பதிவு செய்த நாள்
04 மே2020
22:47
புதுடில்லி:தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி, இதுவரை இல்லாத அளவுக்கு, ஏப்ரல் மாதத்தில் சரிவை சந்தித்துள்ளது.நாடு முடக்கப்பட்டதை அடுத்து, கடந்த ஏப்ரல் மாதத்தில், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி, இதுவரை இல்லாத வகையில் சரிவைக் கண்டுள்ள தாக, ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
தரவு திரட்டு
நோய் தொற்று பரவல் காரணமாக நாடு முடக்கப் பட்டதை அடுத்து, பல நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தியது; ஆட்களை குறைத்தது போன்ற காரணங்களால், இந்த சரிவு ஏற்பட்டுள்ளது.பிரிட்டனைச் சேர்ந்த, ‘ஐ.எச்.எஸ்., மார்கிட்’ எனும் நிறுவனம், உலோகம், ரசாயனம், காகிதம், உணவு, ஜவுளி உள்ளிட்ட எட்டு பிரிவுகளைச் சேர்ந்த, 400 நிறுவனங்களின், ஏப்ரல் மாத தயாரிப்பு நிலவரம் குறித்து ஆய்வு நடத்தி, அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:இந்தாண்டு, ஏப்ரல் மாதத்தில், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி அடிப்படையிலான, ‘பி.எம்.ஐ.,’ குறியீடு, 27.4 புள்ளிகளாக சரிந்துள்ளது. இது, மார்ச் மாதத்தில், 51.8 புள்ளிகளாக இருந்தது.நாட்டின் வணிக நிலவரத்தை அறிவதற்காக, 15 ஆண்டுகளுக்கு முன் துவங்கியது, இந்த தரவு திரட்டு. தற்போது, இதுவரை இல்லாத வகையில் சரிவு காணப்பட்டுள்ளது. இக்குறியீடு, 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால், அது வளர்ச்சியை குறிக்கும். 50 புள்ளிகளுக்கு கீழே இருந்தால், சரிவை குறிக்கும்.
கடந்த, 32 மாதங்களாக, தொடர்ந்து, 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்து, இக்குறியீடு வளர்ச்சியை காண்பித்து வந்தது.தற்போது, ஏப்ரலில், இக்குறியீடு, 27.4 புள்ளிகளுக்கு சரிந்ததன் மூலம், கடுமையான சரிவு ஏற்பட்டிருப்பதை உணர்த்திஉள்ளது. ஏப்ரல் மாதத்தில், உற்பத்தியும் தேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உலக அளவில், பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கும் நிலையில், புதிய ஆர்டர்கள், கடந்த இரண்டரை ஆண்டுகளில் இல்லாத வகையில், முதன் முறையாக, கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
மேலும், ஏற்றுமதி ஆர்டர்கள் எண்ணிக்கையும், 2017 அக்டோபருக்கு பிறகு சரிவைக் கண்டுள்ளது.தேவையில் மிகப் பெரும் சரிவு ஏற்பட்டதை அடுத்து, உற்பத்தி, புதிய ஆர்டர்கள், வேலைவாய்ப்பு ஆகியவற்றில், இதுவரை இல்லாத வகையில் சரிவு ஏற்பட்டுஇருக்கிறது.
வினியோக சிக்கல்
இந்த ஆய்வு துவங்கி, 15 ஆண்டுகளில் காணாத வினியோக சிக்கல்களும், டெலிவரி தாமதங்களும் இந்த மதிப்பீட்டு மாதத்தில் ஏற்பட்டுள்ளன.தயாரிப்பாளர்களும், சப்ளையர் களும், ஆர்டர்களை தக்க வைத்துக் கொள்வதற்காக, தள்ளுபடி வழங்கியதை அடுத்து, உள்ளீட்டு பொருட்கள் விலை மற்றும் உற்பத்தி விலை குறைந்தது.நோய் தொற்று மறைந்து, தடைகள் விலக்கப்பட்டால் தான் தேவையில் உயர்வு ஏற்படும்.இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|