பதிவு செய்த நாள்
12 மே2020
10:41
வாசகர் கடிதங்களின் பாராட்டுகளும், கேள்விகளும் இந்த தொடரை மெருகேற்றிக் கொண்டிருப்பதால், முதலில் அவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. ‘இன்னமும் விரிவாக, நிறைய உண்மைக் கதைகளுடன் எழுதுங்களேன்...’ என்ற யோசனையை ஏற்று, ரத்தினச் சுருக்கமாக எழுதியதையும், இன்னமும் விரிவான வழிமுறைகளுடன் தொடர்கிறேன்.
மீண்டும் சொல்கிறேன். செல்வம் சேர, எண்ணம் மாற வேண்டும். அதனால் தான், இதை பொருளாதார விஷயமாக மட்டும் பார்க்காமல், உளவியல் ரீதியாக பார்ப்பது அவசியம் ஆகிறது. அதனால் தான், நிதி அறிவு மட்டுமே உள்ள பலர், செல்வந்தர் ஆக முடிவதில்லை. பொருளாதாரத்தை மெத்த படிப்பதாலோ, முதலீட்டு அறிவு மிகுந்து இருப்பதனால் மட்டுமே, ஒருவர் செல்வந்தர் ஆகிவிட முடியாது.கண்டிப்பாக, அவை மறுக்க இயலாத பலங்கள். ஆனால், அதைவிட முக்கியம், பணம் பற்றிய எண்ணங்களும், பணம் சம்பந்தப்பட்ட முடிவு எடுக்கும் திறன்களும், செல்வம் சேர வாழ்வில் உள்ள அடிப்படை பழக்கவழக்கங்களும் தான். சம்பந்தப்பட்ட துறை அறிவு இல்லாவிட்டாலும், பரந்த மனம் இருந்தால், ஆலோசனை கேட்டு பிழைத்துக் கொள்ளலாம். ஆனால், எல்லாம் தெரிந்தும் சரியான முடிவுகள் எடுக்கத் தவறினால், அது செல்வம் சேர்ப்பதை தடுக்கும்.
நம்பிக்கை
உலகின் மிகப் பெரிய முதலீட்டாளர் மற்றும் செல்வந்தரான வாரன் பபெட்டின் வெற்றியின் ரகசியமும் இது தான். பயத்திற்கும், பேராசைக்கும் உட்படாமல், பணம் சம்பாதிப்பதை, ஒரு ஆன்மீக தேடல் போல, ஸ்திர மனதுடன் மேற்கொண்டவர் அவர். சம்பாதித்த செல்வம், அவர் வாழ்க்கை முறையை இம்மியளவும் மாற்றவில்லை. தினசரி, 4 மணி நேர வாசிப்பு குறையவில்லை. ஆடம்பரத்தை விட, குடும்ப நேரத்தை பேணும் குணம் மாறவில்லை. சரியான ஆட்களிடம், தன் தொழிலையும், செல்வத்தையும் நிர்வாகம் செய்யச் சொல்லி ஒப்படைத்து விட்டு, அவர்கள் தினசரி நடவடிக்கைகளில் தலையிடாது இருப்பது அவர் பலம். தன் சொத்தின் பெரும் பகுதியை கொடையாய் தந்ததும் இல்லாமல் பில்கேட்ஸ், மார்க் சக்கம்பர்க் போன்ற பெரும் செல்வந்தர்களை, தன்னைப் போலவே கொடை அளிக்கச் செய்தவர்.பணம் பெருக்கும் வித்தையை மிகச் சிறிய வயதிலேயே கற்றுக் கொண்டவர். பங்கு சந்தை எப்படி நடந்து கொள்ளும் என்ற நெளிவு சுளிவுகளை முழுதும் அறிந்தவர்; இருப்பினும், மிகுந்த பாதுகாப்பு உணர்வுடன் நெடுங்காலத் திட்டங்களில் மட்டும் நம்பிக்கை கொண்டவர்.அடிப்படை ஒழுக்கத்தையும், மன திடத்தையும் திரும்ப திரும்ப வலியுறுத்தியவர். இச்சை பொறுத்தல் செல்வத்தை பெருக்கும்; அவசரத்தனம் பணத்தை அழிக்கும் என்ற சந்தை உளவியலை உணர்ந்தவர். பங்கு சந்தை பற்றி, ஆயிரம் புத்தகங்கள் வந்தாலும், வாரன் பபெட் கடைப்பிடித்த அடிப்படை பண்புகளும், வளர்த்துக் கொண்ட திறன்களும், எடுத்த முக்கிய முடிவுகளும் படிக்க வேண்டிய பாடங்கள்.
முதிர்ந்த மனதின் அறிகுறி
பங்கு மார்க்கெட் டிரேடிங் செய்யும் நண்பர் பேசிக்கொண்டிருந்தார்: ‘இந்த தொழில் கற்றுக்கொள்வது சுலபம் சார். மார்க்கெட்டை கணித்து ஏற்ற, இறக்கங்கள் தெரிந்து முதலீடு செய்வதும், வெளியேறுவதும் தான் முக்கிய முடிவுகள். லாபம் போதும் என்று ஒரு கட்டத்தில் விலகத் தெரிவது அதிமுக்கியம்.இது புரியாமல், அதன் இழுப்பிற்கு செல்பவர்கள் பலர் பணத்தை இழக்கின்றனர்...’ என்று! இது எப்படி என்றால், தட்டு நிறைய முந்திரி பருப்புகள் உள்ள போது, இரண்டை மட்டும் எடுத்து வாயில் போட்டு விட்டு, ‘போதும்...’ என்று சொல்வது போல. ஆனால், அந்த மனக் கட்டுப்பாடு உள்ளவர்கள் தான், பெரிதாக சாதிக்கின்றனர்.
உடனே சுகிக்க வேண்டும் என்ற உணர்வை, தள்ளுபடி செய்து காத்திருத்தல், முதிர்ந்த மனதின் அறிகுறி. இதை ஆங்கிலத்தில், delay of gratification என்று சொல்வர். இந்த உணர்வு முதிர்ச்சியை தான், நெடுநாள் வெற்றிக்கான முக்கிய காரணமாகச் சொல்கின்றனர், உளவியல் ஆய்வாளர்கள்.
சுய கட்டுப்பாடு
இது தான் சுய கட்டுப்பாட்டை வளர்க்கிறது. ஒரு வருங்கால இன்பத்திற்கு, நிகழ்கால துன்பத்தை வலிய மேற்கொள்ள வைக்கும் பக்குவத்தை கொடுக்கிறது.தொடர்ந்து ஒரு செயலை செய்ய நிறைய மனோதிடம் வேண்டும். காலந்தவறாமல் ஒருவர் ஒரு செயலை செய்கிறார் என்றால், அங்கு ஒரு சுய கட்டுப்பாட்டை நீங்கள் பார்க்கலாம். ஒரு விளையாட்டு வீரருக்கு கிடைக்கும் புகழும், பணமும் எல்லார் கண்களுக்கும் சுலபமாகத் தெரியும்; ஆனால், எத்தனை காலம் அதற்கு அவர் பயிற்சி எடுத்திருப்பார், எத்தனை வலிகளை, தோல்விகளை அவர் தாங்கியிருப்பார் என்று ஆராய்ந்தால், ஒரு சுய கட்டுப்பாடு தெரியும்.
இந்த சுய கட்டுப்பாட்டை வளர்க்காமல், தொடர்ந்து வெற்றி பெற இயலாது. என்னிடம் ஆலோசனை பெற வந்த ஒரு பெண், தன் தந்தை தொழிலில் பட்ட நஷ்டங்களை விரிவாகப் பட்டியல் போட்டார். செலவுகள் பற்றி பேச்சு வருகையில் சொன்னார்: ‘என்ன கஷ்டம்னாலும் ஓட்டலுக்கு போறதையோ, வீட்டுக்கு ஸ்வீட்ஸ், காரம் வாங்கறதையோ நாங்க நிறுத்தியதில்லை சார். தின்னு கெட்ட குடும்பம்னே எங்களுக்கு பேரு உண்டு...’ என்றார்.
நெடுங்கால திட்டம்
புலனடக்கமும், பொறுமையும் தொழிலுக்கு மிக அவசியம். சொகுசுத்தனங்களை விட்டுக் கொடுக்காத இடத்தில், எந்த நெடுங்காலத் திட்டமும் இருக்காது. குறுகிய காலத் திட்டங்கள் தான், குறுக்கு வழிகளில் கொண்டு சேர்ப்பவை. எதையும் உடனே செய்து முடிக்க வேண்டும் என்பதை விட, சிறப்பாக செய்து முடிக்க வேண்டும் என்று எண்ணுங்கள். உங்கள் திட்டத்திற்கான நேரத்தையும், உழைப்பையும் உங்கள் நெடுங்காலத் திட்டம் நிர்ணயம் செய்யட்டும்.
‘இளமையில் சேர்’
நெடுங்காலத் திட்டம் பற்றி ஒரு முறை பேசுகையில், ஒருவர் எழுந்து கேட்டார். ‘ஓய்வு பெற ஓராண்டு தான் உள்ளது; இனி, எப்படி நீண்ட கால நிதி திட்டம் தீட்டுவது?’ என்றார்.அவர் நியாயம் புரிந்தது. செல்வம் சேர்க்க சொல்லித்தர வேண்டிய பருவம், ஓய்வு காலத்தில் அல்ல; பள்ளி பருவத்தில்.‘இளமையில் கல்’ என்பதை போல, ‘இளமையில் சேர்’ என்றும், நம் பிளைகளுக்கு சொல்லித்தர வேண்டியது நம் கடமை!
டாக்டர் ஆர். கார்த்திகேயன்
கட்டுரையாளர்,
உளவியல் மற்றும் நிர்வாக ஆலோசகர்,
gemba.karthikeyan@gmail.com
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|