கிறது.
இதுபோன்ற பாதுகாப்பற்ற கடன்களை வழங்குவதன் மூலம், அடுத்த மூன்றாண்டுகளில், வாராக்கடன் அளவு இன்னொரு பத்து சதவீதம் உயரலாம். மொத்த பட்ஜெட்டை பார்க்கும் போது, அது ஒன்றும் பெரிய தொகையாக இருக்கப் போவதில்லை என்ற கருத்தையும், ஒருசில வங்கியாளர்கள் முன்வைக்கின்றனர். அமெரிக்காவில் சிறு தொழில்களுக்கு வழங்கப்படும் கடன்களுக்காக சிறப்பு நிதியம் உருவாக்கப்பட்டது.
அந்த நிதியத்தில் இருந்து வங்கிகள் கடன் வாங்கி, சிறு தொழில்களுக்குக் கொடுக்கும். நாளை பணம் திரும்பிவரும் போது, அது நேரடியாக நிதியத்தில் வரவு வைக்கப்படும். இதற்கு, ‘சிறப்பு நோக்க நிதியம்’ என்று பெயர்.இதே போன்றதொரு, அணுகு முறையையும் இங்கேயுள்ள வங்கிகள் எதிர்ப்பார்க்கின்றன. குறு சிறு, நடுத்தரத் தொழில்களுக்குக் கொடுக்கப்படும் புதிய கடன்களுக்கு, 25 சதவீதம் முதல், 100 சதவீதம் வரை, கடன் உத்தரவாதத்தைக் கொடுப்பதற்கு, மத்திய அரசாங்கம் முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வருகின்றன.
புதிய விதிமுறை
ஒரு பக்கம் பணம் கொட்டிக் கிடக்கிறது. இன்னொரு பக்கம், அதை எதிர்ப்பார்த்து, லட்சக் கணக்கான குறு சிறு, நடுத்தரத் தொழில்கள் காத்திருக்கின்றன. நடுவில் தடையாக இருப்பது, சட்ட திட்டங்களும், வரைமுறைகளும், அவநம்பிக்கைகளும், தம் முதுகைக் காப்பாற்றிக் கொள்ள விரும்பும் வங்கிகளும் தான்.இந்த முட்டுக்கட்டையை நீக்க வேண்டியது, அரசாங்கத்தின் கடமை தான் என்றாலும், வங்கிகள் இன்னும் கொஞ்சம் தைரியமாகச் செயல்படலாம்.
கொரோனாவுக்கு முன் இருந்த சட்டத் திட்டங்கள், இனிமேலும் உதவப் போவதில்லை. கொரோனா அனைத்தையும் குலைத்துப் போட்டுவிட்டது. இனி, புதிய அணுகுமுறைகளும் விதிமுறைகளுமே நம்மைக் காப்பாற்றும் என்பதை அரசாங்கமும் வங்கித் துறையும் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆர்.வெங்கடேஷ்
பத்திரிகையாளர்
pattamvenkatesh@gmail.com
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|