பதிவு செய்த நாள்
04 மே2020
20:56
தொழிலில் பய பக்தி வேண்டும் என்பர். பயம் என்ன, பக்தி என்ன? பயம் என்றால், ஒரு முதலாளிக்கு வேலை செய்கிறோம்; தவறிழைத்தால், அவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற பயம். தெய்வம் தானே முதலாளி? அவன் மேலுள்ள பயம் அது. இதனால் தான், ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்று சொல்லப்படுகிறது. அதை பக்தியுடன், பேரன்புடன் செய்வது, தொழிலை மேன்மைப்படுத்தும். இதனால் தான் பய பக்தி வேண்டும்.
நாம், இதை சுவாமி படத்தின் முன் விளக்கேற்றுவதுடன் முடிந்து விடுவதாக நினைத்து விடுகிறோம். சில சடங்குகள் நல்லது தான்; ஆனால், பொருள் அறிந்து செய்வது தான், முழு பலன் அளிக்கும். செல்வத்தையும், தொழிலையும், தெய்வத்தின் ஸ்தானத்தில் வைத்தால், அவற்றை எப்படி கொண்டாட வேண்டும்? ஆனால், நம் பேச்சும், செயலும் எப்படி உள்ளது?‘இந்த பிச்சைக்கார காச வாங்க, எவ்வளவு அலைய விடுறான்? இந்த வேலையை பாக்குறதுக்கு கழுதை மேய்க்கலாம்! காசை அவன் மூஞ்சியில துாக்கி அடி; பொறுக்கிட்டு போகட்டும். ஏமாற்றாமல் பிழைக்க முடியாது இந்த தொழில்ல...’ இதைப் போல ஆயிரம் சொற்களை பேசுகிறோம். செல்வம் சேர, முதலில் உங்கள் வேலையை, தொழிலை, செல்வத்தை பழிக்கக் கூடாது.பணம், விருந்தினர் போல கொண்டாடும் இடத்திற்கு தான் செல்லும்; தங்கும். இந்த கவர்ச்சி விதியை புரிந்து, உங்கள் சொற்களையும், செயல்களையும் மாற்றி அமையுங்கள். நான் சொல்பவற்றை, ஒரு மாதம் செய்து பாருங்கள்; பலன் இருந்தால், தொடருங்கள்!
* பணம் வைக்கும் இடத்தை சுத்தமாக வைக்கவும். பர்சில் உள்ள தேவையில்லாதவற்றை நீக்குங்கள். காசோலை புத்தகம், சுத்தமான இடத்தில் இருக்கட்டும். சில்லரைகள் கூட ஓரிடமாக இருக்கட்டும்
* வரவை, நன்றியுடன் பெற்றுக் கொள்ளுங்கள். உங்கள் நோக்கத்திற்கு, இந்த பணம் வருகிறது என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.
* செலவையும், பெருந்தன்மையுடன், நன்றியுடன், வாழ்த்துகளுடன் மேற்கொள்ளுங்கள். கடவுள், இவ்வளவு பணத்தை, உங்கள் மூலம் கொடுக்க வைக்கிறார் என, நன்றி தெரிவியுங்கள். இந்த அளவிற்கு வளர்ந்ததை எண்ணி, பெருமைப்படுங்கள். குறிப்பாக, வெறுப்புடன் பணத்தை கொடுக்காதீர்கள். போகும் விருந்தாளியை, கடுப்புடன் வழியனுப்பினால், திரும்பி வருவாரா என்று யோசியுங்கள்
* பணத்தை முடக்க வேண்டும் என்று எண்ணாதீர்கள். ஒரு நல்ல காரியத்திற்கு, பணம் சுழன்று சுழன்று வந்து போகும் என்பதை உணருங்கள். தேவைக்கு பணம் வரும், அந்த தேவையை பூர்த்தி செய்து விட்டு, பணம் வேறிடம் செல்லும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்
* பணத்தைப் பற்றியோ, தொழிலைப் பற்றியோ, ஒரு சொல் கூட எதிர்மறையாக எண்ணாதீர்கள்; பேசாதீர்கள். இது தான் முக்கிய விதி. காரணம், எவ்வளவு வலிமையாக இருந்தாலும், எதிர்மறை எண்ணமோ, சொல்லோ பதிவு செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ‘பத்தலை... போதலை... பணமில்லை...’ போன்ற சொற்களை, உங்கள் அகராதியிலிருந்தே நீக்கி விடுங்கள்.
* அதேபோல, எதிர்மறை செய்திகளை பார்ப்பதை நிறுத்தி விடுங்கள். தொழில் தேக்கம், தொழில் தேக்கம் என, அலறும் தொலைக்காட்சி விவாதங்களை பார்ப்பதை விட்டு, ‘புதிதாக என்ன செய்ய முடியும்?’ என்று யோசியுங்கள்
* வாழ்வில் நடந்த நஷ்டங்களை, மீண்டும் மீண்டும் மனதில் படம் போல ஓட்டிக் கொண்டிருக்காதீர்கள்; அது தந்த பாடத்தை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். பொதுவாக, பணக் கஷ்டத்தை பிறரிடம் கூறுவதை கைவிடுங்கள். கண் படக்கூடாது என்று, பலர், பஞ்சப் பாட்டை பாடிப் பாடியே, தரித்திரத்தை வரவழைக்கின்றனர்
* நலிந்தவர்களிடம் பேரம் பேசாதீர்கள். உங்கள் காசு, பல குடும்பங்களை வாழ வைக்கிறது என்று பெருமிதம் கொள்ளுங்கள்
* பிரதிபலன் இல்லாமல் செய்யும் தானம், எவ்வளவு சிறிதாக இருந்தாலும் கூட, பண வரவை பெருக்கித் தரும்; கர்ம வினைகளை போக்கும்; மன நலம் பேணும்; பலரின் வாழ்த்துக்களையும், ஆதரவையும் கொண்டு குவிக்கும். உங்களுக்கு, எதிர்பாராத இடங்களிலிருந்து உதவிகள் கிடைக்கும்.
மிகச் சுருக்குமாகச் சொன்னால், பணம் பற்றிய எண்ணத்தை ஒரு சுகமான, நேர்மறையான, நன்றி உணர்வு மிக்க எண்ணமாக மாற்றிக் கொள்ளுங்கள். நிகழ்காலத்தில், கடன் இருக்கலாம், பற்றாக்குறை இருக்கலாம், பயம் இருக்கலாம். அவை, தர்க்க ரீதியாக நியாயமாகக் கூட இருக்கலாம். ஆனால், அவற்றை மாற்றி, இதமான, இணக்கமான எண்ணங்களை அமைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மூளை இந்த எண்ணங்களையும், உணர்வுகளையும், எது நிஜம், எது பொய் என்று அலசாமல், பதிவு செய்து கொள்ளும். அது, உங்களை புதுப்பிக்கும். புது அலைவரிசை எண்ணங்களையும், அனுபவங்களையும், மனிதர்களையும் கொண்டு வரும். அதனால், பாக்கெட்டில், 10 பைசா இல்லாவிட்டாலும், நம்பிக்கையில் செல்வந்தராக இருங்கள். உங்கள் எண்ணம், நீங்கள் எண்ணும் மனிதராய், உங்களை மாற்றி அமைக்கும். இதை, முழுமையாக நம்புங்கள்.எல்லா சாதனையாளர்களும், கையில் ஏதும் இல்லாத போதே, மிகப்பெரிதாக கனவு கண்டு, முழுதுமாய் அதை நம்பினர்; அதன் திசையிலே நடந்தனர். வரும் இடர்களையும், நஷ்டங்களையும் பெரிதுபடுத்திப் பார்க்கவில்லை.‘எப்படி நடக்கிறது தொழில்?’ என்று கேட்டால், நஷ்டக் கணக்கை பிட்டு பிட்டு வைத்து, பரிதாபம் தேடுவது, உங்களை கீழே தான் கொண்டு செல்லும். ‘நல்லாப் போகுது... நிறைய கத்துகிட்டேன்; இனி ஏறுமுகம் தான்...’ என்று நம்பிக்கையுடன் சொல்லுங்கள்; வந்தவரும், சில உபயோகமான எண்ணங்களை உதிர்த்து விட்டுச் செல்வார்.செல்வம் சேர, அதற்கு அடிப்படையான தேவை, தொழில் வளர்ச்சி. அதற்கு அடிப்படையானவை, நம்பிக்கை தரும் எண்ணங்கள், சொற்கள் மற்றும் செயல்கள்! வரவு, சேமிப்பு, செலவு, முதலீடு என, அனைத்தையும் குறிக்கோளுடன், நன்றி உணர்வுடன் செய்யுங்கள்.நம்பிக்கையுடன், நேர்மறையான எண்ணங்கள், உங்கள் வெற்றிக்கு வழி வகுக்கும்!
டாக்டர் ஆர். கார்த்திகேயன்,
கட்டுரையாளர், உளவியல் மற்றும் நிர்வாக ஆலோசகர்
gemba.karthikeyan@gmail.com
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|